உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாதது ஏன்? தீர்ப்பை செயல்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்! தஞ்சையில் நடைபெற்ற காவிரி நீர் உரிமை கோரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

Viduthalai
18 Min Read

* காவிரி நதிநீர் என்பது நாம் கேட்கும் பிச்சையல்ல – நமது உரிமையின் குரல்!
* கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் அதை சமாளிக்க தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு என்ன வடிகாலா?
* நதிகளைத் தேசியமயமாக்கினால் இந்நிலை ஏற்படுமா?

,தஞ்சை, ஜூலை 24 காவிரி நதிநீர் உரிமை கோருவது பிச்சையல்ல – நமது உரிமை. கருநாடகத்தில் அதிகமழை பெய்து வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மட்டும் தண்ணீரைத் திறந்து விடுவது – கருநாடகத்துக்குத் தமிழ்நாடு என்ன வடிகாலா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை கருநாடக அரசு செயல்படுத்தாதது ஏன்? ஒன்றுபட்டுப் போராடி காவிரி நதி நீர் உரிமையை மீட்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
காவிரி நீர் உரிமை கோரி
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
நேற்று (23.7.2024) மாலை தஞ்சாவூர் பானகல் கட்டடம் அருகே (ஜூபிடர் திரையரங்கம்) காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று கண்டன உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது கண்டன உரை வருமாறு:
அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களைச் சார்ந்த அருமைப் பெருமக்களே!
காவிரி நீர் உரிமை கோரி இந்த தஞ்சை பகுதி அனைத்து டெல்டா பகுதி விவசாயிகள், இதில் ஈடுபாடுள்ள அத்துணை கட்சிகள், அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பாகக் கூடியுள்ள அனைத்துக் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களைச் சார்ந்த அருமைப் பெருமக்களே, சான்றோர்களே, தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியில் நம்முடைய தலைவர்கள் சிறப்பாகவும், சுருக்கமாகவும், அருமையாகவும் பேசினார்கள்.அதை அப்படியே நான் வழிமொழியத்தான் இங்கே வந்திருக்கின்றேன்.
நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை

முடிவு செய்கின்றவர்கள் நாமல்ல –
நம்முடைய எதிரிகள்தான்!
இன்றைக்கு நமக்குத் தேவை செயல், மிக முக்கியமாக. அந்த செயலை ஒவ்வொரு நாளும் செய்தாகவேண்டிய நிலை உள்ளது. நம்முடைய பணி குறையவில்லை, அதிகமாகிறது. ஏனென்றால், நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை இந்த ஓர் அறப்போரிலே முடிவு செய்கின்றவர்கள் நாமல்ல. நம்முடைய எதிரிகள்தான் அதை முடிவு செய்கிறார்கள்.
அந்த வகையில்தான், இன்றைக்குத் தமிழ்நாட்டிற்கே எதிரியாக ஒன்று இருக்கின்றது என்றால், அதுதான் இன்று டில்லியில் நடக்கக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிதிநிலை அறிக்கையை கொடுத்திருக்கின்ற மோடி தலைமையிலான மைனாரிட்டி அரசு.

மோடி தலைமையிலான மைனாரிட்டி அரசு!
மோடி அரசு, ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டுள்ளது. பிரதமர் பதவி நாற்காலிக்கென்று, இரண்டு கால்கள் இரவல் வாங்கப்பட்டு இருக்கின்றன!
இப்பொழுது அவர் முழுக்க முழுக்க பா.ஜ.க.வி னுடைய பிரதமர் அல்ல. தேசிய ஜனநாயக முன்னணி என்ற அவ்வப்பொழுது கலைந்து கலைந்து கூடக்கூடிய ஓர் அமைப்பினுடைய பிரதமர்.
பிரதமர் நாற்காலி ஆடாமல் இருப்பதற்குக் கொடுத்திருக்கின்ற வாடகைதான் – கூலிதான்!
ஆந்திராக்காரர்களும், பீகார்க்காரர்களும் பிரதமர் பதவி நாற்காலிக்கு இரண்டு கால்கள்போல முட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அந்த பிரதமர் நாற்காலி ஆடாமல் இருப்பதற்குக் கொடுத்திருக்கின்ற வாடகைதான் – கூலிதான் அந்த இருவருக்கும் மட்டும் பட்ஜெட்டில் ஏராளமாக நிதியை அள்ளிக் கொடுத்திருக்கிறார்களே, அது அவர்களைத் திருப்தி செய்வதற்காக அல்ல.
இன்று பல பேர் சொல்லியிருக்கிறார்கள், அவர்களைத் திருப்தி செய்வதற்காகவே என்று; திருப்தி செய்வதற்காக அல்ல – அவர்களை சரிகட்டுவதற்காகத்தான்.

