பாரீஸ் நகரில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக்கில் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்திற்குக் கிடைத்த இடம் 71.
போட்டியில் கலந்து கொள்ள சென்ற இந்திய இருபால் வீரர்களின் எண்ணிக்கையோ 117.
இருந்தும் பயன் என்ன? ஒரு தங்கம் கூடக் கிடைக்கப் பெறவில்லை. ஒரே ஒரு வெள்ளி, வெண்கலம் எனப் பெற்ற பதக்கங்கள் ஆறே ஆறு!
கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி, நான்கு வெண்கலம் என ஏழு பதக்கங்கள் கிடைத்தன.
இதில் வேடிக்கை என்னவென்றால் சிறிய சிறிய குட்டி நாடுகளும், தீவுகளும்கூட பதக்கங்களை அள்ளிச் சென்றுள்ளன.
குவாத்தமாலா, டொமினிக்கா, மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி, மெக்சிகோ, ஆர்மினியா கொலம்பியா இவை எல்லாம் சின்னஞ் சிறிய குட்டி நாடுகள்!
கொலம்பியா உள்நாட்டுப் போராலும் குழப்பமான அரசியல் சூழலாலும் 10 ஆண்டுகளாக நெருக்கடியில் உள்ளது. ஆர்மினியா விளையாட்டிற்கு நிதி ஒதுக்கக்கூட இயலாத சூழலில் அந்த நாட்டு வரி வருவாய் – டொமினிக்கா நீண்ட ஆண்டுகளாகவே போதைக் கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கி சீரழிந்துள்ளது.
பாகிஸ்தானைப் பற்றி நாம் அன்றாடம் படிக்கிறோம். இதில் மொராக்கோ மற்றும் துருக்கி, மெக்சிகோ போன்றவை இந்தியாவை விட ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள். ஆனால் இந்த நாடுகள் பதக்கப்பட்டியலில் இந்தியாவைவிட மேன்மையான இடத்தில் உள்ளன.
வெறும் 1.7 கோடி மக்கள் தொகை கொண்ட நெதர்லாந்து – அதாவது டில்லி மக்கள் தொகையில் பாதி. ஒலிம்பிக் தரவரிசை பட்டியலில் 6ஆம் இடம் பிடித்துள்ளது.
ஆக்கும் கடவுள், காக்கும் கடவுள், அழிக்கும் கடவுள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்கள், அட்டதிக்குப் பாலர்கள், கடவுள் அவதாரங்கள் எனப் பல்கிக் கிடக்கும் இந்நாட்டில் – இந்தக் கடவுள்கள் எல்லாம் இந்தியாவுக்குக் கை கொடுக்கவில்லையே!
வெற்றி பெற்றால் எல்லாம் கடவுள் அருள் என்று சொல்லும் வீராதி வீரர்கள், தோல் வியுறும்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
பகவான் தலையில் எழுதிய எழுத்து – அதன்படிதானே நடக்கும் என்று சமாதானம் சொல்லுவார்களோ?
இவர்கள் கைவசம் இருப்பதெல்லாம் தன்னம்பிக்கையல்ல – மூடநம்பிக்கைதான்.
இந்தியாவில் விளையாட்டிலும் ஜாதி உண்டு. இந்தியக் கிரிக்கெட்டைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமோ!
விளையாட்டு மைதானத்துக்குள் நுழையும்போது – மண்ணைத் தொட்டுக் கும்பிடுவது என்ன? ஆகாயத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதென்ன?
இதற்கெல்லாம் மட்டும் குறைச்சல் இல்லை; காரியத்தில் மட்டும் சுன்னம்தான்!
இப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடங்கள் உண்டு; ஆனால் விளையாட்டு மைதானம் இருந்தே தீர வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுத்து அதிக மதிப்பெண் பெறுவதுதான் – தகுதி திறமைக்கு அளவுகோல் என்று வைத்துள்ளது – பச்சையான பார்ப்பனத்தனமே!
விளையாட்டில் சிறந்து விளங்குவதும் ஒரு வகை முக்கிய திறமையே! அதற்கும் மதிப்பெண்கள் உண்டு என்ற நிலையை ஏற்படுத்தினால்தான் ஒலிம்பிக் பதக்கப்பட்டியல் வரிசையில் தலை நிமிர முடியும்.
மோடி ஆட்சியின் புதிய தேசிய கல்வித் திட்டத்திலும் இதற்கான வாய்ப்புகள் கிடையாது. இந்த நிலையில் இந்தியா வல்லரசு ஆகப் போகிறதாம்! சிரிப்புத்தான் வருகிறது.