இம்பால், ஆக. 12- மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வீடுகள் பல எரிக்கப்பட்டுள்ளன. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது தொடர்பான காட்சிப்பதிவுகள் இணையத்தில் வேகமாக பரவின.
மேலும் இந்த வன்முறையில் பயங்கரவாதிகள் குழுக்களும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்குள்ள தென்குபால் மாவட்டம், மோல்னோம்கிராமத்திற்குள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் உள்ளே புகுந்தனர். பின்னர் கண்ணில் படுபவர்கள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர்.
இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். வீடுகள் பல எரிந்து தீக்கிரையானது. தகவலறிந்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அவர்கள் வலைவீசி தேடி வருகிறார்கள்.