சென்னை. ஆக. 10- தனியார் பொறியியல் கல்லூரிகளிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நம்பி கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டாம் என்று மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் அறிவுரை கூறினார்.
அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் வேல்ராஜின் 3ஆண்டு பதவிக்காலம் இன்றுடன் (10.8.2024) முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று அவர் பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. படிப்பு செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்று பொறியியல் கல்லூரிகளில் இருந்து வரும் அழைப்புகளை நம்பி மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களைக் குறிவைத்து சில தனியார் கல்லூரிகள் மூளைச்சலவை செய்துமாணவர் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
தொலைபேசி வாயிலாக வரும்அழைப்புகளை நம்பி மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்யவேண்டாம். தரமற்ற கல்லூரிகளில்இருந்துதான் அழைப்பு வரும்என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும், குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கலந்தாய்வின்போது கல்லூரி விருப்ப வாய்ப்புகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியரின் விவரங்களை தவறாகப் பயன்படுத்திய தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டிருந்தது. அதில் 90 சதவீத கல்லூரிகள் 2 வாரம் அவகாசம் கேட்டுள்ளன. 10 சதவீத கல்லூரிகள் மட்டுமே முறையான விளக்கத்தை வழங்கியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பொறியியல் சேர்க்கைக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் பிடித்தமான கல்லூரி மற்றும்பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கு 12ஆம் தேதிவரை அவகாசம் அளிக்கப்படும். 13ஆம் தேதி அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதை அவர்கள் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து 15ஆம் தேதி ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் வழங்கப்படும்.
சென்னையில் நாளை அறிவியல் பேரணி
சென்னை, ஆக. 10- உலகின் பல நகரங்களில் அறிவியலுக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் செயல்படும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து சென்னையில் அறிவியல் பேரணியை முன்னெடுக்கின்றன.
இந்தப் பேரணி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் நாளை ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 – 5.00 மணிவரை நடைபெறவிருக்கிறது. ‘அறிவியல் மக்களுக்கே!’, ‘அறிவியல் சமூக மாற்றத்துக்கே!’, ‘மக்களை மய்யப்படுத்தி அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகளை வகுக்க வேண்டும்!’ என்பது உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெறுகிறது.
இப்பேரணியில் அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
ராமர் பாத ஊர்வலத்திற்குத் தடை
மதுரை, ஆக. 10- அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் இன்று (10.8.2024) திருப்பூர் அனுப்பர்பாளையம் கருப்பராயன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமருக்கு வெள்ளியில் ராமர் பாதம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது.
தற்குக் காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து ஹிந்துமகா சபா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனர்.
வழக்கை விசாரித்த போது நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதத்தை வைத்த காவல்துறையினர் இது அரசியலுக்காக செய்யப்படுகிறது என்றும், இது போன்ற ஊர்வலங்களில் வன்முறைகள் நடக்கும் என்றும், கூறிய அவர்கள் ஏற்கெனவே இது போன்ற ஊர்வலங்களை நடத்தியதில் குறிப்பாக பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து தங்கள் தரப்பு வாதத்தை வைத்தனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் வைத்த கோரிக்கையை தள்ளுபடி செய்து ராமர் பாத ஊர்வல நிகழ்விற்கு தடை விதித்தார்கள்.