‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது!
இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட இயக்கமாகும்!
சென்னை, ஆக. 2 ‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது! இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம்,
திராவிட இயக்கமாகும் என்றார் திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புதுமை இலக்கியத் தென்றலின்
ஆயிரமாவது நிகழ்வு!
கடந்த 29.7.2024 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் புதுமை இலக்கியத் தென்றலின் ஆயிரமாவது நிகழ்ச்சி யில் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
31.7.2024 ஆம் தேதியன்று ‘விடுதலை’யில் வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி
வருமாறு:
கவிஞர் அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது சொன்னதுபோன்று, அறிமுகம் இல்லாதவர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தாலும், அவர்களின் முகவரியைத் தேடி, அவர்களை அழைத்து நான் பாராட்டுவேன். அவர்களுக்கு அது மிகவும் வியப்பாக இருக்கும்.
ஏனென்றால், இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் நம்முடைய சமுதாயத்திற்குத் தேவை.
ஆகவேதான், துணிந்து இப்படிப்பட்ட புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இராமாயணத்தைப்பற்றி எழுதியிருக்கிறார்; பெரியாரைப்பற்றி எழுதியிருக்கிறார்; ஆய்வுகள்பற்றி எழுதியிருக்கிறார். நிறைய பேர் எழுதுவார்கள், ஆனால், இவற்றையெல்லாம் வெளியிடக் கூடிய அளவிற்குத் துணிச்சலாக வரமாட்டார்கள். ஏனென்றால், இதில் பணத்தை முதலீடு செய்வதற்குப் பயப்படுவார்கள். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், நம்முடைய காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள், புரட்சிகரமான கருத்துகள், முற்போக்கான கருத்துகள், வாய்ப்புள்ள கருத்துகளைப்பற்றியெல்லாம் புத்தகங்களை நான் வெளியிடுகிறேன் என்று சொல்லி, அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
நம்முடைய அச்சம் அகற்றிய அண்ணல்!
ஆகவேதான், அவர்களை முன்பும் பாராட்டினோம்; நம்முடைய அச்சம் அகற்றிய அண்ணல் என்ற சொல்லக்கூடிய டபிள்யூ.பி.ஏ.சவுந்திரபாண்டியனார் அவர்களைப்பற்றி புத்தகம் வெளியிட்டபொழுதுகூட, அந்த புத்தகம் சரியாக போகவில்லை என்று சொன்னார்கள். அவற்றையெல்லாம் நீங்கள் பரப்ப வேண்டும்.
திராவிடத்தால் எழுந்திருப்பார்களே தவிர, வீழமாட்டார்கள்!
அதேபோன்று, ‘திராவிட மரபணு’ புத்தகம் எப்படிப்பட்டது தெரியுமா?
ஆரியமா? திராவிடமா?
‘‘திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று சொல்கிறார்களே, திராவிடத்தால் ஒருபோதும் வீழமாட்டார்கள்; டாஸ்மாக்கினால் வீழ்ந்தி ருப்பார்களே தவிர, திராவிடத்தால் வீழமாட்டார்கள். திராவிடத்தால் எழுந்திருப்பார்களே தவிர, வீழமாட்டார்கள்.
திராவிட மரபணுதான் எல்லாவற்றிலும், அது எங்கே இருக்கும் சொல்ல முடியாது.
எழுத்தாளர் ஜெயகாந்தனை, திராவிடத்திற்கு எதிரி என்றுதான் எல்லோரும் சொன்னார்கள். ஆனால், இந்தப் புத்தகத்தைப் படித்தீர்களென்றால், இவர் போன்ற எழுத்தாளர்கள்மூலம்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் அப்பா
நகர திராவிடர் கழகத் தலைவர்!
உங்களுக்கெல்லாம் தெரியும், நானும், நண்பர் ஜெயகாந்தனும் இளமைக்கால நண்பர்கள். இன்னுங்கேட்டால், எங்கள் வாழ்நாளில், ஒருமையில் பேசிக்கொள்ளக்கூடிய ஒரு சில மிஞ்சிய நண்பர்களில் அவரும் ஒருவர். ‘‘வாடா, போடா” என்று பேசிக் கொள்வோம். ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், அவருடைய அத்தைதான் திண்ணைப் பள்ளிக்கூட முதல் ஆசிரியர். அவருடைய அப்பா அவர்கள் நகர திராவிடர் கழகத் தலைவர்.
