மக்களவையில் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி!
புதுடில்லி, ஜூலை 28- என்.டி.ஏ.வால் இதுவரை ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? தேர்வர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் என்ன? என்று மக்களவையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, மக்களவை தி.மு.க. உறுப்பினர் இராணி சிறீகுமார் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதிலிருந்து (என்.டி.ஏ.) கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பின் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எத்தனை? ஆண்டு வாரியாக விவரங்கள் தேவை என்றும், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அது ஒத்திவைக்கப்படுவதைத் தடுக்க என்.டி.ஏ. எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தொலைதூர இடங்களில் ஒதுக்கப்படும் மய்யங்கள் மற்றும் வெவ்வேறு மய்யங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு போதுமான உள்கட்டமைப்புகள் இல்லாதது குறித்து மாணவர்கள் எழுப்பும் புகார்கள் குறித்து என்.டி.ஏ. அறிந்திரு க்கிறதா- என்றும்,
அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? மேலும் தேர்வர்களின் புகார்களை, குறைகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் என்னென்ன?” என்றும் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி மற்றும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டாக்டர் இராணி சிறீகுமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினர்.
இக்கேள்விகளுக்கு ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர். சுகந்த மஜூம்தார் எழுத்துபூர்வமாக அளித்த பதில் வருமாறு:–
“தேசிய தேர்வு முகமை கடந்த 2018–இல் தொடங்கப்பட்டதிலிருந்து 5.4 கோடிக்கும் அதிகமான மாணவர்களை உள்ளடக்கிய 240 தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றது.
என்.டி.ஏ. ஆல் நடத்தப்படும் பெரும்பாலான தேர்வுகள் பல்வேறு பாடங்களில், பல்வேறு கால முறைகளில், பல கால இடைவெளிகளில் நடத்தப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத, இதற்கு முன் நடந்திராத கோவிட் தொற்று போன்ற சூழ்நிலைகள், தொழில் நுட்பக் கோளாறுகள், தளவாட பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள், அரசு ஆணைகள் போன்ற நிலைகளில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதன்படி… 2020, 2021 ஆண்டுகளில் கோவிட் தொற்று -ஊரடங்கு காரணமாக JEE, NEET, CSIR-UGC NET, ICAR AIEEA, DUET, AIAPGET, JIPMAT ஆகிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. 2021 CMAT தேர்வு AICTE தேர்வு திட்டத்தை மாற்றியமைத்ததால் ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் 2022 இல் இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைக்கழக பி.ஹெச்.டி. நுழைவுத் தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. 2023 GAT-B, BET ஆகிய தேர்வுகள் மண்டல தேர்வு மய்யங்களுடனான ஆலோசனைக்குப் பின் ஒத்தி வைக்கப்பட்டது.
NCET 2024 தேர்வு தொழில் நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது.
CSIR NET 2024 தேர்வு தளவாட பிரச்சினைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது பெரும்பாலான தேர்வுகளுக்கான தேர்வு நாட்காட்டியை முன்னதாகவே என்.டி.ஏ. அறிவிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தேர்வர்களின் வசதிக்காக செய்யப்படுகிறது. என்டிஏவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகள், மறுஅட்டவணைகள் / ஒத்திவைப்புகளுக்கு இடமளிக்கும் இடைக்கால நாட்களைக் கருத்தில் கொண்டு தேர்வு நாட்காட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
என்.டி.ஏ. நடத்தும் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுகின்றன.
விண்ணப்பதாரர்களின் முன்னுரிமையை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு தேர்வு மய்யத்தில் உள்ள இடங்களின் அளவை கருத்தில் கொண்டும் தேர்வு மய்யங்கள் கணினி மென்பொருள் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
பெரும்பாலும் தேர்வு எழுதுபவர்கள் தேர்ந்தெடுத்த நகரத்துக்குள் ஒரு தேர்வு மய்யம் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சில சமயங்களில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட நகரத்துக்குள் தேர்வு மய்யம் அளிக்கப்பட முடியாமல் போகலாம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், NTA அவர்களை அருகிலுள்ள இடங்களில் தங்க வைக்க முயற்சிக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு மய்யங்களை ஒதுக்கும் போது, உள்கட்டமைப்புகள் அவர்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்ய உரிய கவனம் செலுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் புகார்கள்/குறைகள் மின்னஞ்சல்கள் மற்றும் ஹெல்ப் டெஸ்க் தொலைபேசி எண்கள் மூலம் பெறப்படுகின்றன. அவை முறையாகத் தீர்த்து வைக்கப்படுக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார் ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் டாக்டர். சுகந்த மஜூம்தார்.
ஒன்றிய அரசின் பதிலுரையில் என்.டி.ஏவால் தற்போது நிறுத்திவைக்கப்பட்ட பெரும்பாலான தேர்வுகள் இடம்பெறாமல் இருப்பது அரசு தேர்வு முறைகளில் மேலும் சந்தேகத்தையும் மாணவர்களின் எதிர்காலம் மீது அரசின் அலட்சியப் போக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.