கடந்த 21.7.2024 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு அமைக்கப்பட்டதின் 20ஆம் ஆண்டு விழாவிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.பி.விஸ்வநாதன் மற்றும் மகாதேவன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தனர்.
விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உரையாற்றும் பொழுது, தமிழ் இலக்கிய நீதி நூல்களான அவ்வையின் ஆத்தி சூடி, கொற்றைவேந்தன் மற்றும் திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களிலுள்ள நீதிக் கருத்துகளைப் போற்றிக் கூறினார்.
அடுத்து உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தனது உரையில் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், திருவள்ளுவர், மகாத்மா ஜோதிபாபூலே, பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் குறித்து வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிடும் பொழுது, ‘தமிழ்நாடு சமூகநீதி மண் எனும் பெருமைக்கு உரியது. பெரியார் ஈ.வெ.ராமசாமி, திருவள்ளுவர் ஆகிய சமூக சீர்திருத்தவாதிகளை வழங்கிய மண் ஆகும். அவர்கள் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளை எதிர்த்துப் போராடினர்.
நமது சமுதாயம், தீண்டாமை, சமத்துவமின்மை ஆகிய புதர்களில் மூழ்கியுள்ளது.
தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்:
“Every man is equal to all other men in Society. There should be no exploitation. Only tendency to help others should be there in all of us.
Nobody should harm anybody. Generally, there should be no room for any grievance or complaint from anybody. Everybody should live and let others live.”
‘‘மனிதர் அனைவரும் சமம்.
மற்றவர்களை சுரண்டி வாழக் கூடாது; மாறாக உதவி செய்து வாழ வேண்டும்.
ஒவ்வொருவரும் வாழ்ந்திடும் சூழல் வேண்டும் – மற்றவர்களையும் வாழவிடும் நிலைமை நிலவிட வேண்டும்.’’
தந்தை பெரியார் கருத்துகளை நீதிபதி பி.ஆர். கவாய் எடுத்துக் கூறியபோது பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பகுதியிலிருந்து பலத்த கரவொலி எழுந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் மூத்த தாத்தா கவாய் அவர்கள் பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருடன் நெருங்கிப் பழகி சமூகப் பணி ஆற்றியவர். சமூகநீதியின் வெளிப்பாடாக உச்சநீதிமன்றத்தில் பட்டியலின ஜாதி மக்களுக்கு பிரதி நிதித்துவம் அளித்திருக்கக் கூடிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர்
பி.ஆர். கவாய் ஆவார்.