சோ அவர்கள் நடத்திய ‘துக்ளக்’ பத்திரிகையில், ‘‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்” என்ற தலைப்பில், அவருடைய வாழ்க்கை வரலாற்றைப்பற்றி எழுதியிருப்பார். அதில், தொடக்கமே என்னைப்பற்றித்தான் எழுதியிருப்பார். அவர் குடியிருந்தது அக்கிரகாரத் தெரு. அதற்கு நேர் எதிர் தெருவில்தான் எங்கள் வீடு.
‘‘சாரங்கபாணி ஒழிக, சாரங்கபாணி ஒழிக’’ என்று வேகமாகக் குரலெழுப்புவேன். அதைப்பற்றி கவலைப்படாமல், இவர் திரும்பிப் போவார் என்று எழுதியிருப்பார் ஜெயகாந்தன்.
நாங்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்போம். நண்பர்களாக இருந்தோம். அவருடைய தாயார் எங்களுக்கெல்லாம் உணவுப் பரிமாறுவார். எங்களுக்கெல்லாம் டியூசன் சொல்லிக் கொடுப்பார் அவருடைய அப்பா!
முருகேசன் ஜெயகாந்தன் ஆனார்;
சாரங்கபாணி வீரமணி ஆனேன்!
அப்பொழுது அவர் சொல்வார், ‘‘முருகேசன் அடாவடித்தனமாக இருப்பான்பா, நீ நல்ல பிள்ளை, ஒழுங்கா சாப்பிடு” என்பார்.
ஜெயகாந்தன் அவர்களுடைய இயற்பெயர் முருகேசன். அவருக்கு ஜெயகாந்தன் என்ற பெயர் வந்தது எனக்குத் தெரியாது. இடையில் தொடர்பில்லாமல் போனது.
ஒரு நாள் சட்டக்கல்லூரி விடுதியில் தங்கி யிருந்த பொழுது, ‘‘ஜெயகாந்தன் என்கிற நண்பர் உங்களுடைய வகுப்புத் தோழராம், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறாராம்” என்று சொன்னார்கள்.
‘‘எனக்கு ஜெயகாந்தன் என்று யாரும் நண்பர் இல்லை.” யாரோ தவறாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றேன்.
‘‘இல்லை, இல்லை. உங்களோடு படித்தவராம், உங்கள் ஊர்க்காரராம், மிக நெருக்கமானவர் என்று சொல்கிறாரே, நீங்கள் இல்லை என்று சொல்கிறீர்களே” என்றார்கள்.
‘‘இல்லை, இல்லை. ஜெயகாந்தன் என்று யாரும் எனக்குத் தெரியாது” என்றேன்.
பிறகுதான் விசாரித்தோம், ‘‘ஜெயகாந்தன் யார் என்றால், நம்முடைய முருகேசன்தான், ஜெய காந்தன் ஆகியிருக்கிறார். சாரங்கபாணி, வீரமணி ஆனதுபோல்” என்று தெரிய வந்தது.
திராவிட இயக்கத்தினுடைய மரபணுக்கள் – திராவிடர் கழகத்துக்காரர்களுக்கு மட்டுமல்ல, திராவிட இயக்கத்துக்காரர்களுக்கு மட்டும் அந்த மரபணு வரும் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.
திராவிட இயக்க எதிர்ப்புக் காட்டியவர்கள் எல்லாம், கடைசியில் இந்தத் திராவிட மரபணுவைப் பிடித்துத்தான், சார்ந்துதான் அவர்களுடைய வாழ்க்கை அமைந்தது.
அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். அது மா.பொ.சி.யிலிருந்து ஜெயகாந்தன் வரையில்.
கலைஞர், ஜெயகாந்தன், நாங்கள் எல்லோரும் பங்கேற்ற ஒரு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. தன்னுடைய கடைசி காலகட்டத்தில் ஜெயகாந்தன் அவர்கள், கலைஞரைப்பற்றி குரூரமான ஒரு எண்ணத்தை மனதில் வைத்திருந்தவர், அதைத் தலைகீழாக மாற்றிக்கொண்டார்.
