‘விடுதலை’ தலையங்கம் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்பு நீட் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக.6 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மய்யங்களை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் எம்பி பிஎஸ் முடித்தசுமார் 25 ஆயிரம் மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலை யில் திடீரென முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வரும் 11 ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு ஷிப்ட்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, அவர்கள் கேட்டிருந்த 4 விருப்ப தேர்வு மய்யங்களை ஒதுக்காமல் 750 கிமீ முதல் 1,000கிமீ தொலைவில் ஆந்திராவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு தேர்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்வர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மய்யங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனஅரசியல் கட்சித் தலைவர்களும் வலியு றுத்தியிருந்தனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் (மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்), ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தமிழ்நாடு தேர்வர்களுக்கு, தமிழ்நாட்டில் அவர்கள் கேட்ட தேர்வு மய்யங்களில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதேபோல், மற்ற மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு தேர்வர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் அவர்கள் கேட்ட தேர்வு மய்யங்களில் ஒன்றை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான உறுதி செய்யப்பட்ட தகவல் இ–மெயில் மூலம் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை சோழவந்தானைச் சேர்ந்த மருத்துவர் யுவேதிதா ஆனந்திற்கு ஆந்திராவின் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய நகரமான அனந்தபூர் என்ற ஊரில் தேர்வெழுத மய்யம் ஒதுக்கப்பட்டது. திடீரென அந்த நகரத்தில் தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டதால் ரயில் முன்பதிவும் உடனடியாக கிடைக்காது. தங்கும் விடுதி தேர்வு மய்யம் தேடுதல் என பல சிரமத்திற்கு ஆளாகவேண்டி இருந்தது, இதனால் அவர்களது தேர்விற்கான தயாரிப்புகளிலும் குழப்பம் ஏற்படுத்தும் இந்த நிலையில் தமிழ்நாடு நாடாளு மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் மூலம், அவருக்கு மதுரையிலேயே தேர்வு மய்யம் ஒதுக்கப்பட்டது என்று ஞாயிறு இரவு 11 மணிக்கு குறுஞ்செய்தி அவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவரைப் போன்று பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *