மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பருவ மாறுபாட்டால் வனங்கள் அழிந்து நீண்ட சவானா புல்வெளிச்சமவெளிகள் உருவாகியது. அதுவரை மரங்களில் வாழ்ந்துவந்த ஏபிஸ் எனப்படும் குரங்கினங்கள் முதல் முதலாக பல்லாயிரம் கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள புல்வெளிகளை கடக்கவேண்டிய கட்டாயத்தினால் முதல் முதலாக இரு கால்களில் நடக்கத் துவங்கினர். இங்கிருந்து தான் ஹோமோசெபியன்ஸ் என்ற மனித இனத்தின் வரலாறு தோன்றுகிறது.
ஒலிம்பிக்கின்
மனித நேயத் தத்துவம்
அப்படி புல்வெளிகளில் வாழ்ந்த மனிதர்கள் சிந்திக்கத் துவங்கினர். அவர்கள் குழுக்களுக்குள் இருந்த போது வேட்டையாடும் திறனையும், சண்டையிடும் திறனையும் வளர்த்துக் கொள்ள விளையாட்டை ஒரு பொழுது போக்காகத் தான் தொடங்கினர். பின்னர் அதனை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட போட்டிகளாக மாற்றி அமைத்தனர். பதக்கங்கள், பயிற்சிக்கான தேவைகள், எனப் பல்வேறு அம்சங்கள் சேர்ந்துகொண்டன. ஒலிம்பிக் போட்டிகள் அவற்றின் உச்சம்.
ஒற்றுமைக்கான தலம்: ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை, பதக்கம் வெல்வதைவிடவும் பங்கேற்பதே மிகப் பெரிய வாய்ப்பு. எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, போட்டி நடக்கும் தருணத்தில்தான் ஒருவரையொருவர் விஞ்ச மோதிக் கொள்வர். போட்டி முடிந்ததும் வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாகப் பழகுவார்கள்.
பல்வேறு விளையாட்டுகளின் தொகுப்பாக, பன்னாட்டு அளவில் நிகழும் ஒலிம்பிக் திருவிழாவில்தான் உலகின் வெவ்வேறு வண்ணங்கள் சங்கமித்து ஒற்றுமை என்னும் ஒரு புதிய நிறம் உருவாகும். முதன்முறையாக, பொ.ஆ.மு. (கி.மு.) 776இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஒரு விழாவாக ஆரம்பிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடுகள் அதனால் பொருளாதார ரீதியாகப் பெரும் பலன்களை அடைந்து விடுவதில்லை. ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்படும் மைதா னங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்கள் போன்றவற்றுக்கும் இதர ஏற்பாடுகளுக்குமான செலவுகள் மிக அதிகம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் உலகமே எதிர்பார்த்துள்ள முக்கிய வீரர்கள்
பெற்றோரின் கனவை நினைவாக்க களக்கில் இறங்கிய லியோன் மார்ச்சண்ட் (பிரான்ஸ்) – நீச்சல்.
அய்ந்து முறை உலக சாம்பியனான இவர், ஒலிம்பிக் போட்டிகளின் முகமாக இருந்துள்ளார். இம்முறை நீச்சல் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வெல்வதற்கான முயற்சியில் உள்ளார்.
அதில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் தம் வசம் 15 ஆண்டுகளாக வைத்திருந்த 400 மீட்டர் தனிநபர் மெட்லி உலக சாதனையை 2023இல் முறியடித்ததும் ஒன்று.
இரு ஒலிம்பிக் நீச்சல் வீரர்களின் மகனான மார்ச்சண்ட், 200 மீட்டர் தனிநபர் மெட்லி (நான்கு வித நீச்சல் போட்டிகளை உள்ளடக்கியது), 400 மீட்டர் தனிநபர் மெட்லி மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை போட்டிகளில் உலக சாம்பியன் ஆவார்.
இவர், 200 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் மற்றும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை டபுள் போட்டிகளில் வெல்லும் முதல் நீச்சல் வீரராக முயன்று வருகிறார். அதற்காக, ஒரே நாளில் நடைபெறும் இரு போட்டிகளில் அவர் போட்டியிட வேண்டும்.
