2024–2025ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை பொது நிலைக் கண்ணோட்டத்தில் இன்றி, பச்சையான அரசியல் கண்ணோட்டத்தோடு, ஓர வஞ்சனையாகத் தயாரிக்கப்பட்ட ஒன்று.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைக் கண்டித்து, நேற்று (31.7.2024) சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அருகே திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2024 நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறைகூட உச்சரிக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஏற்ெகனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்த அறிவிப்பு கூட இடம்பெறவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், புதிய ரயில் திட்டம், நெடுஞ்சாலை திட்டங்கள் பற்றியும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் உ.பி. மாநிலத்துக்குப் புதிய ஏழு மெட்ரோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டிற்குப் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
தொடர்ந்து மழைக்காலங்களில் சென்னையின் கடற்கரை ஓரநகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதற்காக வழங்கப்படும்
* பேரிடர் நிவாரண நிதி பற்றி வாயைத் திறக்கவில்லை,
* ‘சென்னை மெட்ரோ ரயில் அடுத்த கட்டத்துவக்கப்பணித் திட்டத்திற்கு நிதி,
* தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அதற்கான நிதி,
* தமிழ்நாட்டில் ஏற்ெகனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு எதுவுமில்லை.
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங் களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பு உயர்த்தப்படவில்லை.
* தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை அப்படியே குப்பையில் தூக்கி வீசியுள்ளனர்.
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரிக்கைகளை எழுப்பிய நிலையில், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் மழை நிவாரண அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.
* தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய ஒருசில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான்! எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல, அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
* “இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதற்கான அறிக்கை. இதில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்றுக்குத் திட்டங்களை அறிவிப்பது முன்னெப்போதும் நடக்காதது
* “இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த பட்ஜெட்டிலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது ஆனால் இன்று உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது
* இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலத்திற்குச் சிறப்பு நிதி உதவியாக பலதரப்பு முகமைகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
*அதேபோல, பல்வேறு திட்டங்களின் கீழ் பீகாருக்கு ரூ.58.900கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பீகாரில் உள்ள நாளந்தாவில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசாவிலும் சுற்றுலாவை மேம்படுத்த நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு வரியாக ஒரு ரூபாய் அளித்தால், 29 பைசாதான் திரும்பக் கிடைக்கும். ஆனால், உத்தர பிரதேசத்திற்கு 2 ரூபாய்க்கு மேல் கொடுக்கிறார்கள்.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசுிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கனிமவளங்களுக்கு வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நெய்வேலி நிலக்கரி, நரிமணம் பெட்ரோல் சுரங்கங்களுக்கான ராயல்டியை அதிகரிக்கக் கோர வேண்டும் என்றும் வரி விதிப்பையும் திராவிட மாடல் அரசு ஒன்றிய அரசிடம் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறிய கருத்து இதுவரை யாரும் சிந்திக்காதது. மாநில அரசுகள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டலாம் – வலியுறுத்தலாம்.