இயக்க மகளிர் சந்திப்பு (27) ஜாதியை ஒழித்த அன்னபுஷ்பம்! -வி.சி.வில்வம்

viduthalai
7 Min Read

“பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?”, எனச் சிலர் கேட்பார்கள். ஜாதி என்பது கட்டடம் அல்ல; இடித்துத் தள்ளுவதற்கு! ஜாதி என்பது பொருளல்ல; உடைத்துப் போடுவதற்கு! ஜாதி மனிதனின் சிந்தனையில் ஊறியது. அதை அறிவைக் கொண்டு மட்டுமே களைய முடியும்! எந்த ஜாதியை ஒழித்தார் எனக் கேட்பவர்கள், ஜாதி ஒழியக் கூடாது என நினைப்பவர்கள். இப்படியான சூழலில் ஜாதியை மற; மனிதனை நினை! என வாழ்ந்து வரும் மேலமெஞ்ஞானபுரம் அன்னபுஷ்பம் அவர்களை இந்த வாரம் நாம் சந்திக்க இருக்கிறோம்!

அம்மா வணக்கம்! தங்களுக்குள் பெரியார் சிந்தனை எப்போது ஏற்பட்டது?

என் பெயர் அன்னபுஷ்பம்.‌ வயது 64. இணையர் பெயர் வில்லி கிரஹாம். வசிப்பது தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம். திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை அவர்கள் எனது அக்கா இணையர். அவர்கள் மூலம் தான் பெரியார் கொள்கை எனக்கு அறிமுகம் ஆனது. கடந்த 34 ஆண்டுகளாக அதுதான் எங்கள் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது!

மேலமெஞ்ஞானபுரம் முழுவதுமே கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதி. தென்காசியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இவ்வூர் இருக்கிறது.‌ மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இயக்கக் கூட்டம் நடைபெறும். கடவுள், மதம், ஜாதி, சிக்கனம், வாழ்வியல், விடுதலை கட்டுரைகள் எனப் பல தலைப்புகளில் பேசுவார்கள். எனது 30 ஆவது வயதில் முதல் கூட்டத்தை நான் எங்கள் வீட்டில் நடத்தினேன். 1991 ஆம் தொடங்கப்பட்ட இந்தக் குடும்பக் கலந்துரையாடல் கூட்டம் 33 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மிகவும் வியப்பாக இருக்கிறதே, இத்தனை ஆண்டுகளாக நடந்து வருகிறதா?

ஆமாம்! திராவிடர் கழகத்தில், இந்தச் சிறு பகுதியில் மட்டும் 20 குடும்பங்கள் வசிக்கிறோம். பெரியார் பிறந்த நாள், நினைவு நாள், மாதாந்திரக் கூட்டங்கள் என அடிக்கடி ஒன்று கூடுவோம். இங்கே பெரியார் படிப்பகமும் உள்ளது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அதைத் திறந்து வைத்தார். எங்கள் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வே அந்தப் படிப்பகத்தில் தான் நடக்கும். அதையும் ஒரு கொள்கைக் கொண்டாட்டமாக நடத்துவோம்! இதுபோன்ற எங்களின் உற்சாகச் செயல்பாடுகள், பெரும் சமூக மாற்றத்தையே கொண்டு வந்தது என்றால் அது மிகையாகாது.

அப்படியா! என்ன மாதிரியான சமூக மாற்றம்? அதுகுறித்துக் கூறுங்களேன்?

எங்கள் ஊரில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட குடியிருப்புகள் தனித்தனியாக இருந்தன. பெயர் சொல்லி அழைப்பது, சுயமரியாதைக் குறைவாய் நடத்துவது என ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பல சிரமங்கள் இருந்தன. இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலர் பெரியார் கருத்துகளை ஏற்றுப் பின்பற்றத் தொடங்கி இருந்தனர். இதன் மூலம் எங்களுக்குள் தோழமை உருவானது. இயல்பாகவே நாங்கள் மாதாந்திர சந்திப்பை நடத்துவதால், அவர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்தோம். ஆக அனைவருமே இணைந்து செயல்பட்டோம். இதையறிந்த எங்கள் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாங்கள் அதற்கு செவிசாய்க்கவில்லை.

