காற்று மாசை மூலப் பொருளாக்கும் தொழில்நுட்பம்

Viduthalai
1 Min Read

அரசியல்

காற்றில் கலக்கும் மாசுகளை பயனுள்ள பொருட்களாக உருமாற்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. குறிப்பாக, கார்பன் டை ஆக்சைடினை பயனுள்ள வேதிப்பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்றை முன்வைக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ‘டுவெல்வ்’ என்ற புத்திளம் நிறுவனம்.

சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை எடுத்து, அந்த ஆற்றலை வைத்து காற்று மாசுகளிலிருந்து கார்பனை பிரித்தெடுக்கிறது டுவெல்வின் தொழில்நுட்பம். பின் அந்த கார்பனை மூலப் பொருளாக வைத்து பல வகை நடைமுறைப் பொருட்களை செய்ய முடியும்.

உதாரணமாக, ஜெட் விமானங்களுக்கான எரி பொருள், கண் கண்ணாடிக்குத் தேவையான லென்ஸ் போன்றவற்றை தயாரிக்கலாம் என்கிறார் டுவெல்வின் இணை நிறுவனர் நிகோலாஸ் பிலான்டெர்ஸ். காற்று மாசுகளிலிருந்து கார்பனை பிரிப்பது, காற்று மாசின் அளவை மெல்ல மெல்லக் குறைக்கும். தவிர, அதிலிருந்தே எரிபொருளை தயாரிப்பது, பெட்ரோலிய பொருட்களின் தேவையையும் குறைக்கும்.

கடந்த ஆண்டு முதல், இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மெர்சிடிஸ் பென்சுக்கு சில வாகன உதிரிப் பாகங்களை, டுவெல்வ் தயாரித்து தருகிறது. மேலும், ‘புரோக்டர் அண்டு கேம்பிளின், டைடு’ சோப்புத் தூளில் கலப்பதற்குத் தேவையான சில மூலப் பொருட்களையும் டுவெல்வ் உற்பத்தி செய்து கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, ‘ஷெல், ரெப்சோல், சோகால்கேஸ்’ போன்ற நிறுவனங்களுக்கும், காற்று மாசு கார்பனை எடுத்து பயனுள்ள பொருட்களை தயாரித்து தரும் ஆராய்ச்சியை டுவெல்வின் விஞ்ஞானிகள் தொடர்கின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *