‘‘பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப் பிரச்சாரம்தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை, அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கைகளை வெகு காலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரைவிட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கிறேன். இவருடைய லட்சியங்களில் அநேகம் நம் நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும்கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.’’
4.7.1954இல் வேலூர் நகர மன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து – ஜி.டி. நாயுடு அவர்கள்.
‘விடுதலை’ 12.1.2013
பொது வாழ்க்கையில் ஈடுபட்ட சில ஆண்டுகளிலேயே தந்தை பெரியார் தாழ்ந்த தமிழ்நாடு ஒடுக்கப்பட்டும், சுரண்டப்பட்டும் கிடப்பதையும் அறியாமையிலும், வறுமையிலும் மூழ்கித் தன்மானமின்றித் தவித்த தமிழர்களின் நிலையையும் தமக்கே உரிய நுண்மான் நுழை புலத்தால் அறிந்தார். அவர்களைத் தன்மானத்தோடு தலை நிமிரச் செய்வதே தம் தலையாய பணியாய்க் கொண்டார். அறியாமையை அகற்ற கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்து ஊர்தோறும் பள்ளி, இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி, எல்லோர்க்கும் கல்வி என்றெல்லாம் நாடெங்கும் முழங்கி அவ்வப்போதிருந்த ஆட்சியாளர்களை வேண்டியும், மிரட்டியும் பள்ளிகளைத் திறக்கச் செய்தார். தொடக்கக் கல்விக்கும் அரை நேரக் கல்வி, ஜாதித் தொழில், என்றெல்லாம் நெருக்கடி நேர்ந்தபோது பெரியார் வன்செயலிலும் இறங்கத் தயங்க மாட்டோம் என அச்சுறுத்தி முழு நேரக் கல்வியை நிலை நாட்டினார்.
பிற்பட்டோர்க்கு உயர் கல்வி குதிரைக் கொம்பாகி வந்ததைக் கண்ட பெரியார் சமூகநீதி, சம வாய்ப்பு என்ற கொள்கைகளின் அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீட்டிற்குப் போராடி உயர் கல்விக்கும் அதன் பிறகு உத்தியோகத்திற்கும் உத்தரவாதம் தர நம்முடைய அரசமைப்புச் சட்டத்தையே திருத்தச் செய்தார். பெரியாரின் கிளர்ச்சி, அரிய முயற்சியின் விளைவாக இந்திய அரசியல் சாசனம் முதல் திருத்தத்தைப் பெற்றது.
தமிழன் மூட நம்பிக்கையால் உழல்வதைக் கண்ட பெரியார் அதற்கும் பரிகாரம் தேடினார். காலரா, அம்மை போன்ற கொள்கை நோய்கள் தாக்குமாயின் மருத்துவமனையும் மருந்தையும் தேடாது அந்நோய்களைத் தாங்கள் செய்த தீவினையின் அதிகாரிகளெனக் கருதிய தேவதைகளை் தொழுதும், மந்திரம் மாயத்தை நம்பியும் நம்மவர் மடிந்து வந்தனர். வறுமையில் வாடியவர்கள் சமுதாய அடித்தட்டில் நெளிந்தவர்கள் தமக்கு மேலிருந்தவர்களின் கொடுமைக்கு ஆளாகித் துடித்தவர்கள் அவைகளுக்கான மூலத்தை ஆராயாது தங்கள் வறுமை, துன்பம் எல்லாம் ஆண்டவன் அமைப்பென அடங்கிக் கிடந்தனர். வறுமையினால் கற்க வாய்ப்பில்லாவிடினும் கற்றும், உயர் உத்தியோகங்களில் இடம் பெற இயலாவிடினும், அவற்றினையும் ஆண்டவன் செயலாகக் கருதி வாளாவிருந்தனர். சூத்திரப் பட்டம் தாங்கி இழிமகனாய் வாழ்வதும் தங்கள் தலையெழுத்து, வலியென நினைத்தார்களேயன்றி இவையெல்லாம் சுயநலக் கும்பலின் திட்டமிட்ட செயலென்றோ, சமுதாய அமைப்பின் கோளாறு என்றோ எண்ணப் போதிய விவரம், தெரியாதவர்களாய், தெரிந்தாலும் பரிகாரந்தேட துணிவும் திராணியம் இல்லாதவர்களாய்த் தமிழ் மண்ணில் வதிந்தார்கள்.
