பசுவதைத் தடைக்கு எதிர்ப்பு
தமிழ்நாடெங்கும் பசுவதைத் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டனப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் – நடத்தியது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், மாட்டிறைச்சித் தொழிலாளர்களும் பங்கு கொண்டனர்.
ஏங்கெல்ஸ் நினைவு நாள் (5.8.1895)
மார்க்சியம் என்றாலே, அதில் மார்க்ஸ் எனும் பெயரோடு பிரிக்க முடியாத மற்றொரு பெயர் ஏங்கெல்ஸ்.
இந்த உலகையும் சமூகத்தையும் பார்க்கின்ற பார்வையில், ஒருமித்த சிந்தனை கொண்டவர்களாக விளங்கிய மார்க்ஸ்-சும் ஏங்கெல்ஸ்-சும் தமது வாழ்நாள் முழுவதும் நண்பர்களாக தொடர்ந்ததில் அதிசயிப்பதற்கு எதுவுமில்லை. அவர்களது இரண்டாம் சந்திப்புக்குப் பின்னர், மார்க்சின் எழுத்துக்கள் அனைத்தும் ஏங்கெல்சின் கரங்களில் செழுமை பெற்ற பின்னர்தான் நூலாக வெளிவந்தன. எங்கெல்சின் எழுத்துக்களும் மார்க்சின் கரம் தழுவி செழுமை பெற்றே வெளிவந்தன.
மார்க்சியத்தின் அடிப்படை தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்தில், அந்த அளவிற்கு மார்க்சுடன் ஒன்றியவராக ஏங்கெல்ஸ் இருந்தார். தோழர் மார்க்ஸ் தனது நண்பரான பெர்க்லன் ஜீமருக்கு எழுதிய கடிதத்தில் ஏங்கெல்சை தமது ”மற்றொரு சுயமாகக்” (Alter ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு இருவருக்கும் இடையில் நீடித்த ஒருமித்த சிந்தனை அவர்களது நட்பை வலுப்படுத்தியது.
அறிவியலின் மீது குறிப்பாக, அன்று தீவிரமாக வளர்ந்து வந்த இயற்பியல், இரசாயனவியல், உயிரியல், இயற்கை விஞ்ஞானம், வானவியல், மானுடவியல் என அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் மீதும் பெரும் ஈர்ப்பு கொண்டிருந்தார், ஏங்கெல்ஸ். அறிவியலின் நுண்ணியமான கண்டுபிடிப்புகளில் இருந்து, இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை செழுமைப் படுத்தினார் ஏங்கெல்ஸ். மூலதனம் குறித்த மார்க்சின் ஆய்விற்காக இயற்கையின் மீதான தமது தனிப்பட்ட ஆய்வை ஒத்தி வைத்தார் ஏங்கெல்ஸ். அவர் இல்லையென்றால் தமது படைப்புகள் முழுமை பெற்று வெளிவர சாத்தியமே இருந்திருக்காது என மார்க்ஸ் நெகிழ்வோடு கடிதம் எழுதுகிறார்.
தமது இறுதி காலம் வரையில் மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைப்படுத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்த தோழர் ஏங்கெல்ஸ்-சின் நினைவு நாள் இன்று!