கடைசி ஒலிம்பிக் தங்கத்தை அள்ளக் காத்திருக்கிறேன்
– சிமோன் பைல்ஸ்
(அமெரிக்கா) – ஜிம்னாஸ்டிக்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் உலகின் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுவதைக் கடைசியாக ஒருமுறை பார்த்ததாகப் பலரும் நினைத்திருந்தனர்.
தன்னிடம் உள்ள நான்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களுடன் மேலும் சில பதக்கங்களைச் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்னாஸ்டிக்கில் காற்றில் சுழலும்போது ஏற்படும் மனத்தடை (twisting moves) காரணமாக டோக்கியோ போட்டிகளில் இருந்து விலகினார் சிமோன் பைல்ஸ்.
மீண்டும் உணர்ச்சிப்பூர்வமாக போட்டிகளுக்குத் திரும்பிய அவர், ஏழாவது ஒலிம்பிக் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றார். பின்னர் விளையாட்டில் இருந்து விலகியிருந்த அவர், ஜூன் 2023 முதல் மீண்டும் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கினார்.
அப்போதிருந்து பைல்ஸ் நான்கு தங்கப் பதக்கங்கள் உட்பட அய்ந்து உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்களை வென்றார். அவர் தன்னுடைய சிகிச்சையாளரைத் (therapist) தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
“மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நான் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளேன். இதற்காக மிகவும் உழைத்திருப்பதால், டோக்கியோவில் நடந்தது மீண்டும் நடக்காது” என இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் கூறியிருந்தார்.
நோவக் ஜோகோவிச்
(செர்பியா) – டென்னிஸ்
கிராண்ட் ஸ்லாம் எனும் டென்னிஸ் விளையாட்டின் பெரு வெற்றித் தொடர் போட்டிகளில் 24 முறை வென்றுள்ள ஜோகோவிச்சின் பதக்கங்களில் ஒலிம்பிக் தங்க பதக்கம் மட்டும்தான் இன்னும் சேரவில்லை.
அவருடைய முக்கிய இலக்காக பாரிஸ் 2024 இருக்கிறது என்பதில் எந்த ரகசியமும் இல்லை.
நான்கு முக்கியமான தொடர் போட்டிகளில் வெற்றியுடன், டோக்கியோ 2020 போட்டிகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான இலக்குடன் இருந்த ஜோகோவிச், அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் தோற்றார், மேலும் வெண்கல பதக்கத்தையும் அவரால் வெல்ல முடியவில்லை.
கடந்த காலங்களில் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றியுடன் திரும்பி வந்த ஜோகோவிச், இப்போதும் பெரும் ஏமாற்றம், தடைகளைக் கடந்து வலுவுடன் திரும்பி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோவா லைல்ஸ்
(அமெரிக்கா) – தடகளம்
அமெரிக்க தடகள வீரரான இவர், இம்முறை சில பெரிய இலக்குகளை நிர்ணயித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் , 100 மீட்டர், 200 மீட்டர், 4*100 மீட்டர் தொடர் ஓட்டம், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் என நான்கு தங்க பதக்கங்களை வென்ற ஒரே வீரர் என்ற பெயரைப் பெறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த ஆண்டு உலக உதகையர் பட்டம் போட்டிகளில் இவற்றில் முதல் மூன்று போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களை வென்றார். உலக தடகள உள்ளரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதன்முறையாகப் பங்கேற்ற இவர், 4*400 மீட்டருக்கான போட்டியில் தனக்கான இடத்தைப் பெற முயன்று வருகிறார்.
