பாலியல் வன்கொடுமையாளருக்கா? மமதையில் மிதக்கும் மனுதர்ம ஆட்சி !- பாணன்
2013ஆம் ஆண்டு புதுடில்லி நிர்பயா(உண்மையான பெயர் அல்ல) பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு அதைவிடக் கொடுமையாக கொடூரமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.
ஜம்மூ – காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கோவிலில் வைத்து ஒருவாரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.
2020ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சென்று கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து – ஒரு கண்ணைச் சிதைத்து – நாக்கை வெட்டி – முதுகை கோடாரியால் துண்டாக்கி கொன்றுள்ளனர். இதைச் செய்தவர்கள் உயர்ஜாதியினர். குற்றவாளிகளை தப்ப விடுவதற்காக காவல்துறையும் மருத்துவமனையும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனை செய்ய 24 மணி நேரம் காலம் தாழ்த்தினர். இதனிடையே நீதிபதியிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்தார். ஆனால் பின்னர் மரணமடைந்தார்.
பெண்ணின் உடலை பெற்றோருக்குகூட காண் பிக்காமல் அவரது ஊரின் அருகில் உள்ள குப்பை மேட்டில் நள்ளிரவில் காவலர்கள் துணையுடன் எரித்துவிட்டனர். இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்தனர்.
ஆனால், கப்பான் என்ற கேரள ஊடகவியலாளர் மீது தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை வைத்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவரின் வீட்டையே முற்றுகையிட்டு தங்கள் மீது புகார் அளிக்கவோ வாக்குமூலம் கொடுக்கவோ கூடாது என்று மிரட்டினார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைப் பார்க்கச் சென்ற ராகுல்காந்தியை உத்தரப் பிரதேச காவல்துறை தள்ளிவிட்டு அவமானப்படுத்தியது.
அதேபோல், பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை அள்ளி நாட்டிற்குப் பெருமை சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியில் மோசமாக நடந்துகொண்டதாக மல்யுத்த சம்மேளனத்தலைவர் பிரிஜ்பூஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.
அவரை கைதுசெய்யவேண்டும் என்று ஓராண்டாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.
ஆனால், மோடியோ குற்றவாளியான பிரிஜ்பூஷன் சிங்கை காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்தார்.
மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த அவரை பெயரளவிற்கு அதிலிருந்து நீக்கி அவரது உதவியாளரையே மல்யுத்த சம்மேளனத் தலைவராக நியமித்தார்கள்.
அதுமட்டுமல்ல பிரிஜ்பூஷன் சிங்கின் மகனுக்கு காஷ்கஞ்ச் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து அவரது வெற்றிக்காக மோடி நேரடியாகவே உத்தரவிட்டுக்கொண்டு இருந்தார்.
தேர்தல் நேரத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான கருநாடகாவின் ஜனதா தளக் கட்சியின் முக்கிய தலைவரின் மகனுக்காக மோடியே ஹசன் தொகுதியில் பரப்புரை செய்தார்.
கருநாடகாவில் இந்த பிரிஜ்வல் ரேவண்ணா பலநூறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காட்சிப் பதிவுகள் தேர்தல் நேரத்தில் எங்கும் பரவிக்கிடந்தது.
இவ்வளவு கொடூரமான குற்றங்களைச் செய்தும் அவரை வெளிநாடு தப்பவிட்டு விட்டு தேர்தல் முடிந்த பிறகு அவர் மீண்டும் இங்கு வந்தார். அவர் தொடர்பான வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பாதிக்கப்பட்டப் பெண்களை பிரிஜ்வல் ரேவண்ணாவின் ஆட்கள் மிரட்டி வருவதாக கன்னட நாளிதழ்களில் செய்திகள் வந்தது.
ஒன்றியத்தில் மோடி இருக்கும் வரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
அதுபோல் ஹத்ரசில் 127 உயிர்கள் பலியான நிகழ்விற்குக் காரணமான சாமியார் பாபா இன்றுவரை கைதாகவில்லை. 127 பேரில் 108 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சாட்சியாக இருந்த நபரையும் கொலை செய்த இரண்டு குற்றத்திற்கும் இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்றவர் குருமீத் ராம் ரகீம் என்ற ஹைடெக் சாமியார்.
உலகம் முழுவதிலும் இவருக்கு இருக்கும் சொத்துக்கள் கணக்கில் அடங்காதது. ராம் ரஹீம் மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
சரியாக அரியானா தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில் அவர் வெளியே வந்துள்ளார். ரோஹ்டாக்கின் சுனாரியா சிறையில் இருந்து 13.08.2024 அன்று அதிகாலை அவர் வெளியே வந்த போது முன்னும் பின்னும் 24 வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
25 ஆகஸ்டு, 2017 தொடக்கம், ராம் ரஹீம் இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இதில் ஒருவர் சிறுமி. இதுதொடர்பான சாட்சிகளையும் ஒரு ஊடகவியலாளரையும் கொலை செய்தார். இதற்காக இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
குறிப்பாக அரியானா தேர்தல் வரப்போகிறது என்றாலே இவர் பரோலில் வரப்போகிறார் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 6 ஆண்டுகளில் சிறையில் இருந்த காலம் வெறும் 200 நாட்கள் மட்டுமே. மற்ற நாட்கள் எல்லாம் அவர் வெளியில் தான் – அரசே முழு மரியாதையோடு அவரை அனுப்பி வைக்கிறது.