ஏனென்றால், ஜெயகாந்தன் அவர்கள் வெள்ளை உள்ளம் படைத்தவர். ஒருவரை எதிர்ப்பதா? கடுமை யாக எதிர்ப்பார். ஆதரிப்பதா, பாராட்டுவதா எந்த எல்லைவரையிலும் சென்று பாராட்டுவார். சில பேருக்கு நடுவில் ஓரிடத்தில் நிற்கவேண்டும் என்கிற எண்ணமே இருக்காது.
‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்!”
அந்தக் கூட்டத்தில் கலைஞர் அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார். நான் உரையாற்றும்பொழுது, ‘‘இன்றைக்குக் கலைஞரைப்பற்றி ஜெயகாந்தன் பேசிய தைக் கேட்டிருப்பீர்கள். உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருந்திருக்கும். அதற்குப் பெரிய விளக்கங்களை நான் சொல்ல விரும்பவில்லை. ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் ‘‘சில நேரங்களில் சில மனிதர்கள்” என்று நான் சொன்னவுடன், கலைஞர் உள்பட அனைவரும் சிரித்துவிட்டனர். ஜெயகாந்தன் அவர்களும் மகிழ்ச்சியாக சிரித்தார்.
இன்னொரு பெரிய மகிழ்ச்சி எனக்கு என்னவென்றால், திராவிட இயக்கக் கொள்கைகளைவிளக்கி, பலமுறை நாமெல்லாம் பேசுவதைவிட, ஜெயகாந்தன் மகள் பேசுகிறார், இங்கேயும் பேசியிருக்கிறார். என்னைக் கட்டிபிடித்துக் கொண்டு ‘‘எனக்கு நீங்கள் பெரியப்பா!” என்றார்.
திராவிட இயக்கத்திற்கு எதிரான
செய்திகள் என்றால்…
நம் நாட்டு ஊடகங்கள், மற்றவையெல்லாம் பல விஷயங்களை எதிர்மறையாக சிந்திப்பார்கள். திராவிட இயக்கத்திற்கு எதிரான செய்திகள் என்றால், அதைப் பெரிய அளவிற்கு வெளியிடுவார்கள். திராவிட இயக்கத்திற்கு ஆதரவான செய்திகள் என்றால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
ஆனால், அந்த மாதிரி இடத்தில், அங்கங்கே, இங்கங்கே என்று இருப்பதையெல்லாம், எது, எது என்று கண்டுபிடிக்க முடியாத இடத்தில் எல்லாம், திராவிட மரபணுவை – எப்படி பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்து கண்டுபிடிப்பார்களோ, அதுபோன்று நம்முடைய நரேந்திர குமார் அவர்கள், இதில் சிறப்பான அளவிற்கு, மரபணுக்கள்பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்து ஆய்வு செய்வார்களோ, அதுபோன்று செய்திருக்கிறார்கள்.
இலக்கிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள்!
காரணம், அவர்களுடைய அடிப்படை. இள மைக்காலத்திலிருந்து அந்த வாய்ப்பு இவருக்கு வந்தி ருக்கிறது. அதுமட்டுமல்ல, இவருடைய குடும்பம் இலக்கிய குடும்பம். அவருடைய தந்தையார், அதேபோன்று நம்முடைய இராசா.அருண்மொழி அவர்கள் – எல்லோரும் இலக்கிய குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அதனால்தான் இவர்களையெல்லாம் அழைத்துப் பாராட்டவேண்டும் என்று நினைத்தோம்.
நீண்ட நாள்களாக, புதுமைத் தென்றல் கூட்டத்தில், இலக்கியத்தைப்பற்றி பேசவேண்டும்; எது இலக்கியம்? எப்படிப்பட்டது இலக்கியம்? அய்யா வினுடைய இலக்கியத் தன்மை எப்படிப்பட்டது? என்பதைப்பற்றியெல்லாம் சொல்லவேண்டும் என்று நான் நிறைய குறிப்புகளை எடுத்து வைத்தேன்.
