ஒரே குற்றம் – இருதரப்பில் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்?

2 Min Read

காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டல்

சென்னை, ஆக.9- ஒரு குற்ற நிகழ்வில் இருதரப்பும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்? என்று காவல்துறையினருக்கும், மாஜிஸ் திரேட்டு நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது.

எப்படிக் கையாளுவது?

சென்னையைச் சேர்ந்த பாலாஜி, ராஜகுமாரி ஆகியோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, எதிர் மனுதாரரான கார்த்திக் என்பவர் மனு தாரர்களுக்கு எதிராக தான் கொடுத்த புகார் மீதும் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதே போல் பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தால் காவல்துறையினரும், நீதிமன்றமும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய 3 நீதிப திகள் கொண்ட முழு பெஞ்ச் அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் இந்த வழக்குகளை விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மாநிலம் முழுவதும் ஒரு குற்றச் நிகழ்வு தொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தால், அதை கவனமாக காவல்துறையினர் கையாள வேண்டும். பாரபட்சம் காட்டாமல் இரு தரப்பு புகார் மீது விசாரணை நடத்த வேண்டும்.

எதிர் புகார் மீது விசாரணை அதிகாரி விசாரணை நடத்த மறுத்துவிட்டால் உயர் அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்து விசாரணை நடத்தவேண்டும் என்று உத்தரவு பெறலாம்.

எதிர் புகார் மீது விசாரணை நடத்துவது விசாரணை அதிகாரியின் கடமையாகும். அதன் மீது விசாரணை முடிந்த பிறகே முதல் புகார் மீது பதிவான வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். 2 புகார்களில் ஒரு புகாரில் உண்மை இல்லை என்று விசாரணையில் தெரியவந்தால் அதை முடித்துவைக்க வேண்டும்.

ஆனால், அந்த புகார் மீது நடந்த விசாரணையின்போது சேகரிக்கப்படும் ஆவணங்கள் இறுதி அறிக்கையில் சேர்க்கப்பட்டு மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இருதரப்பிலும் தரப்பட்ட புகார்மீது நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையான குற்றவாளி யார்? என்று தெரியவில்லை என்றால் இரு புகார்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான காரணத்தை விசாரணை அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

திருப்பி அனுப்பவேண்டும்

இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டால் அவற்றை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். எந்திரத்தனமாக குற்றப்பத்திரிகைகள் தயாரிக்கப்பட்டிருந்தால் அவற்றை விசாரணை அதிகாரிக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இரு வழக்குகளும் ஒரே விசாரணை நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *