கோட்சே–க்கு குடியரசு துணைத் தலைவர் புகழாரம் சூட்டுவதா?

Viduthalai
2 Min Read

தூய்மையான கொள்கை – மனிதநேயம் கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று விதிவிலக்கு கேட்பது அரசமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது.” – என்கிறார் ஜெக்தீப் தன்கர் (குடியரசு துணைத் தலைவர்).
“பாஜக ஒரு ஹிந்துத்துவா கட்சி, பாஜக-வின் சித்தாந்த வழிகாட்டியும், பல்வேறு சமயங்களில் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு மான ஆர்.எஸ்.எஸ்ஸின் (RSS) கொள்கைகளை நிறைவேற்றுவது தான் மோடி அரசின் வேலை” என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றன. இவ்வாறிருக்க, ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்ற 58 ஆண்டுகால தடையை ஒன்றிய அரசு சமீபத்தில் நீக்கியதுபெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஆர்.எஸ்.எஸ்சுக்கு மாநிலங்களவையில் புகழாரம் சூட்டியிருக்கிறார். மாநிலங்களவைக் கூட்டத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் நியமனம் தொடர்பாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் லால் ஜி சுமன், “ஒருவரின் தரம் பற்றிய ஒன்றிய அரசின் அளவுகோல், அந்த நபர் ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வந்தவரா என்று பார்ப்பதுதான்” என்று கூறினார்.
உடனடியாக இதனை ஆட்சேபித்த மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “இதனை அரசியலாக்கக் கூடாது என இந்த அவையில் நான் கூறியிருக்கிறேன். இப்போது இவர் விதிகளை மீறவில்லை, இந்திய அரசமைப்பையே காலில் போட்டு மிதித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். என்பது ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு. நாட்டுக்குச் சேவை செய்யும் ஒரு அமைப்பை தனி மைப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன்.

அரசமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்.எஸ்.எஸ்சுக்கு இருக்கிறது.’’ என்று பாராட்டுப் பத்திரம் படிக்கிறார்.
இது எவ்வளவுப் பெரிய கொடுமை! நாட்டில் மூன்று முறை ஆர்.எஸ்.எஸ். அதன் வன்முறை நடவடிக்கைகளுக்காகத் தடை செய்யப்பட்டது – அத்தகைய பேரபாய ஓர் அமைப்புக்கு குடியரசு துணைத் தலைவர் என்ற பெரும் பதவியில் உள்ள ஒருவர் தலையில் தூக்கி வைத்துப் புகழ் மகுடம் சூட்டுகிறார் என்றால், இந்த நாடு எந்தத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எத்தனை எத்தனைப் படுகொலைகள்! காமராசர் வீட்டுக்குப் பட்டப் பகலில் படுகொலை செய்யச் சென்றதிலிருந்து – 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்பிலும் முன்னணிப் படையாக செயல்படவில்லையா ஆர்.எஸ்.எஸ்.
கோட்சே தூக்குத் தண்டனை பெற்று மரணம் அடைந்த நாளில், கோட்சேயின் அஸ்தியை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்பவர்கள் யார்? யார்?
இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவராக இருக்கக் கூடியவர் மாநிலங் களவையில் புகழ் மாலை சூட்டுவது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *