தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி – அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!

viduthalai
5 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேருரை!

சென்னை, ஆக.15- தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமையை மாநில முதலமைச்சர்களுக்குப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆவார். அந்த வகையில் சுதந்திர நாளில் நாடுமுழுவதும் மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றுகின்ற உரிமை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.8.2024) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர நாள் விழாப் பேருரை ஆற்றினார்.

அவர்தம் உரையில் குறிப்பிட்டதாவது,

விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர், நம் நெஞ்சங்களில் என்றென்றும் நீக்கமற வீற்றிருக்கும் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!

இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம்தான்! மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்பதற்கான போராட்டம்! முத்தமிழறிஞர் கலைஞர் அன்று பெற்றுத்தந்த உரிமையின்படி, அவரது நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டில், இன்று நானும், நான்காவது ஆண்டாக சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பைப் பெற்றமைக்காகப் பெருமை அடைகிறேன். இந்த அருமையான வாய்ப்பை தமிழ்நாட்டின் முதலமைச்சராக கொடியேற்றும் வாய்ப்பை எனக்குத் தந்த எனதருமைத் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குரியவன் ஆவேன்.

நினைவுச் சின்னங்கள்

நம் நாட்டில் விடுதலைக்காக 300 ஆண்டுகளாய் நிகழ்ந்த நெடிய போராட்டங்களில் இன்னுயிர்களை ஈந்தும், உடல் உறுப்புகளை இழந்தும், சொத்து சுகங்கள், மனைவி மக்கள் அனைத்தையும் பறிகொடுத்தும், நம் நாட்டின் விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்த வீரதீரத் தியாக வேங்கைகள் அனைவருக்கும் நம்முடைய நன்றிகளைத் தெரிவிக்கும் அடையாளமாக வீர வணக்கம் செலுத்திடுவோம்! இன்று மட்டுமல்ல; என்றைக்கும் அந்த வீரத் தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களுக்கெல்லாம் சிலைகள், மணிமண்டபங்கள் என நினைவுச் சின்னங்கள் அமைத்துப் போற்றி வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சி சாதனைகள்

சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய அய்ந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான்

திராவிட மாடல் வளர்ச்சி!

கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும்.

புதிய வேலை வாய்ப்புகள்

அதற்கு எடுத்துக்காட்டுதான், ஒன்றிய அரசின் தரவுகளின்படி வெளியான ஒரு புள்ளிவிவரம். அதில். அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில், கடந்த மூன்று ஆண்டுகளில் 77 இலட்சத்து 79 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உங்கள் திராவிட மாடல் அரசால் உருவாகியுள்ளன.

வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதையும் உவகையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நமது திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு தொழிற்துறையில் புதிய பாய்ச்சலைக் கண்டுவருகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

அதற்கு அடையாளமாகத்தான், கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்” முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, 6 இலட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கிறது. இதன் மூலம், 14 இலட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 12 இலட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்க உள்ளது.

அறிவிப்புகள்!

* தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற மேனாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், மேனாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 மேனாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.

* அடுத்ததாக, தியாகிகள் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை இப்போது மகிழ்ச்சியோடு வெளியிட விரும்புகிறேன்.

* மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது, 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கூட, நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான முயற்சியில்தான் என்னை நான் நாள்தோறும் ஈடுபடுத்தி வருகிறேன்.

தலை நிமிர வைப்பேன்

இந்தியாவுக்கு வழிகாட்டியாக, இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக என்னை நான் ஒப்படைத்துக் கொண்டுள்ளேன். தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரின் வழித்தோன்றல் மட்டுமல்ல; அவர்கள் நினைத்த செயலைச் செய்து காட்டும் வழிவழித் தொடர்ச்சியாக நான் செயல்பட்டு வருகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலைவணங்குகிறேன். நீங்கள் எனக்கு அளித்து வரும் வெற்றியின் மூலமாக தமிழ்நாட்டைத் தலைநிமிர வைப்பேன்.

தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்திக் காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. இந்திய நாடு இன்னல்களை வென்ற நாடு மட்டுமல்ல, உலகுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டிய நாடு. அத்தகைய இந்திய நாட்டின் பொறுப்புமிக்க குடிமக்களாகிய நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி: “நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்!”; “நம்மைக் காக்கும், நாட்டைக் காப்போம்!”.

-இவ்வாறு முதலமைச்சர் உரையில் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *