எல்லோரும் இங்கே மிக அழகாக இராசகிரி தங்கராசுபற்றி சொன்னார்கள். கழகப் பொருளாளர் குமரேசன் அவர்கள் அருமை யாகச் சொன்னார். அதைவிட நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர் அவர்கள், எதையும் ஆய்ந்து, தெரிந்து சொல்லக்கூடிய பொறுப்பான ஒரு தலைவர் அவர். அந்த வகையில், நான் நினைத்துக் கொண்டிருந்த கருத்தை அவர் இங்கே சொன்னார். யார் சொன்னாலும், மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம்.
அந்த விஷயம் என்னவென்றால், இராசகிரியார் அவர்கள் எப்படிப்பட்டவர் என்றால், ஒரு நல்ல தொண்டர், தோழர், இயக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர் மட்டுமல்ல; இயக்கத்திற்கு இளைஞர்கள் யார் வந்தாலும், அவர்களைத் தட்டிக் கொடுத்து, பிறகு கண்டிப்பாக நடத்தக்கூடியவர்.
அதற்கு உதாரணம், அவரால் தயாரிக்கப்பட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு, திராவிடர் கழகத்தில் ஏராளம் இருக்கிறார்கள். இது ஒரு பக்கத்தில்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில், இங்கேயே குடந்தை தளபதி என்று கருதப்பட்டவர் நம்முடைய கோ.சி.மணி அவர்கள். அதைத்தான் இங்கே பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும் சொன்னார்கள்.
கோ.சி.மணி அவர்கள் ஒருமுறை பேட்டி கொடுக்கும் பொழுது சொன்னார், ‘‘நான் எப்படி திராவிட இயக்கத்திற்கு வந்தேன் என்றால், நான் இராமநாதபுரத்திலிருந்து குடும்பத்தோடு வந்தபொழுது, அப்பொழுது நான் இளைஞராக இருந்தபொழுது, என்னை இந்த இயக்கத்தில், திராவிட இயக்கத்தில் ஈடுபட வைத்தது. இராசகிரியார் அவர்கள்தான். அவர்தான், எனக்கு வழிகாட்டி, இயக்கத்திற்கு அழைத்துக் கொண்டுவந்தவர்” என்று சொன்னார்.
இன்றைக்கு நவீன குடந்தையை நாம் பார்க்கின்றோம் என்றால், கோ.சி.மணி அவர்களுடைய உழைப்பு, ஆற்ற லால்தான். கடைசிவரையில், ஒரே தலைமை, ஒரே எண்ணத்தோடு வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் அய்யா இராசகிரியார் அவர்களுடைய தயாரிப்பாகும்.
அதேபோன்று, எங்களுடைய தோழர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக இருப்பார்.
ஒரு தலைமை, ஒரு பொறுப்பு என்று சொன்னால், இங்கே மன்னார்குடி மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் சொன்னதைப்போல, அவருடைய தந்தையார் ஆர்.பி.சாரங்கன் அவர்கள் மாவட்டத் தலைவர்; இராசகிரியார் செயலாளர்; இரண்டு பேரும் கணவன் – மனைவி போன்று செயல்பட்டார்கள். ஊடலாடக் கூடிய கணவன் – மனைவி அல்ல. யாருடைய காதல் மிகவும் அதிகமானது; யார்மீது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒன்றிப் போனவர்கள்.
அப்படி செயல்பட்டவர்கள்.அந்த வகையில்தான், நம்முடைய அன்பு அவர்களுடைய தந்தையார் அய்யா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர், பல ஆண்டுகாலம் சிறைச்சாலையில் இருந்ததால், உடல்நலக் குறைவுற்ற அய்யா கணபதி அவர்கள்; அதேபோன்று நம்முடைய அய்யா ஆர்.பி.சுந்தரம் அவர்கள், மாரிமுத்து அவர்கள் என்று மிகப்பெரிய பட்டியல் உண்டு குடந்தையில். அவர்கள் தங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்தவர்கள்.பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று இருக்கக்கூடிய பெரியார் அறக்கட்டளைக்கு, அய்யா அவர்களுக்குப் பிறகு, பல பேர் வந்தார்கள், எங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு. அந்த உறுதுணையாக இருப்பதில், பெரியார் அறக்கட்டளையின் துணைத் தலைவராக இராசகிரியார், இறுதிவரையில், அவர் மறைகின்ற வரையில் இருந்தார்.
102 வயதைக் கடக்கும் எங்கள் அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம்
இன்றைக்குத் தலைவராக இருக்கக்கூடியவர், 102 வயதைக் காணக்கூடிய நம்முடைய அய்யா பொத்தனூர் க.சண்முகம் அவர்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ‘‘எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரவேண்டும்” என்று கடவுள் நம்பிக்கையாளர் சொல்கிறார். ஆனால், அவர்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. அது அவர்களுடைய ஆசை, அவர்களுடைய எண்ணம்.
ஆனால், ஆண்டவனையே ஏற்காதவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் 102 வயதைக் காணுகின்ற எங்கள் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள். பெங்களூருவில் 104 வயதுள்ள வேலு இருக்கிறார். அதேபோன்று ஆத்தூரில் 103 வயதுள்ள தங்கவேலு இருக்கிறார். இதுபோன்று ஏராளமான கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் அவர்கள்தான் சொல்வார், ‘‘ஆயுளுக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை. அது மருத்துவத்தைப் பொறுத்தது; உடல் வாகைப் பொறுத்தது” என்று.
அந்த வகையில்கூட, தன்னுடைய கொள்கையைத் தீவிரமாகச் சொல்லி, நூறாண்டை நெருங்கிக் கொண்டி ருக்கின்ற பொழுதுதான் இயற்கையினுடைய கோணல்புத்தி அய்யா இராசகிரியார் அவர்களை நம்மிடமிருந்து பறித்தது. என்றாலும், அவர் மறைந்துவிடவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகச் சிறப்பாக வாழ்ந்த அவர், ஓர் எடுத்துக்காட்டானவர். மக்கள் தொண்டர்களுக்கு, கழகத் துணைத் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, ஒரு கொள்கை, ஒரு தலைவர், ஓர் அமைப்பு இந்த மூன்றுக்கும் ஒவ்வொருவரும் உண்மையாக இருக்கவேண்டும்.
எந்த அமைப்பில் இருந்தாலும், முதலில் அந்தத் தலைவனுக்குக் கட்டுப்படவேண்டும்; ‘‘புத்தம் சரணம் கச்சாமி’’ என்பதின் தத்துவம் அதுதான்.
அதேபோன்று, ‘‘தம்மம் சரணம் கச்சாமி” – அந்தக் கொள்கைக்கு உண்மையாக இருக்கவேண்டும்.
‘‘சங்கம் சரணம் கச்சாமி” – அந்த ஸ்தாபனத்திற்கு உண்மையாக இருக்கவேண்டும்.
இப்படி எடுத்துக்காட்டாக இருந்த இராசகிரியார் அவர்களுக்கு நூற்றாண்டு விழா என்கிறபொழுது – சுய மரியாதை இயக்க நூற்றாண்டில், அவருடைய நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுகிறோம்.
ஏனென்றால், சுயமரியாதை இயக்கம் அப்படிப்பட்ட பல தொண்டர்களை சந்தித்திருக்கிறது. இதே குடந்தை வட்டாரத்தை எடுத்துக்கொண்டால், ஜி.என்.சாமி, சிங்காரவேலர், வழக்குரைஞர் முத்து தனபால், தெட்சிணாமூர்த்தி என்று ஏராளமான பட்டியலை என்னால் சொல்ல முடியும். ஆர்.சி.வெங்கட்ராமன் நீதிக்கட்சி காலந்தொட்டு பயணித்திருக்கிறார்.
ஆகவே, இராசகிரியார் நூற்றாண்டு என்பது அவரை நினைவுகூர்வதற்காக மட்டுமல்ல, இளை ஞர்களே, உங்களுக்குச் சுயமரியாதைப் பாடங்கள் தெரியவேண்டு மானால், இப்படிப்பட்டவர்கள்தான் பாடங்களாக இருக்கிறார்கள்.
எனவே அவர்கள் வெறும் படங்களாக நமக்குத் தெரியவில்லை; பாடங்களாக இருக்கிறார்கள் என்பதைச் எடுத்துச் சொல்வதற்காகத்தான் அவருடைய நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகிறோம்.
அவருடைய குடும்பத்தினர் இங்கே வந்திருக்கிறார்கள். என்று நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனென்றால், நாம் எல்லோரும் ஒரே குடும்பம்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை. இன்னுங்கேட்டால், ரத்த உறவுகளைவிட, கொள்கை உறவுகளுக்குத்தான் பலமான சக்தியாகும், பிரிக்கப்பட முடியாத உணர்வும், உறவும் மிகத் தெளிவாக இருக்கும்.
ஆகவே, இந்த நூற்றாண்டு விழா என்பது, ஒரு கொள்கை நூற்றாண்டாக இருக்கும்.