அதேநேரம் மாதாந்திரக் கூட்டத்தை நமது ஒடுக்கப்பட்ட தோழர்களின் வீட்டிலும் ஏற்பாடு செய்து, நாங்கள் அங்கு சென்றோம். ஆக பெரியார் கொள்கை எங்களை மேலும் இணைத்தது. இந்நிலையில் எங்கள் மகன் ஜெயசிங்கும் ஒடுக்கப்பட்ட என்று ஹிந்து மதத்தால் தவறாய் சொல்லப்படுகிற தேன்மொழி என்கிற பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கி இருந்தனர். அதையறிந்து மிகச் சிறப்பாகத் திருமணத்தை முடித்து வைத்தோம்.

கடுமையான எதிர்ப்புகள் இருந்திருக்குமே?

ஆமாம்! 20 திராவிடர் கழகக் குடும்பங்களைத் தவிர மற்ற உறவினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாங்கள் எப்படி திருமணத்திற்கு வருவது, நாங்கள் எப்படி உறவுமுறை சொல்லி அழைப்பது? என்றெல்லாம் கேட்டார்கள். நாங்கள் எதுகுறித்தும் கவலைப்படவில்லை. எங்கள் மருமகளை ஊர்வலமாக அழைத்து வந்து, இணையேற்பு விழாவை முடித்தோம். எங்கள் மருமகள் அதாவது தோழர் தேன்மொழி பி.டெக் முடித்து, பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் அனைவரிடமும் மிகச் சிறப்பாகவும், அன்பாகவும் பழகுவதைப் பார்த்த உறவினர்கள் “இது நமது பிள்ளை” என்கிற மனநிலைக்கு வந்துவிட்டனர். இப்போது நாங்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். இது எங்கள் தனிப்பட்ட குடும்பச் செய்தி அல்ல; இதுதான் நம் இயக்கத்தின் வரலாறு! பெரியார் கொள்கைக்குக் கிடைத்திட்ட மதிப்பு!

சுற்றிலும் கிறிஸ்துவக் குடும்பங்கள் என்கிற போது, அதையொட்டியும் எதிர்ப்புகள் வருமே?

ஆமாம் நிறைய வரும்! அதையெல்லாம் கடந்து தான் நாங்கள் நிற்கிறோம். எங்களுக்கு 2 மகன்கள். இருவருக்குமே சுயமரியாதைத் திருமணம் தான் செய்து வைத்துள்ளோம். எங்கள் பிள்ளைகளுக்கு “சர்ச்” என்பதே தெரியாது. உறவினர்கள் வீடுகளில் மதம் சார்ந்து நிறைய விழாக்கள் நடைபெறும். எந்த ஒன்றிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம். நாங்கள் என்றால் திராவிடர் கழகத்தின் 20 குடும்பங்கள் உள்ளடக்கியது.
அனைவரின் சார்பாகவே நான் பேசுகிறேன். பெரியார் பிறந்த நாள், தமிழர் திருநாள் பொங்கல் ஆகிய தினங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். கிராமத்தில் இருந்து அனைவருமே வருவார்கள். நாங்கள் ஜாதி, மதத்திற்கு ஆதரவாக இருப்பதில்லையே தவிர அன்பிலும், பழகும் அணுகுமுறையிலும், உதவிகள் செய்வதிலும் முனைப்புக் காட்டுவோம். வளர்ந்து வரும் சில இளைஞர்கள் தேவலாயம் பக்கம் செல்லாமல், எங்களுடன் இணைந்து நட்பு பாராட்டுவார்கள். அவர்களின் பெற்றோர்களும் அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. அந்தளவிற்கு நமது வாழ்வியல் முறை அவர்களை ஈர்க்கிறது!