நம்முடைய விவசாயிகள் மொழியில் சொல்ல வேண்டுமானால், அவர்களை சரி கட்டுவதற்காக – அவ்வப்பொழுது சரி கட்டவேண்டும்.
அதிலும் இரட்டை வேடம்! இங்கே உரையாற்றியோர் காவிரிப் பிரச்சினையைப்பற்றி சொன்னார்கள். அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அடுத்தது என்ன செயலில் இறங்கப் போகிறோம் என்பதுதான் இப்பொழுது மிகவும் முக்கியம்.
இன்றைய பிரச்சினை மிகவும் முக்கியத்துவமுடையது என்பதால், இதனைப்பற்றி முதலில் சொல்கிறேன்.

ஒப்புக்கொண்டுதான் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தார்கள்!
ஆந்திராவிற்கு சிறப்புத் தகுதி கொடுக்கவேண்டும்; அதேபோன்று பீகாருக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்த இரண்டிற்கும் ஒப்புக்கொண்டுதான் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்தார்கள்.
இன்று காலையில் வெளிவந்த செய்தியை நீங்க ளெல்லாம் பார்த்திருப்பீர்கள்; மோடி அரசாங்கம் சார்பாகவே ஒரு குழுவைப் போட்டு, ‘‘பீகாருக்கு எந்த சிறப்புத் தகுதியும் சட்டப்படி கொடுக்க முடியாது. ஏனென்றால், ஒரு மாநிலத்திற்கு மட்டும் தனியாக சிறப்புத் தகுதி வழங்க முடியாது” என்று அந்தக் குழு அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.
உடனே, பீகாரில் இருப்பவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நிதிஷ்குமாரைப் பார்த்து கேட்கி றார்கள்.

ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எப்பொழுதும் இரட்டை நாக்கு – இரட்டை வேடம்!
இப்பொழுது அதை மறைப்பதற்காக மட்டுமல்ல, கவனத்தை மாற்றுவதற்காக – ஒரு பக்கம் நாங்கள் சிறப்புத் தகுதி கொடுக்கமாட்டோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது; இன்னொரு பக்கம் அவர்களை சரிகட்டப் பார்ப்பது. ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எப்பொழுதும் இரட்டை நாக்கு – இரட்டை வேடம்.
‘‘பேசுநா இரண்டுடையாய் போற்றி, போற்றி!” என்று அறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயையில் சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பதை நினைத்துப் பாருங்கள்.
இரட்டை நாக்கு, இரட்டைப் போக்கு, இரட்டை வேடம் இவை அத்தனையும் இருக்கக் கூடிய அளவில், பீகாருக்கு நாங்கள் சிறப்புத் தகுதி கொடுக்கவில்லை; அது சட்டப்படி முடியாது. ஆனால், 25 ஆயிரம் கோடி ரூபாயைத் தூக்கி மட்டும் நாங்கள் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எங்கள் தமிழ்நாட்டினுடைய வாழ்வு
என்னாவது?
நீங்கள் கொடுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்கள் தமிழ்நாட்டினுடைய வாழ்வு என்னாவது? இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களின் நிலை என்னாவது?
அதேபோன்றதுதான் நீர்ப் பிரச்சினை. நான் இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்படும்பொழுதே ஒருவர் என்னிடம் கேட்டார், ‘‘ஏங்க, எதற்கு இந்தப் போராட்டம் – அதற்கு நீங்கள் போகவேண்டுமா?” என்று.
ஏன்? என்று கேட்டபொழுது,
அதுதான் மழை பெய்துவிட்டதே, தண்ணீர்தான் – மேட்டூருக்கு அதிகமாகத் தண்ணீர் வந்துவிட்டதே என்றார்.
மேட்டூருக்குத் தண்ணீர் வருவது, அவர்களுடைய கருணையாலோ, பெருந்தன்மையாலோ அல்ல!
இதுதான் நம்மிடம் இருக்கின்ற பிரச்சினை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் காவிரி நீர் தேவை என்று போராட்டம் அறிவித்து வருவோம். கருநாடகாவில் மழை பெய்யும். அந்த மழையை அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது. பல நகரங்கள், ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் என்பதால், அந்த அணையை திறந்தே ஆகவேண்டும். அந்த வகையில், மேட்டூருக்குத் தண்ணீர் வருவது, அவர்களுடைய கருணையாலோ, பெருந்தன்மையாலோ வரவில்லை. அல்லது நம்மை மதிக்கிறார்கள் என்பதினால் வர வில்லை. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லை என்பதினால்தான்.