புதுமைத் தென்றல் என்பது
பழைமையைச் சாடியிருக்கிறது
அடுத்ததாக, முழுக்க முழுக்க இலக்கிய ரீதியாக உரையாற்றுவதற்காக புதுமை இலக்கியத் தென்றல் கூட்டத்திற்குத் தேதி கொடுக்கிறேன்.
இலக்கியம் என்றால் என்ன?
ஏன் அது புதுமையாக இருக்கவேண்டும்?
ஏன் அது தென்றலாக இருக்கவேண்டும்?
அந்த அடிப்படையில் வரும்பொழுது, தென்றல் என்று சொன்னால் மட்டும் போதாது; அந்தத் தென்றல், புதுமைத் தென்றலாக இருக்க வேண்டும் அது. அந்தப் புதுமைத் தென்றல் என்பது பழைமையைச் சாடியிருக்கிறது.
‘‘பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்று அந்தக் காலத்திலேயே இருக்கிறது என்று எல்லா புலவர்களும் சொல்வார்கள்.
ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில், புதுமையை அவர்கள் சீக்கிரம் அவர்கள் செரிமானம் செய்துகொள்வதில்லை. ஆனால், புதுமை என்பதுகூட வசதிதான். இன்றைக்கு யாராவது செல்போன் இல்லாமல் இருக்கிறார்களா?
மூவேந்தர் காலத்தில், முப்பத்து முக்கோடி தேவர்கள் காலத்தில் செல்போன் இருந்ததா? என்று பார்த்தா வாங்குகிறோம். அன்றைக்கு செல்போன் இல்லை என்பதால், வாங்காமலா இருக்கிறோம்.
பழையன கழிதல் என்பது கிடையாது;
புதியன புகுதல் உண்டு!
இன்றைக்குப் புதுமை என்று வரும்பொழுது, ‘‘பழையன கழிதல், புதியன புகுதல்” – ஆனால், நம்மைப் பொறுத்தவரையில், பழையன கழிதல் என்பது கிடையாது. புதியன புகுதல் உண்டு; பழையன இருத்தல்வேண்டும்.
அய்யாதான் சொல்வார், ‘‘ரத்தத்தை முழுவதும் வெளியே எடுத்துவிட்டு, புதிய ரத்தம் பாய்ச்சவேண்டும். என்று ஏன் சொல்கிறேன் என்றால், பழைய ரத்தத்தோடு, புதிய ரத்தம் கலந்தது என்றால், இதுவும் வீணாகிவிடும் என்பதால்தான்” என்று சொன்னார்.
அதுபோன்று, புதுமைத் தென்றலினுடைய அடிப்படை என்னவென்று சொன்னால், புதிய கருத்துகள், புதிய சிந்தனைகள், புதிய ஆக்கங்கள் இவையெல்லாம் வரவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆகவேதான், இந்தப் புதுமை இலக்கிய தென்றலின் நிகழ்வில், நல்ல அறிஞர் பெருமக்கள், நல்ல கருத்தாளர்கள், சிறந்த எழுத்தாளர்கள், வல்லுநர்கள் போன்றவர்களை அறிமுகப்படுத்தி, மேலும் மேலும் வலு சேர்க்கவேண்டும்.
திராவிட இயக்கம் என்பது அறிவுப் பஞ்சம் உள்ள ஓர் இயக்கமல்ல. இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட இயக்கமாகும்.
நம்மை எதிர்ப்பவர்கள்கூட ஒரு காலத்தில், பெரிய பெரிய தமிழறிஞர்கள் – ‘குடிஅரசு’ ஏட்டினை எடுத்துப் பார்த்தீர்களேயானால், இவ்வேட்டில் எழுதாத தமிழறிஞர்களே கிடையாது.
இரா.பி.சேதுபிள்ளை, சாதாரணமாக வெளியே தெரியாத காலத்தில், ‘குடிஅரசு’வில் கட்டுரை எழுதியி ருக்கிறார். அதேபோன்று, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கிறார்கள். முதலில் இவர்கள் எல்லாம் எதிர்த்தவர்கள் அவர்களுக்கு அறிமுக வாய்ப்புகூட இங்கேதான்.