இந்தப் பகுதியில் சற்றொப்ப 500 குடும்பங்கள் இருக்கும். அவர்கள் தேவாலய உண்டியலில் காணிக்கை இட, எங்கள் பிள்ளைகள் வீட்டு உண்டியலில் பணம் சேர்ப்பார்கள். அதைக் கொண்டே நிகழ்ச்சிகள் பல செய்வோம். இதேபோன்று வேறொரு உண்டியலில் பணம் சேர்த்த பாக்யலட்சுமி என்பவர் ரூ 14 ஆயிரத்தை, குற்றாலம் பயிற்சி முகாமுக்கு நன்கொடையாக வழங்கினார்.

500 குடும்பங்கள் இருக்கும் பகுதியில், 20 குடும்பங்கள் மட்டும் தேவாலயம் செல்லாமல் இருந்தால் வித்தியாசமாகப் பார்ப்பார்களே?

தொடக்கத்தில் அவ்வாறு இருந்தது. இன்னும் சொன்னால் இளம் வயதில் நான் தேவாலயம் செல்வேன். அங்கு பறை இசையைக் கேட்டால் “சாமி” ஆடுவேன். பேய் வந்துவிட்டதாக எல்லோரும் சொல்வார்கள். எனினும் என் உணர்ச்சிக்கு நரம்பியல் தளர்ச்சியே காரணம் என்பதைப் பின்னாளில் புரிந்துக் கொண்டேன். பொதுவாக ஒரு கிறிஸ்தவர் இறந்துவிட்டால், தேவாலயத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பிறகு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்வார்கள். ஆனால் நாங்கள் நேராக பொது மயானத்திற்குக் கொண்டு செல்வோம். மற்ற எந்தச் சம்பிரதாயமும் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் இவ்வாறு நடந்து கொள்வதால், பாதிரியார்கள் யாரும் எங்கள் வீட்டிற்கு வரமாட்டார்கள்.

நாங்கள் எதையுமே எதிர்மறையாக செய்வதில்லை. மாறாக அனைத்திலுமே அறிவியல் பார்வைதான். தேவாலயம் செல்வதில்லையே தவிர இறப்பிற்குப் பிறகு கண்கொடை செய்வோம், உடல்கொடை செய்வோம். பெரியார் குருதிக் கொடை மூலம் குருதிக்கொடை செய்து வருகிறோம். இதில் மகளிர் பங்கு அதிகம். ஒருமுறை 10 ஆம் வகுப்புத் தேர்வில், நமது இயக்கப் பிள்ளை 467 மதிப்பெண்கள் வாங்கிவிட்டது. சர்ச்சுக்குப் போகும் பிள்ளையைவிட, அதிகம் வாங்கி விட்டதே என ஊரில் பேசிக் கொண்டனர்.

உங்கள் இல்லத் திருமணங்கள்
எப்படி நடைபெறும்?

அதில் என்ன சந்தேகம்? அனைத்துமே சுயமரியாதைத் திருமணம் தான். நாங்கள் எந்த ஒன்றிற்கும் தேவாலயம் செல்வதில்லை. ஒரே ஒரு தேவாலயம் இருந்த எங்கள் பகுதியில், இப்போது 4 வந்துவிட்டன. ஒரே மதம் என்றாலும், பிரிவுகள் உண்டு. ஆனால் மனிதநேயக் கொள்கைகளுக்குப் பிரிவு என்பதே கிடையாது. தொடக்கக் காலங்களில் தேவாலயத்தில் நடைபெறாத திருமணங்களை அவர்கள் ஏற்பதே இல்லை. இப்போது பழகிக் கொண்டார்கள். இங்கே வசிக்கும் 20 குடும்பத்தின் பெண்களுக்கும் தாலி இல்லை. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருமே கொள்கையில் இருக்கிறார்கள். குறிப்பாக ஒற்றுமையாக உதவிக் கொண்டு வாழ்கிறார்கள்.
எனது தங்கை மகள் ஜான்சி ஜெயமலர் இப்பகுதியில் “கவுன்சிலராக” இருக்கிறார். தேர்தலின் போது, “இவர் கடவுள் இல்லை என்பவர், வெற்றி பெற்றால் கோயிலை இடித்துவிடுவார்”, எனப் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் பெருவாரியான மக்கள் தங்கை மகள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெறச் செய்தார்கள். ஆக பெரியார் கொள்கையைப் பின்பற்றுவதில் சிலருக்குச் சில தயக்கம் இருந்தாலும், அதன் மக்கள் செல்வாக்கு

