மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியின் சோகக் கதை?

viduthalai
3 Min Read

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தற்காலிக வளாகத்தை போலவே கல்வியும் பெயரளவுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டிய 183 பேராசிரியர்களில் இதுவரை வெறும் 53 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருப்பது கல்வியின் தரத்தை கேள்விக்குறி ஆக்கி உள்ளது.

மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுப்பதாலும் ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் கிடைப்பதில் உள்ள சிக்கலாலும் கட்டுமானப் பணிகள் தாமதம் ஆகி வருகின்றனவாம். இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் தற்காலிக எய்ம்ஸ் வளாகத்தில் கல்வியும் பெயரளவுக்கு வழங்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

மாணவர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, 2ஆவது பிரிவு மாணவர்களுக்கு மட்டும் தற்காலிக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் கூடுதலாக 50 மாணவர்களை கொண்ட 4ஆவது பிரிவிற்கு வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதால், ஏற்ெகனவே முதல் அணியில் சேர்ந்து, 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தனியார் விடுதிக்கு மாற்றப்பட உள்ளனர். ஆனால் அடுத்த ஆண்டு நவம்பரில் தான் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பகுதி அளவே நிறைவடையும் என அதன் நிர்வாக இயக்குநர் அனுமந்த ராவ் தெரிவித்துள்ளார்.

4ஆம் ஆண்டு மாணவர்கள், நாக்பூர் எய்ம்ஸுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிவதற்குள் முதல் அணி மாணவர்கள், படிப்பையே முடித்துவிடும் சூழல் உள்ளது. இது மட்டுமின்றி, மதுரை எய்ம்சுக்கான 183 பேராசிரியர் பணியிடங்களில் 53 இடங்களை மட்டுமே நிரப்பி இருக்கும் ஒன்றிய அரசு, ஆசிரியர் அல்லாத 911 பணியிடங்களில் வெறும் 43 இடங்களை மட்டுமே நிரப்பி உள்ளது. இதன்மூலம் தற்காலிக வளாகத்தில் கூட தரமான கல்வியை வழங்க ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பது எத்தகைய அநீதி!

கட்டடமே இல்லாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. ஏற்கெனவே நான்கு ஆண்டுகள் படித்து முடித்த மாணவர்கள் பயிற்சிக்காக நாக்பூர் அனுப்பப்படுகிறார்களாம்.
கட்டடமே இல்லாத மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 2020இல் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர் சேர்க்கை நடந்து 4 ஆண்டுகள் முடிந்த னால் முதல் தொகுதி மாணவர்கள் பயிற்சிக்காக நாக்பூருக்கு அனுப்பப்பட உள்ளனராம்.

புதிய கட்டடம் எப்போது தயாராகும் என்றே தெரியாத நிலையில்,தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இதர கல்லூரிகளில் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறைகள் இருப்பதாகவும், முதல் தொகுதி மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறைகளாக புதிய நரம்பியல் கட்டடம் பயன்படுத்தப்படும் என்றும் எய்ம்ஸ் மதுரை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

முதல் தொகுதி மாணவர்களுக்குத் தரமான பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் நாக்பூர் எய்ம்ஸ்க்கு அனுப்பப்படுகிறார்களாம். அடுத்த ஆண்டு முதல், சொந்தக் கட்டடம் தயாராகும் என்பதால், இந்த ஏற்பாடு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களால் மருத்துவ மாணவிகள் மாற்றப்பட மாட்டார்கள் என்றும், மாணவர்கள் மட்டும் தனியார் விடுதிக்கு மாற்றப்பட்டு, புதிய மாணவர்களுக்கு இடம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எப்படி இருக்கிறது கதை!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையாம் – அதற்கென்று கட்டடம் கிடையாதாம்.
ஆனாலும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நடக் கிறதாம். மாணவர்கள் பல கல்லூரிகளில் சேர்க்கப் பட்டுள்ளனராம்.
நான்கு ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள் பயிற்சிக்காக நாக்பூர் அனுப்பப் படுகிறார்களாம். ஏன் அந்த மாணவர்களை தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற மருத்துவமனைகளுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கக் கூடாதா?

ஒப்புக்குச் சப்பாணி என்ற முறையில் – தமிழ்நாடு என்றால் அடாவடித்தனமாக, அலட்சியத்தின் உச்சியில் நின்று ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்டம் காட்டுவதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் அறியாமல் இல்லை. மதுரைக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் பிஜேபி ஆளும் மாநிலங்களில் திறக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
புரிந்துதான் வைத்திருக்கிறார்கள் – உரிய நேரத்தில் பாடங்களைக் கற்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனாலும் பட்டும் புத்தி வரவில்லை – ஒன்றிய பிஜேபி அரசுக்கு என்பதுதான் பரிதாபம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *