கிருஷ்னேஸ்வரி கன்னியாகுமரி
“வயது என்பது வெறும் நம்பர் தான், தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களை அது ஒன்றும் செய்யாது. எனக்குக் கூட 91 வயது என்கிறார்கள். ஆனால் என் வயது 19 தான்” எனத் திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்.
அப்படிச் சொல்வதற்கு 100 விழுக்காடு அவர்களுக்கு நியாயம் இருக்கிறது! காலையில் நேரத்தில் எழுவது, நடைப்பயிற்சி செய்வது, தமிழ், ஆங்கிலச் செய்திகளைப் படிப்பது, தினம் தினம் எழுதியே ஆக வேண்டிய பணிகள், கூடுதலாகப் பகிர்ந்து கொள்ளும் செய்திகள், குறிப்பாக வாழ்வியல் சிந்தனைகள், தவிர சொந்தமாக நூல்கள் தயாரித்தல், பிற நூல்களை வாசித்தல், இதற்கிடையே பயணங்கள், கூட்டங்கள், பெரும் தலைவர்கள் தொடங்கி, சிறு
தொண்டர்கள் வரை சந்திப்புகள் என 10 நாளில் செய்கிற வேலையை, ஒரே நாளில் செய்து முடிக்கிறார்கள்!
எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால், ஆசிரியருக்கு 72 மணி நேரம்! மும்மடங்கு உழைப்பு! இது ஏதோ சென்றாண்டு, இந்தாண்டு என்பதில்லை, ஆண்டாண்டு காலமாய் இதுதான் நடைமுறை! நமக்கு மிகவும் பிடித்தமான அல்லது வருமானம் வரக் கூடிய விடயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுவோம், உற்சாகமாகச் செயல்படுவோம். ஆனால் ஆசிரியர் அவர்கள் கடுகளவு விடயமானாலும் நினைவில் வைத்துக் கொள்வது, எழுத்தில் குறிப்பது, ஆர்வமுடன் பேசுவது, அதைச் செய்து முடிப்பது எனச் சிறு விடுதலும் இன்றி, உற்சாகம் குறையாமல் செய்து முடிப்பார்கள்!
பெரிய, பெரிய விடயங்கள் அன்றி, இந்தக் கடுகளவு செயல்களே, கடலளவு செய்து முடித்திருப்பார்கள்! ஆனால். தான் செய்யும் பணிகளை, நான் இவ்வளவு தூரம் பயணிக்கிறேன், எழுதுகிறேன், பேசுகிறேன், உழைக்கிறேன், நேரம் போதவில்லை, “டென்சனாக” இருக்கிறேன் என ஒருபோதும், ஒருபோதும் – அவர் சொல்ல யாரும் கேட்டது இல்லை! இப்போது நாமே கேட்டுக் கொள்வோம். வயது என்பது எண்ணிக்கையைப் பொறுத்ததா? செயல்களைப் பொறுத்ததா?
ஆக, தம் எண்ணங்களை, உற்சாகங்களை, நம்பிக்கை களை எழுத்துகளின் வாயிலாகத் தோழர்களுக்குக் கூறும் போது, அவர்கள் புதுப்பொலிவு பெறுகிறார்கள். அதிலும் மகளிர் தோழர்களின் கருத்துகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம்; அது வியப்பின் எல்லைக்கே இட்டுச் செல்கிறது!
அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மகளிர் தோழர் கிருஷ்னேஸ்வரி அவர்களைச் சந்தித்தோம். வயது 77 ஆகிறது. உடல் சற்று தடுமாறும் நிலை. இணையர் மறைந்துவிட்டார். இன்னமும் கடுமையாய் உழைக்கிறார். உணவுக்கு அதுதானே தேவையாய் இருக்கிறது! எல்லோருக்கும் எல்லாச் சூழலும் அமைவதில்லை! இந்நிலையில் பொதுக் குழுவிற்குக் குமரி மாவட்டத்தில் இருந்து, கும்பகோணம் வந்து இறங்கியிருக்கிறார். வந்த தூரம் மீண்டும் செல்ல வேண்டும். எப்பேற்பட்ட இயக்கத்தில், எப்பேற்பட்ட மகளிர் பாருங்கள்! வாருங்கள்… இந்த வாரம் கன்னியாகுமரி சென்று வருவோம்!