இதுவும் போதவில்லையென, ஜமைக்காவின் சிறந்த வீரரான உசைன் போல்ட்டின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் உலக சாதனைகளை முறியடிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 2020இல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017ஆம் ஆண்டில் உசைன் போல்ட் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபெயித் கிபிகோன் – தடகளம்
இருமுறை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் வாகையர் மற்றும் உலக சாதனையைத் தன்வசம் வைத்துள்ள கிபிகோன், “பிரகாசமான கோடைக்காலத்தை எதிர்நோக்கியுள்ளதாக” ஒலிம்பிக் போட்டிகள் குறித்துக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக வாகையர் பட்டப் போட்டிகளில் 1500 மீட்டர் – 5,000 மீட்டருக்கான போட்டிகளில் தான் வென்றதைப் போன்று, இம்முறையும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரு தங்கப் பதக்கங்களை வெல்ல 30 வயதான இவர் முயன்று வருகிறார்.
அவர், 5,000 மீட்டருக்கான உலக சாதனையை முன்பு படைத்தார். கடந்த ஆண்டு பாரிஸில் எட்டு ஆண்டுகளில் தனது முதல் போட்டியில் முத்திரையைப் பதித்தார். அதன் பின்னர் இச்சாதனை எத்தியோப்பியாவின் குடாஃப் செகேயால் தோற்கடிக்கப்பட்டது.
தனது தடகள வாழ்க்கையை 16 வயதில் ஆரம்பித்த கிபிகோன், 2011இல் நடைபெற்ற உலக ஜூனியர் நாடு கடந்த வாகையர் பட்டப் போட்டியில் வெற்றுக் காலில் ஓடித் தன்னுடைய முதல் தனிநபர் உலக சாதனையைப் படைத்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் தாயானபோது அது எப்படித் தனது மனநிலையை மாற்றியது என்பது குறித்து அவர் பேசியுள்ளார். நான்கு உலக வாகையர் பட்டப் பட்டங்களில் மூன்று பட்டங்களை அவர் தாயானதற்குப் பின்பே பெற்றார்.
நீரஜ் சோப்ரா
(இந்தியா) – தடகளம்
நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை 90 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
ஒலிம்பிக்கில் `டிராக் மற்றும் ஃபீல்ட்’ தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரரான சோப்ரா, பாரிஸில் தனது ஈட்டி எறிதல் போட்டியின் பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளார். டோக்கியோவில் அபார வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற முதல் ஆசிய தடகள வீரர் என்னும் பெருமையைப் பெற்றார்.
இந்தியாவுக்குப் போட்டியாகக் களமிறங்கும் தலைசிறந்த விளையாட்டு வீரரான பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் நதீம் என்பவர்தான் நீரஜ் சோப்ராவின் வலிமையான எதிரி.
டோக்கியோ 2020இல் ஒலிம்பிக் டிராக் அண்ட் ஃபீல்ட் பைனலுக்கு தகுதி பெற்ற பாகிஸ்தானின் முதல் தடகள வீரர் ஆன பிறகு நதீம் தனது சொந்த நாட்டு வரலாற்றைப் பெருமைப்படுத்தி உள்ளார். அவர் கடந்த ஆண்டு உலக வாகையர் பட்டப் போட்டிகளில் நீரஜ் சோப்ராவுக்கு அடுத்த இடத்தில், வெள்ளி வென்றார். அதோடு தடகளத்தில் தனது பாகிஸ்தானில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் நபர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றார்.
ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ்
(ஜமைக்கா) – தடகளம்
வெற்றி தோல்வி என எல்லா சூழலையும் 37 வயதான ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் சந்தித்திருந்தாலும், அவரது ஐந்தாவது மற்றும் இறுதி ஒலிம்பிக்கில் சிறந்த திறனை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“எப்போதும் முடிவென்பதே கிடையாது” என்று மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனான ஹெல்லி இந்த மாதத் தொடக்கத்தில் கூறினார்.
அய்ந்து முறை 100 மீட்டர் உலக வாகையரான ஃப்ரேசர்-பிரைஸ் இந்த சீசனில் காயங்களுடன் போராடினார். ஆனால் தனது முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக விளையாடும் சக வீராங்கனை ஷெரிக்கா ஜாக்சனுடன் இணைந்து பாரிஸில் போட்டியிடுவார். அவர்கள் 4×100 மீ தொடர் ஓட்டக் குழுவில் இடம் பிடித்திருப்பதால், ஜமைக்கா தங்கள் பட்டத்தைக் காக்க முயல்கிறது.