2024-2025-ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.7.2024) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு நிதி ஒதுக்கீடு அள்ளிக் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு;
* பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி வழங்கப்படும்.
* பீகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், பாசனத்திற்காகவும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.
* பீகார் மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ‘நாளந்தா’ பகுதியை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பீகாரில் கயா மற்றும் புத்தகயா கோவில்கள் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
* பீகாரில் உள்ள புராதனமான சின்னங்கள், கோவில்களை மேம்படுத்த பட்ஜெட்டில் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஆந்திராவின் பின்தங்கியுள்ளதாகக் கூறப்பட்ட மாவட்டங்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது..
*ஆந்திராவின் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளதாக பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்த நிலையில், ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கி புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் தமிழ் நாட்டுக்கு ஒன்றிய பிஜேபி அரசின் பட்ஜெட்டில் பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் – தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி வலியுறுத்தி இருந்த நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் கூட்டமைப்பு தான் இந்தியா. அரசியலில் பல மாறுபட்ட நிலைமைகள் இருக்கலாம். ஆட்சி என்று வருகிறபோது – பாரபட்சம் காட்டுவது ஆட்சியாளரின் ஓர வஞ்சனைப் புத்தியைத்தான் வெளிப்படுத்தும். ஜனநாயக சிந்தனை இல்லாத வறட்டுப் பாசிசம் கொண்ட ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அடையாளமே இது.
தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அபரிமிதமான திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் வரப் போகின்றது என்று ‘பராக்’ பாடிக் கொண்டிருந்தார்.
அவருக்கும் சேர்த்துத் தான் ஒன்றிய பிஜேபி அரசு பட்டை நாமம் சாத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் பிஜேபிக்கான இடம் பூஜ்யம்தான். இந்த நிதி நிலை அறிக்கையைப் பார்க்கும்போது, பூஜ்ஜியத்திற்குக் கீழ்தான் – நினைவிருக்கட்டும்!