நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல் வாக்குமூலம்
சென்னை, ஆக.9- இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளது, ஆனால் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒரு பைசாகூட வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கூறியுள்ளது.
முதல் கட்டம்
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதலமைச்சராக இருந்த கலைஞர், மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்தார். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு அப்போது துணை முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் திருவொற்றியூர் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை முழு வீச்சில் நடந்து வருகிறது.
2ஆம் கட்டப்பணி
அதனைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி, மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான தூரத்திற்கு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான திட்ட மதிப்பீடு மட்டும் ரூ.63 ஆயிரத்து 246 கோடி ஆகும்.
இந்த திட்டப்பணிகளுக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா. எடப்பாடி பழனி சாமி முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2021ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு தனது பங்களிப்பு தொகையை வழங்கவில்லை. இருப்பினும் திட்டப்பணிகள் நின்று விடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அதற்கான நிதியை செலவு செய்து பணிகளை, மேற்கொண்டு வருகிறது.
புறக்கணிப்பு
தற்போதைய ஒன்றிய நிதி நிலை அறிக்கைகளில் சென்னை மெட்ரோவின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதி அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் நிதி நிலை அறிக்கைகளில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் நிட்டிஆயோக் கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி புறக்கணித்தார். இந்நிலையில் தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசு பிற மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ திட்டங்களுக்கு மட்டும் தாராளமாக நிதி வழங்கி உள்ளது. ஆனால் தமிழ் நாட்டிற்கு கடந்த 2 ஆண்டுகளாக மெட்ரோ திட்டங்களுக்கு எந்த நிதி யும் வழங்கவில்லை என்பதனை ஒன்றிய அரசு நேற்று (8.8.2024) நாடாளு மன்றத்தில் ஒப்புக்கொண்டு உள்ளது.
ஒன்றிய அரசு பதில்
தி.மு.க.வின் மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் சென்னை மெட்ரோ திட்டம் குறித்தும், பிற மாநிலங்களில் செயல்படும். மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி விவரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய வீட்டு வசதி மற்றும் ஊரகத்துறை இணை அமைச்சர் தோக்கன் சாகு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்கள் மற்றும் டில்லியில் மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதற்காக கடந்த 2 ஆண்டுகளில் இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ரூ.35 ஆயிரத்து 125 கோடி நிதி வழங்கியுள்ளது. அதில் கருநாடகாவிற்கு ரூ.7,658 கோடி, மராட்டியத்திற்கு ரூ.6,958 கோடி, குஜராத்துக்கு ரூ.6,557 கோடி, டில்லிக்கு ரூ.5,925 கோடி, உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.4,542 கோடி. மத்திய பிரதேசத்திற்கு ரூ.2,196 கோடி, பீகாருக்கு ரூ.1,138 கோடி, கேரளாவிற்கு ரூ.146 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் நடை பெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடைபெறும் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒரு பைசா வழங்கவில்லை. ‘பூஜ்ஜியம்’ நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சுமக்கிறது
மேலும் அதில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்டபணிகள் குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ திட்டத்தை 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63 கோடியே 246 கோடி செலவில் நிறைவேற்ற அறிக்கை கொடுத்துள்ளது. இதுபோன்ற அதிகபட்ச நிதி ஒதுக்கிடும் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கு திட்டத்திற்கான சாத்தியக்கூறு மற்றும் தேவையான வளங்கள் இருக்க வேண்டும். தற்போதைய நிலையில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் அதற்கான செலவினத்தை தமிழ்நாடு அரசே சுமந்து உள்ளது என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த பதிலால், அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது தவறில்லை. ஆனால் ஒன்றிய அரசுக்கு அதிக வருவாய் தருவதில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதில் ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது? என்று கேட்டனர்.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு நிதி வழங்காத ஒன்றிய அரசு 3ஆம் கட்ட திட்டத்திற்கும் இன்னும் முழுமையான ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 3ஆம் கட்ட திட்டம் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையும், கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரையும், மீனம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரையும் செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததை கண்டித்து சமூக வலைதளத்தில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.