இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டத்தைச் சிறப்பாக நடத்துவோம்
மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
திருவண்ணாமலை, ஆக. 16- திருவண்ணாமலை மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 15.8.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு மாவட்டத்தலைவர்சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பொதுக்குழு கூட்டத்தின் முடிவுகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் பெற்றிருக்கும் பலன்களை விளக்கியும் தொடக்கவுரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் மு.க.இராம்குமார், பெரியார் பெருந்தொண்டர் கு.பஞ்சாட்சரம், மாவட்ட ப.க.தலைவர் வெங்கட்ராமன், மாநகர கழக செயலாளர் மா.தேவராசன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் க.சங்கர், ப.க.பொறுப்பாளர் இராசேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கழகப்பணிகளில் அனைவரையும் ஒன்றிணைத்து களப்பணியாற்றும் மாவட்டத்தலைவர் சி.மூர்த்திக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக சார்பில் நா.கமலக்கண்ணன் பயனாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
திருச்சியில் கழகம் நடத்திய மந்திரமா, தந்திரமா? பயிற்சி முகாமில் பயிற்சிபெற்று மேஜிக் நிகழ்ச்சி நடத்திவரும் மாவட்டத்தலைவர் வெங்கட்ராமனுக்கு பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், 4.8.2024 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற கழக பொதுக்குழுவின் தீர்மானங்களை வரவேற்பதுடன்,செயலாக்குவது எனவும், தலைமைக்கழக அறிவிப்பின்படி மூடநம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்) பிரிவு விளக்க பொதுக்கூட்டம் தச்சம்பட்டு கிளைக் கழகத்தில் நடத்துவது எனவும், சுயமரியாதைச்சுடரொளி ப.நீலகண்டன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜூவைக் கொண்டு திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், 108 கோடி செலவில் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டித்தருவதெனவும், அறிவாசான் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பேச்சுப் பேட்டியினை சிறப்பாக நடத்துவதெனவும், நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணக்குழுவினரை வரவேற்று அனைத்துவகை உதவியினையும்செய்து தந்த அனைவருக்கும் மாவட்ட கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது எனவும், திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கும் மாவட்ட திராவிடர் கழகம். நன்றியை தெரிவித்துக்கொள்கிறது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.