வங்கதேசத்துக்காக திருப்பூரை வஞ்சித்த மோடி!

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.9 வங்கதேச அரசியல் குழப்பங்களுக்குக் காரணம், திருப்பூருக்கு பிரதமர் மோடி செய்த துரோகம்தான் என பத்திரிகையாளர் பரக்கத் அலி, தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
‘‘எனது பெயர் கொண்ட நமோ என்ற செய்தியைத் தாங்கி வரும் டி-சர்ட்கள் திருப்பூரில்தான் நெய்யப்படுகின்றன.’’ 2019 பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூர் பெருமாநல்லூரில் நின்று பிரதமர் மோடி பெருமைப்பட்டார். அந்த மோடியால்தான் திருப்பூருக்கு அநீதி இழைக்கப்பட்டது. பின்னலாடை வர்த்தகச் சந்தைக்கான வாசலை வங்கதேசத்துக்குத் திறந்து விட்டதால், வாய்ப்புகளை இழந்து நின்றது திருப்பூர்.

வங்கதேசத்துக்குப் பின்னலாடை மூலப் பொருட்கள் 60 சதவிகிதம் இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படு கின்றன. அங்கே உற்பத்தியாகும் துணி இந்தியாவிற்கே விற்கப்படுகிறது. வங்கதேசத்துக்கு மோடி அரசு அளித்த வரிச்சலுகை திருப்பூருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இறக்குமதி, ஏற்றுமதி என இரண்டுக்கும் வரி இல்லாததால், வங்கதேசம் பின்னலாடைத் தொழிலில் பெரிய அளவில் வளர்ச்சியை எட்டியது. இந்தியாவைக் காட்டிலும் துணி விலை கிலோவுக்கு ரூ.50 குறைவு என்பதால், வெளிநாட்டுச் சந்தைகளை வங்கதேசம் ஆக்கிரமித்தது. திருப்பூரின் ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் சந்தையை வங்கதேசம் பிடித்தது. இது திருப்பூரைக் காவு வாங்கியது. நூற்பாலைகள், உற்பத்தியாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்துறையினர் எனப் பலரும் பின்னலாடைத் தொழிலில் இருந்து வெளியேற ஆரம்பித்தார்கள். ‘‘பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க வங்கதேச ஆடை இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ என திருப்பூர் உற்பத்தியாளர்களின் கதறல்கள் மோடியின் காதுகளில் விழவில்லை.

மோடி ஆட்சியில் நூல் விலை உயர்வு, பணமதிப்பு நீக்கம், பணவீக்கம், ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, கரோனா பொது முடக்கம். ரஷ்யா-உக்ரைன் போர் தாக்கம் என ஏற்கெனவே நெருக்கடிக்கு உள்ளான திருப்பூர் பின்னலாடைத் தொழில், வங்கதேசத்தால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

மோடியால் கொண்டாடப்பட்ட வங்கதேசத்தில் இன்று புரட்சி வெடித்திருக்கிறது. நாடு முழுவதும் வன்முறை வெடித்து, டாக்கா அரண்மனையைப் போராட்டக்காரர்கள் சூறையாடியிருக்கிறார்கள். ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டு, தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கிறார். திருப்பூரின் குமுறல் வங்கதேசத்தில் புரட்சிக்கு தூபம் போட்டுவிட்டதா?” என்கிறது அந்தப் பதிவு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *