91 வயதில் 81 ஆண்டுகள் பொது வாழ்விற்கு உரியவர் இவரின்றி வேறு எவரும் இல்லை. 1943 கடலூர் பழைய பட்டினம் செட்டிகோயில் திடலில் அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு நன்கொடை திரட்டி வழங்கும் பொதுக்கூட்டம். அந்தக் கூட்டத்தில் மேடையின் மீது மேசை போட்டு ஏறி நின்று பேசிய ஆசிரியர்தான் இன்றைக்கு நாட்டின் அத்தனை வீதிகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்.
பெரியார் விரல் பிடித்து 80 ஆண்டுகள்
திராவிடர் இயக்கத்தின் தாயுமானவராக, திராவிடத்தின் திசைகாட்டியாக திகழும் தகைசால் தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 1944 ஜூலை மாதம் 29ஆம் தேதி 80 ஆண்டுக்கு முன்னால் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டில் தந்தை பெரியாரை முதல் முதலாக சந்தித்தார். தந்தை பெரியார் அவர்களை ஆசிரியர் சந்தித்த முதல் நிகழ்வை அவர் வழியே காண்பது தான் சிறப்புக்குரியதாக இருக்கும்.
ஆம், நாம் 1944ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டும். இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒரு பக்கம் இருந்த போதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது. பொழுது விடிந்ததும் நண்பர் திரு ஏ.பி.ஜனார்த்தனன் அவர்கள் அய்யாவை பார்க்க என்னை அழைத்துப் போனார். அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம். அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடையில் நன்றாக பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவை பார்த்துக் கொண்டே ஊமையாக நின்று இருந்து விட்டு மீண்டும் வணக்கம் கூறி வெளியே வந்து விட்டேன். பின்னர், பெரியார் உள்பட தலைவர்களுக்கு முதுநகரில் மதிய விருந்து. விருந்துக்கு என்னையும் அழைத்துச் சென்றனர். அப்போது அய்யா என்னை அன்புடன் நீ என்ன படிக்கிறாய் என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள். 11 வயதில் தந்தை பெரியாரால் தட்டிக் கொடுக்கப்பட்டு, அன்றே அறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட தலைவர் தான் இன்றைக்கு தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இல்லை இல்லை இந்திய துணைக் கண்டத்துக்கு சமூக நீதி வழிகாட்டியாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முடியும் வரை அல்ல மடியும் வரை: எண்பது ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரை எந்த உணர்ச்சி யோடு பார்த்து, உரிமைக்களத்தில் இறங்கி, தந்தை பெரியார் தலைமையிலும் பெரியருக்கு பின்னர் அன்னை மணியம்மையார் தலைமையிலும் பணியாற்றி, இருபெரும் தலைவர்களுக்குப் பிறகு, அவர்களின் பேராற்றலையும் – போராற்றலையும் உள்வாங்கி தனது நவீன அறிவாற்றல் மூலம் உரிமைக்களத்தில் போராடி வருகிறார்.
தந்தை பெரியார் கொள்கைகளை முடியும் வரையல்ல மடியும் வரை செய்வோம் என சூளுரைத்து ஜாதி ஒழிப்பு களத்திலும், மத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி பாதுகாப்பு, மாநில உரிமை, மொழி – இனமான மீட்பு, கல்வி உரிமை காப்பு களத்தில் 81 ஆண்டுகளாய் போராடி வருகிறார். போராட்டத்தோடு மட்டும் நில்லாமல் அதில் வெற்றியும் காணும் தலைவராய் திகழ்கிறார். தமிழர் தலைவர் கண்ட வெற்றிக்களங்களை குறிப்பிட தனியே நூல் தொகுக்க வேண்டும். சில குக்கல்கள் கொக்கரிக்கும் அப்படி என்ன செய்தார் வீரமணி என்று, அவர்களுக்காக ஓரிரு செய்திகள்.
1978 டிசம்பர் 20ஆம் தேதி அமைக்கப்பட்ட மண்டல் குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றி நன்கு ஆராய்ந்து, 1970 ஜூன் 30 ஆம் நாள் சென்னை பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர். குழுவினரிடம் 20 பக்கங்கள் அடங்கிய மனுவினை அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கையை அறிவியல் முறைப்படி தயாரிக்கும் படி வலியுறுத்தினார் அன்றைய தினம் பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பி.பி.மண்டல் பேசும்போது, காகாகலேல்கர் கமிஷன் அறிக்கை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டுவிட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையும் செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும் நாங்கள் தரப்போகும் அறிக்கை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் இருக்கிறது என்று வேண்டினார்.
மண்டலுக்கு பதில் அளித்து பேசிய தமிழ் தலைவர் ஆசிரியர் அவர்கள் நீங்கள் தரப்போகும் அறிக்கை தான் வெள்ளத்தில் இருந்து மின்சாரம் எடுப்பது போல குமுறல் கொந்தளிப்பை தடுத்து நிறுத்த போகிறது. துணிந்து அறிக்கையை தயாரியுங்கள் உங்களுக்கு பின்னால் பிற்படுத் தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது. ஒன்றை கூறிக் கொள்கிறோம் நீங்கள் தயாரித்து அளிக்கும் அறிக்கையை மற்ற கமிஷன் அறிக்கையை போல் அலமாரியிலேயே நாங்கள் தூங்க விடமாட்டோம் அவற்றை நிறைவேற்ற செய்ய வைப்போம் என்று சூளுரைத்து, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய துணைக் கண்டம் முழுவதிலும் போராட்டங்களையும், கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.
1990 ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் மண்டல் குழு பரிந்துரையை அமலாக்கும் முடிவை எடுப்பீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு 5.8.1990 அன்று தமிழர் தலைவர் தந்தி அனுப்பினார். மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் என்று 7.8. 1990 அன்று பிரதமர் வி.பி. சிங் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று பாராட்டிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வாய்ப்பு பெறக்கூடிய மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக இந்த ஆண்டு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வி.பி.சிங் என்று பெயரிடுங்கள் என்றார் நன்றி உணர்ச்சியோடு.
இதே போல் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது, 26.11.1993 முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 31 சி பிரிவின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனிச்சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தினார். பின்னர், 1994 ஜூலை 19 ஆம் நாள் குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார். 69 சதவீத இடஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து குடியரசு மேனாள் தலைவர் கியானி ஜெயில் சிங், ஒரு முதலமைச்சர், ஒரு உள்துறை அமைச்சர் செய்வதற்கு மேலாக உங்கள் இயக்கமும்- நீங்களும் செய்கிறீர்கள் என்று பாராட்டினார். அரை வேக்காடுகள் நன்றியோடு தமிழர் தலைவரின் உழைப்பை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஏன், அண்மைக்காலத்தில் நீட் தேர்வு எனும் மருத்துவ கல்விக்கு நம்பிள்ளைகளை நுழையவிடாத் தேர்வை ஒன்றிய அரசு புகுத்திய போது, அதை கண்டித்து 2017 ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர ஊர்தி பரப்புரை பயணத்தை நடத்தினார். அன்று நீட் தேர்வு ஆபத்து குறித்து பலரும் அறிந்திராத நிலையில் அதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை மணி அடித்தவர்தான் தமிழர் தலைவர் வீரமணி. நீட்டுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் தொடர்ச்சியான போராட்டங்களால் தமிழ்நாடு அரசு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஸ்டாலின் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் 2 முறை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றியும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் இளம் தலைவர் ராகுல் காந்தி முழங்குகிறார் என்றால் அதற்கு அடிப்படை காரணம் தமிழர் தலைவரின் நீட் எதிர்ப்பு பரப்புரை தான்.
இதுபோல் எத்தனையோ வரலாற்று சாதனைகளையும், இயக்கத்திற்கு சூழ்ச்சிக்காரர்கள் செய்த சதிகளையும் முறியடித்த சரித்திரத்தையும் சொல்லலாம். ஆனாலும் வேண்டாம். நாகரீகம் கருதி.
தமிழர் தலைவருக்கு முளைக்கும் புதிய சிறகுகள்
தந்தை பெரியார் அன்னை மணியம்மையாருக்குபின் இயக்க தலைமையேற்ற தமிழர் தலைவருக்கு சான்றோர்கள், நீதி அரசர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள் என எத்தனையோ பேர் துணை நின்றனர். அவர்களின் பலர் இயற்கையின் கோணல் புத்தியால் மறைந்து போயினர். தமிழர் தலைவர் அவர்களின் சிறகுகளாய் இருந்தவர்கள் ஒவ்வொருவராய் உதிர்ந்தாலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இயக்க பொறுப்பாளர்கள்,இளைஞர் படை, மாணவர் படை ,மகளிர் படை என ஒவ்வொரு சிறகாய் நாள்தோறும் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த சிறகுகளை துணையாக்கிக்கொண்டு பெரியார் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என உழைத்து வருகிறார்.
வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்!
இந்தப் பேரியக்கம் இன்றைக்கும் மற்றவர்கள் பார்த்து அஞ்சுகின்ற அளவிற்கு நடைபெறுகிறது என்றால், காட்சி அளிக்கிறது என்றால், பெரியார் இல்லாவிட்டாலும் என்னுடைய இளவல் வீரமணியைப் போன்றவர்கள் இருக்கின்ற காரணத்தினாலேதான். பெரியார் விட்டுச்சென்ற எந்த உடைமைகளையும், கொள்கை உட்பட எதையும் காப்பாற்றுவதற்கு திறன் உடையவர் யார் யார் யார் என்ற கேள்விக்குக் கிடைக்கின்ற ஒரே பதில்- வீரமணியார்! வீரமணியார்! வீரமணியார்! என்பது தான். என்ற கலைஞரின் பாராட்டுதலோடு நிறைவு செய்வோம்.
உங்கள் தலைமையில் பெரியார் பணி முடிப்போம்.
80 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரை சந்தித்து, ஒரே தலைவர், ஒரே கொடி என்று வாழும் உன்னத தலைவரே உங்கள் தலைமையில் பணி செய்கிறோம். இது எங்கள் வாழ்நாள் பயனாய் கருதுகிறோம்.