வேதாரண்யம், ஆக. 15- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத் துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாசன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் புஷ்பவனத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (வயது 70), ராஜேஷ்(26), ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய 4 மீனவர்களும் 13.8.2024 அன்று மதியம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது இலங்கை கடற் கொள்ளையர்கள் 6 பேர், 2 படகு களில் அங்கு வந்தனர். அவர்கள் ஆறு காட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேரின் கழுத்தில் வாளை வைத்து மிரட்டியும், இரும்பு குழாய்களால் தாக்கியும் படகில் ல் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மீனவர்கள் 4 பேரும் நேற்று (14.8.2024) மதியம் கரைக்கு திரும்பினர். பின்னர், இதுகுறித்து கிராம பஞ்சாயத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உள்காயம் அடைந்த மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின் றனர். ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது கடந்த 10 நாட்களில் 3ஆவதுமுறையாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்ட நிகழ்வு நாகை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.