இவருக்கு சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கிய அன்று இவரே செட் அப் செய்த ஆட்களால் 2017 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையில் 36 பேர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தபோதும், அரியானா அரசு அவருக்கு நல்ல செயல்பாட்டிற்கான சான்றிதழ் வழங்கி காவல் இல்லாத பிணை வழங்கி வருகிறது
இவருக்கு பிணை வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரியானா – பஞ்சாப் உயர்நீதிமன்றம், கூறியதாவது, “மாநில அரசு அனைத்து மக்களையும் சமமாக பாவிக்கவேண்டும், குற்றவாளிக்கு பிணை வழங்கும் முன் அவரது நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் அவருக்கு பிணை வழங்கலாமென்று” கூறியுள்ளது. இதையே சாக்காக வைத்து, அரியானாவில் உள்ள பாஜக அரசு, தொடந்து பிணை வழங்கி வருகிறது
அயோத்தியில் ராமன் கோயில் ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்ச்சிக்கு மூன்று நாட்கள் முன்பு, ஜனவரி 19 அன்று, அரியானா அரசு ராம் ரஹீமுக்கு 50 நாட்கள் பரோல் வழங்கியது. வெளியே வந்த அவர் ராமன் கோவில் திறப்பை தீபாவளிபோல் கொண்டாடுங்கள் என்று அறிக்கை விட்டார்.
அரியானா அரசு இவரை அடிக்கடி விடுவிக்கவேண்டும் என்பதற்காகவே அரியானா நன்னடத்தைக் கைதிகள் (தற்காலிக விடுதலை) சட்டம், 2022அய் கொண்டு வந்தது
சட்டத்தின்படி, ஒரு குற்றவாளி ஓர் ஆண்டில் அதிகபட்சம் 10 வாரங்கள் (70 நாட்கள்) பிணை வழங்கலாம்
ஒரு குற்றவாளி பரோல் அல்லது சொந்த விடுமுறைக்காக சிறைக் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிப்பார். அதனை பல கட்டங்களில் பரிசீலனைக்கு எடுத்த பிறகு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கவேண்டும்.
ராம் ரஹீம் தலைமையில், இயங்கும் தேரா சச்சா அமைப்பு குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு நிதி மற்றும் தொடர் ஆதரவளித்து வருகிறது.
2014ஆம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தேரா சச்சா அமைப்பு பாரதிய ஜனதா கட்சிக்கு பொது ஆதரவு வழங்கியது, மேலும் அக்கட்சி மாநிலத்தில் முதல்முறையாக பெரும்பான்மை அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி – குற்றவாளி ராம் ரகிமின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது அமைப்பு குறித்து தொடர்ந்து பாராட்டு மழையைப் பொழிந்தே வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல், வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக, அப்போதைய அரியானா பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கீயா, மற்றும் 40 பாஜக வேட்பாளர்களுடன் ராம் ரஹீமின் ஆசீர்வாதத்தைப் பெற தனி மேடையே அமைத்து பாலியல் குற்றவாளி ராம் ரகீமை சிறப்பித்தனர் ஆட்சி அமைத்த பிறகும், விஜய்வர்கீயாவுடன் ஒன்றாக ராம் ரஹீமைச் சந்தித்து அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.
இப்படி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிக்கு பாஜக மேலிடமே வலிந்துசென்று அனைத்து ஆதரவையும் தருகிறது, அவருக்கு சிறையில் அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து சிறையையே அவரது சொகுசு மாளிகையாக மாற்றிவிட்டது.
நாட்டில் தொடர்ந்து பாலியல்வன்கொடுமைகள் தொடர்வதற்கு காரணம் எது செய்தாலும் ஒன்றியத்தில் உள்ள அரசு ராம் ரகீமிற்கு செய்யும் சலுகைகளைப் போன்று தனக்கு செய்யும் என்ற கண்ணோட்டத்தில் குற்றங்களைச் செய்யத் துணிகின்றனர்.
இந்த முறை ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள சிறையில் இருக்கும் ஆசாராம் பாபுவிற்கும் ராஜஸ்தான் பாஜக அரசு பிணை வழங்கி உள்ளது.
காங்கிரஸ் தலைமையில் இருந்த மேனாள் ராஜஸ்தான் அரசிடம் பிணை வழங்க கோரி பலமுறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் வெளியில் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற காவல்துறை அறிக்கையின்படி அவருக்கு பிணை வழங்காமல் இருந்தது, ஆனால், ராஜஸ்தானின் மீண்டும் பாஜக ஆட்சி வந்த பிறகு அவருக்கும் பிணை வழங்கப்பட்டது. இதுதான் பாஜக பெண்களுக்கு அளிக்கும் வெகுமதி.