இத்தகைய மூடநம்பிக்கைக்கு, அறியாமைக்கு அடிமை வாழ்விற்கு மூலாதாரமாய் இருப்பது மதமே என்ற பெரியாரின் தெளிந்த இயற்கை அறிவிற்குப் புலப்பட்டதுபோல் காலங் காலமாய் நம் நாட்டில் தோன்றிய அறிஞர்களுக்கு, விடுதலை வீரர்களுக்கு, ஞானிகளுக்கு, மகான்களுக்கு எட்டாதது ஏனோ? அவர்களுக்கு மனிதாபிமானமில்லையா? இருந்தும் சிந்திக்கவில்லையா? சிந்தித்திருந்தால் செயல்படத் தயங்கியதேனோ? நம்மில் பெரும்பாலோரின் இழிநிலைக்கு மதமே காரணம் என ஆராய்ந்தறிந்த பெரியாருக்கு நெடுங்காலமாய் வேரூன்றியிருந்த வைதீக மதத்தை ஆட்டி அசைப்பதன்றி வேறு வழியில்லை. மதவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாது, மதத்திற்கு உட்பொருளாய், அச்சாணியாய் இருந்த கடவுளை மறுக்க வேண்டிய கட்டத்திற்கு வந்தார்.
நாட்டில் தீண்டாமை ஒழிப்பதற்குப் போராடி ஜாதிக் கொடுமையைச் சாடி ஓரளவிற்கு வெற்றியும் கண்டார். சமுதாயப் பொருளாதார ஏற்றத் தாழ்வு அகற்றச் சமதர்மம், பொது உடைமைக் கொள்கையை நம் நாட்டில் முதன் முதல் அறிமுகம் செய்து தீவிரமாய்ப் பரப்பவும் தொடங்கினார். வைதீக திருமண முறை பெண்களின் உரிமைகளுக்கு இடையூறாய் இருப்பதைச் சுட்டிக் காட்டித் திருத்திய தன்மான தமிழ்த் திருமணத்தை நமக்கு அளித்தார். பெண்களுக்கு வாழ்வளிக்க அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னரே குடும்பக் கட்டுப்பாட்டை நம்மிடையே வலியுறுத்தி வந்தார். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து செய்த கிளர்ச்சி, அவர் கொடுத்த முதல் இன்றும் தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஏனைய இந்திய நாடுகளுக்கும் பெரியதோர் அரணாய் அமைந்துள்ளது.
இலக்கியத் துறையில் பழைய இலக்கியங்களை, பகுத்தறிவுக்கு ஒத்து வராதவனவற்றைப் புதிய கண்ணோட்டத்தில் காணவும் விஞ்ஞான அடிப்படையில் புத்திலக்கியங்களை, பரட்சி நூல்களை உருவாக்கவும் பெரியாரின் பிரச்சாரமே வழி வகுத்துள்ளது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு புலவர்களை விழிப்படையச் செய்தவர் பெரியார். நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவிவரும் கருத்துகள் பழக்க வழக்கங்கள் மதிப்பீடுகளைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கும் துணிவு பெரியாரின் புரட்சிச் சிந்தனையால் ஏற்பட்ட மாற்றமாகும். அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த சமுதாய நிலைக்கும் இன்றுள்ள நிலைக்குமுள்ள மாறுபாடு பெரியாரின் செயற்கரிய செயலாய் விளைந்த அற்புதமே ஊர்தோறும் கருத்து மழை பெய்து, தமிழர் நெஞ்சங்களை வளமாக்கி அறிவுப் புரட்சியை உருவாக்கிப் பழைமையை அலற அலற விரட்டியுள்ளார்.
பெரியாருடைய வாழ்க்கையும் அரிய சாதனையும் மனித வரலாற்றில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. தமிழனின் சமுதாய விடுதலைக்காக அவர் ஆற்றிய தன்மானத் தொண்டு உலக விடுதலைப் போராட்டத்தில் நின்று நிலவப் போகும் சிறப்பான பகுதியாகும். பகுத்தறிவு பற்றி அவர் பேசிய பேச்சும் எழுதிய எழுத்தும் உலக முற்போக்கு இலக்கியத்தில் ஓர் அரிய கருவூலமாகத் திகழும். ஜாதி ஒழிப்பிற்கும், மூடநம்பிக்கை ஒழிப்பிற்கும் பெரியார் எழுப்பிய குரல், செய்த கிளர்ச்சி வரலாறு காணாத ஒன்றாகும். தமிழன் தோன்றிய நாள்முதல் இத்தகைய தன்னலம் கருதாத தலைவர், தன்மானத்தோடு நாம் தலை நிமிர்ந்து நிற்க வாழ்வியல் துறை ஒவ்வொன்றிலும் வழிகாட்டி நடத்திச் சென்ற ஈடு இணையில்லாத பெரியாரைக் கண்டதுமில்லை. இனிக் காணப் போவதுமில்லை!