சென்னை, ஜூலை 27- முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல மைச்சரின் 15 நாள் பயணத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித் துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை யில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடை பெற்றது. 2 நாள் மாநாட்டில் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிறிய அளவில் பல்வேறு முதலீட்டா ளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதவிர, துபாய், அபுதாபி, அய்க்கிய அரபு நாடுகள், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற் கொண்டு, அந்தத் நாடுகளின் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்பேரில் ஏராளமான முதலீட்டாளர்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தங்கள் செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணம் ஜூலை மாதத் தில் இருக்கும் என முன்பு கூறப் பட்டிருந்தது. ஆனால், மக்களவை தேர்தல் பணியை தொடர்ந்து, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாக்கள் மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாள் விழா கார ணமாக முதலமைச்சரின் பயணம் ஆகஸ்ட் 3ஆவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.
முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல, ஒன்றிய அரசிடம் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில், முதலமைச்சரின் அமெரிக்க பயணத்துக்கு ஒன்றிய அரசிடம் ஒப்புதல் கோரப் பட்டது. இதை யடுத்து, ஒன்றிய அரசு ஆகஸ்ட் 22 முதல் 15 நாள் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 15 நாட்கள் வரை அவர் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ்நாடு வம்சாவளியினரையும் முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் செயலர்கள், தொழில் துறை செயலர், தொழில் வழிகாட்டி நிறுவன அதிகாரிகளும் அமெரிக்கா செல்ல உள்ளனர்.