சென்னை,ஆக.20- சென்னையில், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில்ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது.ஓட்டுநர் இல்லாத 62 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் சிறீசிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்டஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட வழித்தடத்தில்ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட முதல் ரெயில் செப்டம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாகவும், பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரத்யேக இடங்களும் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். ஒரு ரெயிலில் ஆயிரம் பேர் வரையில் பயணம் செய்யலாம்.அந்த வகையில் இடவசதியுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-ஆவது வழித் தடத்தில் பூந்தமல்லி – கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்டப் பாதையில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.