அதுமட்டுமல்ல, தந்தை பெரியாரைப் பொறுத்த வரையில், அவருக்குரிய சிந்தனை என்னவென்றால், பார்ப்பனர்கள், யாரை எதிர்க்கிறார்கள் என்பதைப் பார்ப்பார்கள். மறைமலையடிகளார் சைவத்தை ஆதரிப்பவர்; நமக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு உண்டு; நாம் வேறு – அவர் வேறு என்று தந்தை பெரியார் அவர்கள் கருதவில்லை.
திராவிட இயக்க மரபணு என்பது
கொள்கையைச் சார்ந்தது!
அறிவுரைக் கொத்தா, அதற்குத் தடையா? உடனே ‘குடிஅரசு’ இதழில் பதில் எழுதினார்.
ஆகவே, திராவிட இயக்க மரபணு என்பது கொள்கையைச் சார்ந்தது.
எனவேதான், அதை மிக அழகாக, சிறப்பாக எடுத்துச் சொல்லியுள்ளதை இன்றைய காலகட்டத்தில், நம்முடைய இளைஞர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும்.
திராவிடம், திராவிடத்தினால் என்ன லாபம் என்றெல்லாம் குழப்பக்கூடிய வியாபாரிகள், அரசியல் வியாபாரிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள், எதிரிகளிடம் தங்களை விற்றுக்கொண்டவர்கள்.
அதனால்தான் புரட்சிக்கவிஞர் அவர்கள் முதல் தொகுப்பிலேயே எழுதினார். ‘‘உன்னை விற்காதே!’’ என்ற தலைப்பில்.
நல்ல விலைக்கு விற்றுக்கொள்;
குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறாயே!
அய்யா அவர்கள் ஒருபடி மேலே சென்று, ‘‘உன்னை விற்றுக்கொள்வதைப்பற்றிக்கூட நான் கவலைப்படவில்லை. நல்ல விலைக்கு விற்றுக்கொள்; குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறாயே!” என்றார்.
ஆகவேதான், நல்ல அளவிற்கு இந்த சிந்தனை களையெல்லாம் எடுத்துச் சொல்லி, புதுமை இலக்கி யத் தென்றலின் ஆயிரமாவது நிகழ்வில், நல்ல அறிமுகங்கள் – மேலும் புதிது புதிதாக எழுதுகின்ற கருத்தாளர்களையெல்லாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரவேண்டும்; அவர்களைப் பாராட்டவேண்டும்.
பாராட்டுகின்ற நேரத்தில்கூட நண்பர்களே, இங்கே அருமைத் தோழர் எழுத்தாளர், புரட்சிகரமான சிந்த னையாளர் நரேந்திரகுமார் அவர்களைப் பாராட்டுகின்ற நேரத்தில், அவரை மட்டும் அழைத்துப் பாராட்டுவதில் பயனில்லை. அவரது வாழ்விணையரையும் அழைத்து நாம் பாராட்டுகிறோம்.
எல்லா இடங்களிலும் இந்த முறையைக் கையா ளுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள் முதலில். அவர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள், அவர்கள் நேரிடையாக எழுதவில்லையே என்று நினைக்காதீர்கள். அவர்கள் உங்களுக்குத் துணையாக இருப்பதினால்தான், உங்களால் எழுத முடிகிறது.
குறை சொல்கின்ற புத்திதான் நம்முடைய மக்களுக்கு அதிகமாக இருக்கும்!
ஆகவே, எல்லா இடங்களிலும் தாராளமாக அவர்களை நீங்கள் பாராட்டவேண்டும். ஆனால், பாராட்டுவதைவிட, குறை சொல்கின்ற புத்திதான் நம்முடைய மக்களுக்கு அதிகமாக இருக்கும்.
தந்தை பெரியார் சொல்வார், ‘‘ஒருவரை பாராட்டவேண்டும் என்ற நினைத்தால், உடனே பாராட்டிவிட வேண்டும். இல்லையென்றால், புத்தி மாறிவிடும்” என்பார், அவருடைய மொழியில்.
அற்புதமான ஒருவரை கண்டுபிடித்து அறி முகப்படுத்தவேண்டும்.
அதன்மூலமாக நிறைய பேருக்கு அந்தச் செய்தி போகிறது.
