புதுடில்லி, ஆக.3 மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கியது என்று சொந்தக் கட்சியின் மேனாள் முதலமைச்சரே காட்டமாக தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மேனாள் முதலமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சாந்த குமார், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,‘கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி யில் இருந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தல்மூலம் அக்கட்சியின் தலைவர்களின் ஆணவத்தை அடித்து நொறுக்கிவிட்டது. பிரத மர் மோடி மக்களின் தீர்ப்பை ஏற்று, இணக்கமாக செயல்பட வேண்டும்.
இமாச்சலப் பிரதேசத்தில் அரசி யல் பேராசையால் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குதிரை பேரம் நடந்தது. அதன்மூலம் கட்டாய இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாஜக தலைவர்களின் அரசியல் பேராசையால், அவசர முடிவுகளை எடுத்தனர். அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இமாச்சலில் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மக்கள் கொடுத்த தீர்ப்பு. அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலத்தை ஆட்சி செய்ய காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், பாஜக தலைவர்களின் பேராசையால் குதிரை பேரம் நடத்தப்பட்டது. இதுபோன்ற செயல்கள் மாநிலத்திற்கு நல்லதல்ல என்றார்.