சிறீநகர், ஆக.17 ஜம்மு – காஷ்மீருக்கு மூன்று கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் ஜம்மு – காஷ்மீருக்கு தேர்தல் நடைபெற விருக்கிறது. அக்டோபர் 4ஆம் தேதி ஜம்மு – காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் அரியாணா மாநிலங்களுக்கு பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுடில்லியில் நேற்று (16.8.2024) செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார்மற்றும் டாக்டர் சாந்து ஆகியோர் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட்டனர்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஜம்மு – காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரியானாவிற்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 4ஆம் தேதியே அரியானாவிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் தேர்தலில் தங்களது பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். ஜம்மு – காஷ்மீருக்கு விரைந்து தேர்தலை நடத்த வேண்டும் என கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஜம்மு-காஷ்மீரில் 3.71 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் 11,838 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன. சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு – காஷ்மீரில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.