விழுப்புரம், ஆக.15– விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தில் சூல பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று (14.8.2024) காலை தூக்குதேர் திருவிழா நடந்தது. இதையொட்டி 300 பேர் கொண்ட குழுவினார் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தூக்கு தேரை தூக்கி தங்களது தோளில் சுமந்தபடி முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது தேரானது அதன் நிலையை அடைய நெருங்கி வந்தபோது தேரை இடப்பக்கமாக தூக்கி சென்றவர்கள் தெருவில் தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து செல்லும்போது அவர்களது கால்கள் வழுக்கியதால் தேரானது எதிர்பாராதவிதமாக இடது பக்கமாக சாய்ந்து மின்கம்பிகள்மீது கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேர் சாய்ந்ததை பார்த்த பக்தர்கள், பொதுமக்கள் விலகி ஓடிச் சென்றனர்.