எப்போதும் மங்கிவிடாது!

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியில் இருக்கிறீர்கள். ஆசிரியரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்குமா?
ஆசிரியர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாகத் தென்காசி பகுதிக்கு அவ்வப்போது வருவார்கள். அதிலும் குற்றாலம் பயிற்சிப் பட்டறைக்கு ஆண்டுதோறும் வரும் ஆசிரியர் அவர்களை அவசியம் சந்திந்துவிடுவோம்.

“விடுமுறைக் காலப் பகுத்தறிவுப் பள்ளி”
ஒன்றை நடத்துவதாகக் கேள்விப்பட்டோமே?

ஆமாம்! மே 1 தொடங்கி,‌ 10 ஆம் தேதி வரை நடைபெறும். கல்வி, சுயமுன்னேற்றம், கொள்கை, கலை நிகழ்ச்சிகள் எனப் பல தலைப்புகளில் பேசுவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து உணவு போகும். அய்யா டேவிட் செல்லத்துரை, மருத்துவர்கள் தமிழரசன், அன்பரசன், கவுதமி, ஜான்சி ஜெயமலர், உள்ளிட்டோர் பேசுவார்கள். இப்பயிற்சி 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதேபோல பெரியார் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெறும். அன்று காலை தனி வாகனத்தில் கீழப்பாவூர் செல்வோம். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மதிய விருந்துண்டு வீடு திரும்புவோம். மாலை அவர்கள் எங்கள் ஊருக்கு வருவார்கள். இங்கு இரவு வரை நிகழ்ச்சி முடித்து, இரவு உணவு உண்டு திரும்புவார்கள். பகுத்தறிவுப் பூர்வமான கலை நிகழ்ச்சிகளில் இருபாலரும் நடனம் ஆடுவார்கள். எங்கள் வாழ்நாளுக்கும் கொள்கைத் திருவிழாவே அதுதான்”, என உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார் அன்னபுஷ்பம்.‌

(குறிப்பு: குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி முகாம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே நேர்காணல் நடந்தது. அப்போது ஆசிரியர் அவர்கள் திடீரென அரங்கத்திற்குள் வருகிறார். உடனே பேட்டியைப் பாதியில் முடித்துக் கொண்ட அன்னபுஷ்பம், ஆசிரியர் வகுப்பைக் கேட்கப் போகிறேன், பிறகு பார்க்கலாம் என நடந்து செல்லவில்லை; ஓடிப் போய்விட்டார். 30 வயது உள்ளவர்களுக்கே முன்னுரிமை என்றாலும், 64 வயதுள்ள நானும் “ஆசிரியருக்கு” மாணவிதான் என நிரூபித்து விட்டார். வகுப்புகள் முடிந்ததும், “அம்மா, மீதிப் பேட்டியை எடுக்கலாமா?”, என்று கேட்டேன். நாளை காலை மேலமெஞ்ஞானபுரம் வாருங்கள், ஊரையும் பார்த்த மாதிரி இருக்கும்; பேட்டியையும் முடித்த மாதிரி இருக்கும் என்றார். பெரியாரிஸ்டுனா சும்மாவா!)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *