நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஜாதி குறித்து பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய கருத்து புயலை எழுப்பியது. ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சன்யாவின் சமீபத்திய இதழ் ஜாதி அமைப்பையே நியாயப்படுத்தி எழுதியுள்ளது.
’ஜாதி அமைப்பே இந்திய சமூகத்தினை “ஒருங்கிணைக்கும் காரணி”. முகலாயர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஜாதி அமைப்பு என்பது இந்தியாவின் பல்வேறு வகுப் பினரை அவர்களின் தொழில் மற்றும் பாரம்பரியத்தின் படி வகைப்படுத்திய பின் ஒன்றாக வைத்திருந்தது. தொழில் புரட்சிக்குப் பிறகு, முதலாளிகள் ஜாதி அமைப்பை இந்தியாவின் காவலராகப் பார்த்தார்கள்’, என்று பாஞ்சன்யா வார இதழின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர் தலையங்கத்தில் கூறியுள்ளார்.
’ஜாதி அமைப்பு எப்போதும் படையெடுப்பாளர்களின் இலக்காக இருந்தது.
முகலாயர்கள் அதை வாளின் சக்தியாலும் கிறித்துவ மிஷனரிகள் சீர்திருத்தம் என்ற போர்வையிலும் குறிவைத்தனர். ஜாதியின் உருவாக்கத்தில் – ஒருவரின் ஜாதிக்குத் துரோகம் செய்வது தேசத் துரோகம், என்பதை இந்திய சமூகம் புரிந்துகொண்டது.
முகலாயர்களை விட கிறித்துவ மிஷனரிகள் இந்தியாவின் இந்த ஒருங்கிணைந்த சமன்பாட்டை நன்கு புரிந்து கொண்டனர்: இந்தியாவும் அதன் சுயமரியாதையும் உடைக்கப்பட வேண்டும் என்றால், ஜாதி அமைப்பின் ஒருங்கிணைக்கும் காரணியை உடைக்க வேண்டும் என்று கருதினர்.
கிறித்துவ மிஷனரிகளால் ஜாதி அமைப்பு பற்றிய இந்த புரிதல் – ஆங்கிலேயர்களால் அவர்களின் ‘‘பிளவு படுத்தும் கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது’’ என்று ஆர்.எஸ்.எஸ். ஏடு எழுதியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஜாதிப் பாகுபாடு என்பது இந்திய சமூகத்தின் சாபக்கேடு என்றும், அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். சங்க பரிவார்கள் தங்கள் சக ஊழியர்களின் ஜாதிகள் தெரியாது என்று பெருமை கொள்கிறார்கள். கடந்த ஆண்டு, பகவத், 2,000 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட ஜாதியினர் அனுபவித்து வரும் பாகுபாட்டை ஈடுசெய்ய இன்னும் 200 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்றால், அதற்கு ஆதரவளிப்பேன் என்றார். (7.9.2023) (மாறி மாறி பேசக் கூடியவர்தான் இவர்).
வங்காள நெசவாளர்கள் போன்ற இந்திய கைவினைஞர்களின் – ஜாதிக் குழுவின் திறன்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு அனுப்பப் பட்டன. மான்செஸ்டரின் ஆலைகளால் அத்தகைய சிறந்த தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ஆசுிரியர் சங்கர் வாதிடுகிறார்.
‘‘இந்தியாவின் தொழில்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், படையெடுப்பாளர்கள் இந்தி யாவின் அடையாளத்தை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தினர். ஜாதிக் குழுக்கள் வளைந்து கொடுக்காதபோது அவர்கள் அவமானப் படுத்தப்பட்டனர். மனித மலத்தை தலையில் சுமக்கும் பெருமைக்குரிய சமூகத்தை நிர்ப்பந்தித்தவர்கள் இவர்கள்.
இதுபோன்று அதற்கு முன் இந்தியாவில் இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை. பாரம்பரியமான இந்தியாவின் தலைமுறைத் திறமையைக் கண்டு வலிக்கும் அந்த கண்கள் தான் – இந்து மதத்தின் பன்முகத்தன்மையையும், மரபுகளையும், சடங்குகளையும் அழிக்கும் கனவுகளையும் கண்டன.
கண்ணியம், ஒழுக்கம், பொறுப்பு மற்றும் வகுப்பு வாத சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து வாழ்க்கை ஜாதியைச் சுற்றியே உள்ளது.
இது தனிமனிதனை மய்யமாக கொண்ட மிஷனரிகளால் கொண்ட புரிந்துகொள்ள முடியாத ஒன்று. மிஷனரிகள் தங்கள் மதமாற்றத் திட்டத்திற்கு ஜாதியைத் தடையாகப் பார்த்தார்கள்.
ஆங்கிலேயர்களின் வழியில், நாடாளுமன்ற தொகுதிகளை ஜாதி அடிப்படையில் பிரித்து, நாட்டில் பிளவை அதிகரிக்க விரும்புகிறது காங்கிரஸ். அதனால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை அது விரும்புகிறது’’ என்று ஆர்.எஸ்.எஸ். இதழ் எழுதுகிறது.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை பா.ஜ.க. வெளிப் படையாக எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாதி இருக்கலாம். ஆனால் ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கக் கூடாது என்பதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.சின் தந்திரமான நிலைப்பாடு.
ஜாதி கணக்கை எடுத்தால் கல்வி நிலை, பொருளாதார நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் அம்பலத்துக்கு வந்து விடுமே! அப்படி அம்பலத்துக்கு வந்தால், ஆதிக்கபுரியை நோக்கி வெகு மக்களின் கிளர்ச்சி வெடிக்குமே என்ற அச்சம்தான் – ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பாக இருப்பதன் சூட்சமம்!