கீழடியில் ஏன் புதையலைக் கண்டுபிடிக்கின்றோம்; அது நம்முடைய மரபு என்று ஏன் சொல்கிறோம்?
‘‘எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல நண்பர்களே, எது நம்மை இணைக்கிறது” என்பதுதான் மிகவும் முக்கியம்.
சங்கராச்சாரியார்களைப்பற்றி இங்கே சொன்னார்கள். இரண்டு சங்கராச்சாரியார்களும் ஜெயிலுக்குப் போனது என்ன? பெயிலுக்காக அவஸ்தைப் பட்டது என்ன? அவர்கள்மீது சொல்லப்பட்ட குற்றம் என்ன?
ஆனால், அவையெல்லாம் இன்றைக்கு மறந்து போயிற்றே? எல்லாவற்றையும் அழித்துவிட்டார்களே! அதேநேரத்தில், நம்மாட்களைப்பற்றி என்ன சொல்கிறார்கள், ‘‘அவன் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனவன்; அவன் கொலைகாரன்” என்றெல்லாம் சொல்கிறார்களே!
ஆகவேதான், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்றால், புதுமைத் தென்றலினுடைய அந்த விளைவுகள், திராவிட மரபணு கொஞ்சம் வெளிப்பட்டு வந்தாலும், அதனை அகலப்படுத்துங்கள்; அவரைப் பாராட்டுங்கள். உற்சாகப்படுத்துங்கள். அந்த ஆக்கமும், ஊக்கமும் தாராளமாகப் பெருகவேண்டும்.
குறைகளைப் பார்க்காதீர்கள்;
அவர்களுடைய நிறைவைப் பாருங்கள்!
அவரை எனக்குப் பிடிக்காது; இவரை எனக்குப் பிடிக்காது; அவரிடம் அந்தக் குறை இருக்கிறது; இவரிடம் இந்தக் குறை இருக்கிறது என்று குறைகளைப் பார்க்காதீர்கள்; அவர்களுடைய நிறைவைப் பாருங்கள். அந்தப் பழக்கம் வரவேண்டும். அதுதான் இன உணர்வு. அந்த இன உணர்வுதான் திராவிட மரபணு. அந்த மரபணு வேலை செய்தால், இந்த இனத்தை வெல்ல எவராலும் முடியாது. சூழ்ச்சிகள், தந்திரங்கள் இவையெல்லாம் தோற்றுப் போகும். அதற்காகத்தான் பாராட்டுகிறோம்.
இன்னும் ஏராளமாக எழுதுங்கள்; முன்பே நான் ஓய்வு பெற்றுவிட்டோமே என்று நினைக்காதீர்கள். எழுத்துகளுக்கு இன்னும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஏடுகளில் எழுதுங்கள் – உங்கள் எழுத்தை யார் வெளியிடவில்லையானாலும், நாங்கள் வெளியிடுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நாம் சமூகத்திற்காக வாழவேண்டும்.
‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை;
தனக்காகவும் பிறக்கவில்லை” என்று தந்தை பெரியார் சொன்னார்.
ஆகவே, சமூகத்திற்கு நம்முடைய பணி என்ன?
ஓய்வு பெற்றாலும், பதவிக்குத்தான் ஓய்வே தவிர, தொண்டுக்கு ஓய்வு என்பது கிடையாது.
ஆகவேதான், அற்புதமான நல்ல நிகழ்வு இது – இந்நிகழ்வில் எல்லோரையும் அழைத்துப் பாராட்டி இருக்கிறீர்கள். இந்தப் பாராட்டு உணர்வைப் பெருக்குங்கள்; பாராட்டுவதற்காக ஆளைத் தேடுங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்தி, உற்சாகப்படுத்தி, இந்த முறை யாரைப் பாராட்டவேண்டும் என்று நினையுங்கள்.
ஒரு காலத்தில் நம்மைத் தூற்றினார்கள்; நம்மை வாட்டினார்கள்; நம்மை விரட்டினார்கள். அவர்களையெல்லாம் கட்டி அணையுங்கள்; தேடிப் பிடியுங்கள், பாராட்டுங்கள், உற்சாகப்படுத்துங்கள்!
வெல்லுவது திராவிடம் –
இது நிச்சயம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.