1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்றால், இரண்டாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948இல் நடைபெற்றது.
ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சர் – கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார்.
விருப்பப் பாடம் என்ற பெயரால் ஹிந்தி திணிக்கப்பட்டது.
17.7.1948 அன்று சென்னை அரண்மனைக்காரர் தெரு செயின்ட் மேரி மண்டபத்தில் சென்னை மாநில ஹிந்தி எதிர்ப்பாளர் மாநாடு மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்றது. தந்தை பெரியார், திரு.வி.க., அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், நாராணத் துரைக்கண்ணன், ம.பொ.சி. (ராஜாஜியின் சீடர் முதன் முதலில் ஹிந்தி எதிர்ப்பில் பங்கு ஏற்கிறார்) முதலியோர் பங்கேற்றனர்.
நாடெங்கும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. 30.7.1948 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் முழக்கமிட்டார். 1.8.1948இல் சென்னை மெமோரியல் மண்டபத்தில் இலக்குவனார் தலைமையில் மாநில மாணவர் ஹிந்தி எதிர்ப்பு மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட அம்மாநாட்டில் தந்தை பெரியார், அண்ணா, இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், ஏ.பி. ஜனார்த்தனம், க. அப்பாதுரையார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
2.8.1948 அன்று திராவிடர் கழக நிருவாகக் குழுவின் அவசரக் கூட்டம் தந்தை பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. ஹிந்தித் திணிப்பை அரசு கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல் நடவடிக்கையாக 10.8.1948 (ஆம் இதே ஆகஸ்டு 10இல்) அன்று போராட்டத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரியாக அண்ணா நியமிக் கப்பட்டார். 10.8.1948 அன்று சென்னை தங்கச்சாலை தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியின் முன்மறியல் தொடங்கப்பட்டது.
மாணவர்கள் ஹிந்தி வகுப்புக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். 18.7.1950 அன்று ஹிந்தித் திணிப்பு ஒழிக்கப்பட்டது.
இந்த ஆகஸ்ட் 10ஆம் நாள் என்பது இன்றைய ஒன்றிய பிஜேபி தலைமையிலான ஆட்சியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் பொழுது சிந்தனையைத் தூண்டக் கூடிய நாளாகக் கருதப்பட வேண்டியுள்ளது.
தேசியக் கல்வி என்ற பெயரால் ஹிந்தி, சமஸ் கிருதம் கொண்டு வரப்பட உள்ளன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களையெல்லாம் வெளி யேற்றி விட்டு மூன்று குற்றவியல் சட்டங்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
சட்டங்களின் பெயர்கள் யார் வாயிலும் நுழைய முடியாத சமஸ்கிருதப் பெயர்கள்.
இப்பொழுது வெளி வந்துள்ள மற்றொரு அதிர்ச் சியான செய்தி! திருச்சி விமான நிலையத்தில் ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ் இவற்றுடன் சமஸ்கிருதத்திலும் பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது என்பதுதான் அந்தத் தகவல். (படம் முதல் பக்கம் காண்க)
கடந்த ஜனவரியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டு ஜூன் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது திருச்சி பன்னாட்டு விமான நிலையம்.
டில்லிப் பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் சட்டக் கல்வியில் இளங்கலை வகுப்புப் பாடத் திட்டத்தில் மனுதர்ம சாஸ்திரம் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர். ‘ஞான கங்கை’ நூலில் (Bunch of Thoughts) குறிப்பிட்டுள்ளார்.
பிஜேபி ஆட்சி என்றால் – அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்துதானே ஆக வேண்டும்.
இரண்டாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப் பட்ட இந்த நாளில் – அதாவது ஆகஸ்டு 10இல் (1948) ஹிந்தி, சமஸ்கிருத எதிர்ப்புக் கிளர்ச்சிபற்றி இவற்றைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு ரூ.643.84 கோடியாம்! மற்ற செம்மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா ஆகிய அய்ந்து மொழிகளுக்கும் சேர்த்து ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை வெறும் ரூபாய் 29 கோடி.
ஒரே நாடு, ஒரேமொழி, ஒரே கலாச்சாரம் என்ற ஆரிய ஆதிக்கக் கொள்கையை நிலைநாட்ட உறுதி எடுத்துவிட்ட நிலையில் தான் ஒவ்வொன்றாக இறக்கி விட்டு ஆழம் பார்க்கிறார்கள்.
ஆகஸ்டு 10ஆம் நாளான இன்று இவற்றைப் பற்றி எல்லாம் உரத்த முறையில் சிந்திப்போம் எதிர்கொள்வோம்!