உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம பாதை மற்றும் பக்திப் பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயோத்தி காவல் துறையினர் மேலும் கூறுகையில் (13.8.2024), ‘ராமப் பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்திப் பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. கடந்த மே 9 ஆம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது.
இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.
விளக்குகள் திருடுபோனதை மே மாதத்திலேயே தனியார் நிறுவனம் கண்டறிந்திருந்தாலும், ஆகஸ்ட் 9 ஆம் தேதிதான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அயோத்தியில் பால ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமா் கோயிலுக்குச் செல்லும் சாலைகளாக இந்த ராமப் பாதை, பக்திப் பாதைகள் பயன்படுகின்றன.
மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் சக்தியும், ராமன் மீது கொண்ட பக்தியும் எவ்வளவுப் போலியானது!
ராமர் பக்தர்கள் குறிப்பாகப் பிரதமர் மோடி உணர்வாராக!
– மயிலாடன்