சிறீநகர், ஆக. 15- ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு – காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புகளை அதிகரிப்பது குறித்து ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை இந்திய தேர்தல் அதிகாரிகள் நேற்று (14.8.2024) சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ஜம்மு – காஷ்மீரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, தலைமை
தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பேசியதாவது:
“ஜம்மு – காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதியாகவுள்ளது, எவ்வித வெளி மற்றும் உள் சக்திகளும் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முடியாது. ஜம்மு – காஷ்மீரில் ஜனநாயக செயல்முறைகள் தொடர, மக்களவை தேர்தலை போன்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களின் பங்கேற்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்த வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
முதுகலை மருத்துவப் பேராசிரியரை ஏமாற்றி ரூ.3 கோடிவரை சுருட்டிய இணைய வழி மோசடிப் பேர்வழிகள்
லக்னோ, ஆக. 15– உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ஏமாற்றி ரூ.2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர்கிரைம் வழக்குப் பதிவு செய்துள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான மருத்துவர் ருச்சிகா டாண்டனிடம் நடைபெற்ற இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் காவல்துறையில் அவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரில், “எனது அலைபேசி எண்ணுக்கு அழைத்த நபர் தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI)இல் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். எனது எண்ணில் இருந்து மோசடி அழைப்புகள் வருவதாக மும்பை சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார்கள் வந்திருப்பதாகவும் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்களுக்கு தொல்லை தரும் செய்திகளை அனுப்பியதற்காக எனது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும்” என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ருச்சிகா டாண்டனிடம், அய்.பி.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து வேறு ஒரு நபருடன் பேச செய்துள்ளனர். ருச்சிகா வங்கிக் கணக்கில் பணமோசடி மூலம் ரூ. 7 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் இந்த கணக்கு சட்டவிரோத நடவடிக்கைக்காக முடக்கப்படுவதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
மோசடி அழைப்புகள் மற்றும் பணமோசடி ஆகிய விவகாரங்களில் ருச்சிகாவின் தொடர்பு இருப்பதை அடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ருச்சிகா டாண்டன், தனக்கும் இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இருந்தபோதும் தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட அவர்கள், தங்களை நேரில் சந்திக்குமாறு தெரிவித்துள்ளனர். அவர்களை சந்திக்கச் சென்ற ருச்சிகா டாண்டனிடம் சிபிஅய் அதிகாரி என்று அறிமுகப்படுத்தப்பட்ட மற்றொரு நபர் பேசியுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் இதுகுறித்து வெளியில் கூறவேண்டாம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இவர்களின் இந்த மிரட்டலை நம்பி ரூ. 2.81 கோடியை இழந்த ருச்சிகா டாண்டன் ஒருவார காலமாக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார். பின்னர் ஒருவழியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து லக்னோ சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.