கிருட்டினகிரி, ஆக. 19- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணியம்மை கூட்டரங்கத்தில் 15.08.2024 மாலை 3.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப்பேசினார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்கு மாவட்ட துணைச்செயலாளர் சி.சீனிவாசன், மாவட்டத் துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் கடவுள்மறுப்பு கூறினார். பகுத்தறிவாளர் கழக மாநில துணைப்பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன் கருத்துரையாற்றினார்.
திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் கும்பகோணம் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளை தீர்மானமான திருச்சி சிறுகனூர் “பெரியார் உலகம்” நிதி வசூல் பணிகள் குறித்தும், கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் செயலாற்ற வேண்டிய களப்பணிகளை விரிவாக எடுத்துக் கூறி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கனவுத் திட்டமான “பெரியார் உலகம்” பெரும்பணிக்கு பெருங்கொடையாளர்களையும் தமிழின பெருமக்களையும் அணுகி கிருட்டினகிரி மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதிகளை பெரும் அளவில் திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்க வேண்டும். தமிழர் தலைவர் தலைமையில் பெரியாரின் பெரும் பணியை முடிப்போம் என்று எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
கடந்த ஜூலை 11/07/2024 முதல் 15/07/2024- வரை அய்ந்து நாட்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணக் குழுவில் பங்கேற்ற ச.அகரன் அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, தலைமை கழகம் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் சிறப்பித்தனர். கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர் மு. இந்திராகாந்தி, மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், ஒன்றியத் தலைவர்கள் கிருட்டினகிரி த.மாது, பர்கூர் மே. மாரப்பன், காவேரிப்பட்டணம் பெ.செல்வம், மத்தூர் கி.முருகேசன், ஒன்றிய செயலாளர் கி.வேலன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா. சிலம்பரசன், மாவட்ட துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மத்தூர் ஒன்றிய மாணவர் கழக ச. அகரன், பெரியார் பிஞ்சு இராவண்யா உள்பட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் கிருட்டினகிரி நகர செயலாளர் அ.கோ.இராசா நன்றி கூறினார்.
கூட்டத்தில், கும்பகோணம் திராவிடர் கழக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட கட்டளை தீர்மானம் திருச்சி சிறுகனூர் “பெரியார் உலகம்” உள்பட அனைத்து தீர்மானங்களையும் ஒரு மனதாக ஏற்று செயல்படுத்துவது எனவும்,
தலைமை கழகம் அறிவித்துள்ளப்படி வருகின்ற 25.08.2024- அன்று கிருட்டினகிரியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51-A(h)பிரிவு விளக்க பரப்புரை திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தை கிருட்டினகிரியில் 25.08.2024-அன்று மாலை 5.00 மணிக்கு கிருட்டினகிரி 5ரோடு இரவுண்டானா அருகில் காந்தி சாலையில் மிகுந்த எழுச்சியுடன் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், அதேபோல் 29.08.2024- அன்று ஊற்றங்கரை ஒன்றியம் நொச்சிப்பட்டியிலும் மிகுந்த எழுச்சியுடன் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும்,
உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று கிருட்டினகிரி மாவட்டம் முழுவதும் கிளை கழகம் தோறும் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி பட்டி தொட்டி எங்கும் திராவிடர் இன எழுச்சி தமிழர் மறுமலர்ச்சி நாளாக மிகுந்த எழுச்சியுடன் பெரியார் சிலைகளுக்கும் படத்திற்கும் மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடுவது எனவும்,
கடந்த ஜூலை 14 அன்று கிருட்டினகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பிரச்சார பயணக் குழுவினரை வரவேற்று சிறப்பித்த கிருட்டினகிரி, மத்தூர், ஊற்றங்கரை ஒன்றியங்களில் சிறப்பாக வரவேற்பு வழங்கிய நிர்வாகிகளுக்கும் தோழர்களுக்கும் ஆதரவு அளித்த அனைத்து அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் மிருந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது எனவும், சென்னை பெரியார் திடலில் தொடங்கிய நீட் தேர்வு ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பரப்புரையில் பங்கேற்ற மத்தூர் தோழர் ச. அகரன், ஊற்றங்கரை கோ. சரவணன் ஆகியோருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் இம்மாவட்ட கூட்டம் தெரிவித்து மகிழ்கிறது எனவும்,
கிருட்டினகிரி சுயமரியாதை சுடரொளி ஜி.வி.வெங்கட்டராமன் அவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பெரியார் நூல்கள் குடிஅரசு தொகுதி 1-முதல் 27-தொகுதி வரை இன்னும் சில நூல்கள் உள்பட 47 நூல்களை அவரது மகன் பொறியாளர் வெ.சின்னதம்பி கிருட்டினகிரி மய்யம் வருகை தந்து மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணியிடம் பெரியார் மய்ய நூலகத்திற்கு நூல்களை வழங்கியதற்கு இம்மாவட்ட கூட்டம் நன்றியை தெரிவித்து கொள்கிறது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.