தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் அவலம் தொடர் கதையாகி விட்டது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற மோசமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை! அல்லல்படும் நிலை!
அதிகாலையில் இலங்கைப் படையின் ரோந்துக் கப்பல் மோதி, தமிழ்நாடு மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் கடலில் மூழ்கியுள்ளார். இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் (01.08.2024).
இதற்கு இலங்கை கடற்படைத் தளபதி கொடுத்த விளக்கத்தில், அவர்கள் எங்களை எதிர்த்து முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். அவர்கள் எங்களின் எச்சரிக்கையை மீறி தப்பி ஓடும் போது எங்கள் கப்பலோடு மோதினர் என்று உளறிக் கொட்டி இருக்கிறார்.
வெறும் நான்கு பேர் கொண்ட – கை வலை களை எடுத்துச்சென்று மீன் பிடிக்கும் சிறிய படகில் இருந்தவர்கள், ஒரு கடற்படையை எதிர்த்து முரட்டுத்தனமாக எப்படி நடந்துகொள்ள முடியும்? மேலும் அவர்கள் தப்பி ஓடும் போது படகு கவிழ்ந்து விட்டது என்று சொல்வதும் அப்பட்டமான பொய்யாகும்.
வழக்கம் போலவே மோடி அரசு டில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை அழைத்து, அதிர்ச்சியை தெரிவித்ததாம்.
மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 3,500 மீனவர்கள் இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போதும் 70க்கும் மேற்பட்டோர் சிறையில் உள்ளனர்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்த 185 விசைப்படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை. தற்போது நாட்டுப் படகுகளையும் பிடித்துச் செல்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக பாஜகவினர் பரப்புரை செய்கின்றனர். எங்கள் ஆட்சியில் தமிழ்நாடு மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னவர் தானே மோடி!
ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும் சொத்துகளுக்கும் இலங்கைக் கடற்படை தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு மீனவர் கொலை என்பது இந்தியக் கடல் பகுதிக்கு அருகில் நடந்துள்ளது, அது இலங்கைக் கடல் பகுதியில் நடக்கவில்லை ஆகவே இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20 வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
தூத்துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஜூலை 21-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி – மன்னார் வளைகுடா இடையே உள்ள பகுதியில் நீண்ட ஆழ்கடல் பகுதியில் மீன வர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். தற்போது அவர்களையும் இலங்கைக் கடற்படை கைது செய்யத் துவங்கி உள்ளது. இப்பகுதி தூத்துக்குடி துறைமுகத்திற்குப் பன்னாட்டு கப்பல்கள் வரும் பகுதி ஆகும் – அதாவது வணிகப் பாதை பகுதி. இங்கே எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி மீனவர்களை கைது செய்கிறது இலங்கை கடற்படை – இதற்கு ஒன்றிய அரசு மவுனம் சாதித்து வருகிறது.
நாகை மாவட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பேர் பைபர் படகுகளில் வந்து தமிழ்நாடு மீனவர்கள்மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். மீன்கள், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி, அலைபேசிகள் என பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர் அன்பழகன் தற்போது வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். (08.08.2024).
பொதுவாக மோடி தலைமையிலான ஒன்றிய பிஜேபி அரசுக்கு தமிழ்நாடு, தமிழர்கள் என்றால் ஒரு வகை ஒவ்வாமை இருந்து வருகிறது. அது தமிழ்நாட்டு மீனவர்கள் விடயத்திலும் நடக்கிறது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.
இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரப்படலம் தொடர்வது?
‘கொட்டினால்தான் தேள்’ என்ற பழமொழி நினைவிற்கு வருகிறது.