அம்மா வணக்கம்! உங்கள் சொந்த ஊர் எது?
நான் பிறந்தது மிடாளம் எனும் பகுதி. இதன் பழைய பெயர் உதயம் மார்த்தாண்டம். அப்போது இது கேரளா மாநிலத்தில் இருந்தது. நான் படித்தது கூட மலையாளம்தான்! பின்னாளில் அது தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. என்றாலும் எனது பேச்சு மலையாளம் கலந்த தமிழில்தான் இன்றைக்கும் இருக்கும்.
உங்களின் கல்வித் தகுதி என்ன?
நான் அப்போதே எஸ்.எஸ்.எல்.சி முடித்திருந்தேன். கூடுதலாகப் படிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் பெண் பிள்ளைக்கு இதுவே போதும் என நிறுத்திவிட்டார்கள். நான் படிக்கிற காலத்தில் எங்கள் வகுப்பில் இரண்டு தண்ணீர் பானைகள் இருக்கும். பின்னாளில் அவையெல்லாம் மாறிவிட்டன. எங்கள் பகுதி பொதுவுடமைக் கருத்துகள் நிறைந்த ஊர். அந்தத் தாக்கம் என்னுள்ளும் இருந்தது.
உங்கள் இணையர் பெயர் என்ன?
1967ஆம் ஆண்டு எங்களுக்குச் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடந்தது. இணையர் பெயர் தேவதாசன். மத மறுப்புத் திருமணம். தாலி அணியவில்லை. முகமது இக்பால் என்பவர் நடத்தி வைத்தார். இணையர் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். புவனன் என்கிற பெயரில் “குரானோ குரான், பைபிளோ பைபிள், கீதையோ கீதை” நூல்களை எழுதியவர். இயக்கத்தில் மாவட்டச் செயலாளராகப் பணிபுரிந்தார். தமிழ்நாடு முழுவதும் அவருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். 1982இல் மறைந்துவிட்டார்கள்.
பெரியாரை எப்போது சந்தித்தீர்கள்?
1972 என நினைக்கிறேன். பெரியார் நாகர்கோயில் வந்திருந்தார். அப்போது நான் கை நிறைய வளையல்கள் அணிந்திருந்தேன். “உங்களை யாராவது தாக்கினால் எப்படி தடுப்பீர்கள்?” எனக் கேட்டார். என் இணையர் பதில் சொல்லப் போனார். பெரியார் அதை மறுத்துவிட்டு, நீங்கள் பதில் சொல்லுங்கள் என்றார். நான் எதுவும் பேசவில்லை; சரியெனப்பட்டதால் உடனே வளையல்களைக் கழட்டி விட்டேன். “இந்த அம்மா இயக்கத்தில் நிலைத்து நிற்பார்கள்”, என்றார் பெரியார். அவர் கூறியபடியே நிலைத்து நிற்கிறேன்!
நீங்கள் வகித்த இயக்கப் பொறுப்புகள் குறித்துக் கூறுங்கள்?
கன்னியாகுமரி மாவட்டத் திராவிடர் கழகச் செயலாளராகப் பணிபுரிந்தேன். அந்தப் பொறுப்பிற்கு மகளிராக நான்தான் முதன்முதலில் நியமிக்கப்பட்டேன். மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு ஒன்றில் ஆசிரியர் அவர்கள் இதனை அறிவித்தார்கள். பொறுப்பில் இருந்த போது, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏராளமான கூட்டங்கள் நடத்தியுள்ளேன். ஆசிரியரை 3 முறை அழைத்துள்ளோம். மறைந்த உடுக்கடி அட்டலிங்கம் அவர்களை வரவழைத்து, கிராமம்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம்.
