இன்றைய இளைய தலைமுறையினரே, நன்கு புரிந்துகொள்ளுங்கள்!
1. சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி?
– இது முன்னுரைதான்!
தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். 1925இல் சமூக நீதிக்காகவும் மனித சமத்துவம், சுயமரியாதைக்காகவும் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் – மக்கள் இயக்கம்!
அது ஒரு விசித்திர இயக்கம்! வேறெங்கும் எளிதில் காணப்பட முடியாத கருத்தியலும், செயற்பாடும் இணைந்து, விதை நெல்லை விளைச்சலாக்கிப் பார்த்து, வெற்றியை அறுவடை செய்து பயன் அனுபவித்து மகிழ்ந்த, மகிழும் ஓர் தனித்தன்மையான எதிர்நீச்சல் இயக்கம்!
“சுயமரியாதை” என்ற பெயர் கொண்ட இயக்கத்தை உலகில் எங்கு தேடினும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
தெரிந்தால் சொல்லுங்கள், மானிட வர்க்கத்தின் தன் மதிப்பை நினைவூட்டியும், அதனை அவர்கள் தக்கவைக்க சுதந்திரசிந்தனையைப் பயன்படுத்தி தெளிவடைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் லட்சியத்தில் பெரும் அளவில் வெற்றி கண்டு வருகிற ஓர் அதிசய இயக்கம்!
பொதுவாக, இயக்கம், அமைப்புகள் எல்லாம் மக்களுக்கு எதைச் சொன்னால், எழுதினால் பரப்புரை செய்தால், ‘இதமாக’ இருக்குமோ, அதனையே சொல்லி அந்தப் ‘பாமரத்தன குட்டையிலே’ ‘மீன்’ பிடித்து வாழும் அமைப்புகள் மலிவாகி, புற்றீசல் போல, திடீர் மழையினால் வளர்ந்து, படீரென்ற ஒருநாள் காணமற்போகும் வானவில் பல வண்ண ஜால இயக்கமல்ல – வர்ணாசிரமத்தின் வேர் அறுக்க ஊர் முழுக்க, உலகம் முழுக்கப் பரவிடும் இயக்கமே இந்தப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம்!
‘கெட்ட பெயர்’ எடுக்கத் துணிந்தவரே எனக்குச் சீடராகத் துணிந்தவர்; என்னுடன் இணைந்தவர் – என்று கூறியவர் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார்.
கசப்பு மருந்தினை உண்டு செரிமானம் செய்து செழித்து நிற்கும் சேனையே அவரது சுயமரியாதைப் பட்டாளம்!
பன்னூறு ஆண்டுகளாய் பழைமைப் பாசியையே தின்று வந்தவர்கள் மத்தியில் ஒரு நூறாண்டுக்குள் ஓங்கி முழங்கிட, தன் சொந்த மானம் சிற்சில நேரங்களில் பறிக்கப்பட்டு – அவதூறு சேற்றை அள்ளி வீசினும், தந்தை பெரியார் இனமானமே எனக்கு முக்கியம் என்று கருதி, மானிட சமூகத்தை மானமும் அறிவும் பெற்ற மனிதகுலமாக மாற்றமடையச் செய்ய மகத்தான விலையைத் தந்து – வெந்து நொந்து போகாமல், விரக்தியடையாமல் வீரத்துடனும் விவேகத்துடனும், நெருப்பாற்றை நீந்தி, வெற்றிவாகை சூடிய தலைமையின் தனி மனித இராணுவமாய் மிளிர்ந்து கருத்தொளி பாய்ச்சும் கருஞ்சட்டை அணியாய் இன்று உலகமே பார்த்து கைதட்டி வரவேற்க வைத்தார்.
“எவரையும் நம்பி நான் இந்தக் களத்தில் இறங்கத் துணியவில்லை; என்னையே நம்பி, எனது உழைப்பையே முன்னிறுத்தி, மானவமானம் பற்றி எண்ணாமல், நன்றி பாராத பணியாக, எனக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் தருகிற பணியாகியுள்ளதே எனக்கு முக்கியம். அதைப் பொதுநலம் எனறுகூடக் கூறாமல், எனது ‘சுயநலம்’தான்” என்று கூறிய மாமேதை மகத்தான சுயசிந்தனையின் சொரூபமான நம் அறிவு ஆசான்!
தான் பிறந்த மண்ணில் சிறுவனாக ஓடி விளையாடியபோது அவர் கண்ட ஜாதியின் ஆணிவேர் அசைக்கப்பட்டு, பல வெட்டுக்களால் வீழ்த்தப்படும் நிலையில் ஜாதி, தனது இறுதிக் கட்டப் போரை நடத்தும் களத்தில் தடுமாறித் தத்தளிக்கிறது இன்று!
தனி மனிதராக நின்று துவக்கப்பட்ட அந்த இயக்கம் இன்று ஆழ்கடலாய், பெரு இமயமாய் வளர்ந்தோங்கி வருகின்றது. “உலகம் பெரியார்மயம் – பெரியார் உலகமயம்” என்ற பேசு சுயமரியாதை உலக தகத்தாய ஒளிப் பிழம்பாய், காரிருள் நீக்கிய கதிரவனின் ஒளிப் பாய்ச்சல் தந்த சமத்துவ பூமியாய் பேத உலகு மாறி வருகிறது!
போர் நடத்தாமலேயே வெற்றி கண்ட புதுமையாளர் அவர்!
இது உலகம் இதுவரை காணாத ஓர் அமைதிப் புரட்சியின் அறிவுச் சாதனை!
அறத்தால் வென்றுகாட்டிய அரிய பாடம்! ரத்தம் சிந்தினால்தான் புரட்சி; ஆயுதங்கள் எடுத்தால்தான் முடியும்! என்பதை மாற்றி, அறிவாயுதமும், மற்றவரை வருத்துவதை விடுத்து, நம்மையே நாம் வருத்தியாவது – கொண்ட கொள்கையின் வெற்றிக்கொடி பறக்க வைப்பதே விவேகத்தின் வீரம் கொழிக்கும் தீரச் சாதனை என்பதை வெறும் பேச்சால் அல்ல, வெறும் எழுத்தால் அல்ல, (அவையும் கருவிகளே) செயலால் செதுக்கி எங்கள் செயற்கரிய செய்த பெரியார் இயக்கம் – எப்படி வளர்க்கப்பட்டது துவக்க நாளில்? அறிய ஆவல் கொள்ளுங்கள்…
(அடுத்து பார்ப்போம்…)