திருவள்ளூர், ஆக.15 வழுதலம்பேடு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மக் களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்காத நிலையில், அக்கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகள் கழித்து கிராம தேவதையான எட்டி யம்மன் கோவில் குட முழுக்கு நிகழ் வுகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்றது. இதில் இரு சமூகத்தினர் இடையே கோவிலில் வழிபடுவது குறித்து ஜாதி பாகுபாடு காரணமாகப் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கோவில் குட முழுக்கு நிகழ்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சரவணகுமாரிடம் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆக 8 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் இருதரப்பினருக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஜாதிய ஆதிக்க சமூகத்தினர் முதலிலும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் இரண்டாவ தாகவும் கோவில் வழிபாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தாழ்த்தப்பட்ட இன மக்கள் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோயில் வழிபாடு செய்யச் சென்றபோது மாற்று சமூகத்தினர் கோவிலுக்குச் செல்லும் வழி பட்டா நிலம் எனக் கூறி தாழ்த் தப்பட்ட சமூக மக்களைக் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்தனர். காவல்துறை மாற்று வழியில் அழைத்துச் சென்றபோது அந்த வழியிலும் செல்ல தடுத்த மாற்று சமூகத்தினர் தாழ்த்தப்பட்ட இன மக்களை அவதூறாகப் பேசி கொச்சைப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.
தகவல் அறிந்து நிகழ்வு இடத் துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், பொன்னரி கோட்டாட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் ஆகியோரையும் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமையை உணர்ந்த வருவாய்த் துறையினர் எட்டியம்மன் கோவிலின் வாயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.
இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அளித்த புகாரின் பேரில் வழுதலம்பேடு ஊராட்சி மன்ற பெண் தலைவர் மணிமேகலை மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ், ரகுநாதன், சுப்ரமணி, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களை காவல்துறையினரின் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.