அதேபோல ‘புரபசர்’ குமார் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும் நிறைய நடந்துள்ளது. வழக்குரைஞர் அருள்மொழி, ஓவியா, டெய்சி மணியம்மை போன்றோர் பலமுறை வந்துள்ளனர். குறிப்பாக மகளிர் பேச்சாளர்கள் அதிகம் வருகை தந்தனர்.
ஒருமுறை அதிரடி அன்பழகன் பேச வந்திருந்தார். கடவுள், மதம் குறித்துப் பேசக் கூடாது எனச் சிலர் பிரச்சினை செய்தனர். அவர்கள் கையில் கல், கம்பு வைத்திருந்தனர். நான் இடுப்பில் கத்தி வைத்திருந்தேன். முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள் என அனைத்தையும் பேசி விட்டுத்தான் வந்தோம். இயக்க நிகழ்ச்சிகளுக்கு மனோரஞ்சிதம், பார்வதி, திருமகள் போன்றோர் வந்துள்ளனர். மகளிரணி பொறுப்பிலும் நான் பணியாற்றியுள்ளேன்.
மணியம்மையார் அவர்களுடன் அறிமுகம் இருந்ததா?
நன்றாக இருந்தது. குறிப்பாக மணியம்மையார் அவர்களின் கண்டிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருமுறை திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். பெரும்பாலும் நான் தனியாகவே போய் வந்து பழக்கம். இந்நிலையில் அன்றிரவு நடந்த பொம்மலாட்டம் நிகழ்ச்சியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மணியம்மையார் அவர்கள், “வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளீர்கள், போய் தூங்கி ஓய்வெடுங்கள்” எனச் சிறிது அதட்டும் குரலில் கூறினார்கள். நானும் உடனே ஓய்வெடுக்கச் சென்றுவிட்டேன்.
பெற்றோர் இல்லாத சூழலில், அந்த அக்கறையும், அன்பும் எனக்குப் பிடித்திருந்தது. எதையும் சரியாக, உரிய நேரத்தில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அப்போது எனக்குத் தொடங்கியது. “இராவண லீலா” நிகழ்ச்சி நடந்த போது சென்னை சென்றிருந்தேன். பெரியமேடு பகுதியில் இருந்த “விருதுநகர் நாடார்” எனும் விடுதியில், தனியாக அறை எடுத்துத் தங்கினேன்.
இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
தற்சமயம் மளிகைக் கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன். சிறு வாகனம் ஒன்றும் வைத்துள்ளேன். அதில் பாவூர்சத்திரம் சென்று, தினமும் காய்கறி வாங்கி வருவேன். வேலைக்கு ஒரு நபர் வைத்து, வெளியிலும் விற்பனை செய்து வருகிறேன்.
ஆசிரியர் அவர்களின் இயக்க வழிகாட்டுதல்கள் எப்படி இருக்கின்றன?
மானமிகுவாளர்கள் சண்முகம், சிதம்பரம், தாணு, என்.ஆர்.சந்திரன், நீலகண்டன், அப்பாவு, சதாசிவன்,
எஸ்.கே.அகமது, ஓ.வி.கே.நீர்காத்தலிங்கம் போன்ற தோழர்கள் இருந்த காலத்தில் இருந்தே இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை முழு நிறைவான தலைவர் ஆசிரியர் அவர்கள். எந்த ஒரு முடிவையும் தீர ஆய்வு செய்து எடுப்பார். தோல்வி என்பதே அவருக்குக் கிடையாது.
ஆசிரியர் அறிவித்த எந்த நிகழ்ச்சியையும், போராட்டத்தையும் நாங்கள் தவறவிட்டதே இல்லை. ஆசிரியர் அவர்களுடன் ஓரிரு முறை வேனில் பயணம் செய்துள்ளேன். வைக்கத்தில் ஆசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட அண்மையில் பங்கேற்றேன். மோகனா அம்மையாரையும் பலமுறை பார்த்துள்ளேன். மிக அன்பாகப் பேசுவார்கள்”, எனத் தம் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார் கிருஷ்னேஸ்வரி!