தண்ணீரில் மூழ்குகிறீர்களா,
இல்லையா என்று பாருங்கள்!
நாம் இப்பொழுது புதிதாக யோசிக்கவேண்டும். தலைவர்கள் யோசிக்கவேண்டும். ‘‘இனிமேல் கருநாடகாவில் எவ்வளவு மழை பெய்தாலும், மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வருவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை நாங்கள் தடுப்போம். ஆகவே, அந்தத் தண்ணீரை உங்கள் மாநிலத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் தண்ணீரில் மூழ்குகிறீர்களா, இல்லையா என்று பாருங்கள்” என்று அறுதியிட்டுச் சொல்லவேண்டும். தமிழ்நாடு என்ன கருநாடகத்துக்கு வடிகாலா?
நமது விருப்பம் எல்லா விவசாயிகளுக்கும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதுதான்!
நமக்கு விவசாயிகள் மேல் அக்கறை உண்டு. அது கருநாடக மாநில விவசாயிகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு விவசாயிகளாக இருந்தாலும் சரி, விவசாயிகளின்மேல் நமக்குக் கோபம் கிடையாது. போராட்டம், விவசாயிகளை எதிர்த்து அல்ல – அங்கே இருக்கின்ற சில குறுகிய புத்தியுள்ள அரசியல்வாதிகளை எதிர்த்துத்தான். நம்முடையப் போராட்டம் அந்த அரசியலுடைய நோக்கத்தைப் பொறுத்ததே தவிர, நமது விருப்பம் எல்லா விவசாயிகளுக்கும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதுதான்.
கருநாடக விவசாயிகளுக்குக் கொடுக்காமல், அவர்களை வஞ்சித்து எங்களுக்குக் கொடுங்கள் என்று நாம் சுயநலத்தோடு கேட்கவில்லை.
ஆனால், பசித்த வாய்க்கு என்ன, அனைவருக்கும் அனைத்தும் – அதுதானே எங்கள் சமூகநீதி – அதைத்தானே எங்களுடைய முதலமைச்சர் சொல்கிறார். பெரியாருடைய வாசகம் ஆயிற்றே அது!
கலைஞர் அவர்கள் தம்மை ‘‘மானமிகு சுயமரியா தைக்காரன்” என்று சொன்னார்.

சுயமரியாதை என்பது எனக்கு மட்டுமல்ல!
தமிழ்நாடு அரசே சுயமரியாதை அரசு. இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்று சொன்னால், சுயமரியாதை என்பது எனக்கு மட்டுமல்ல, என் எதிரில் இருக்கிறாரே, அவருக்கும் சேர்த்து சுயமரியாதையை அங்கீகரிப்பதுதான் சுயமரியாதைக்காரருடைய இலக்கணமாகும்.
நான் சுயமரியாதைக்காரன்; என்னுடைய சுயமரி யாதையைக் காப்பாற்றவேண்டும் என்பது மட்டுமல்ல, அடுத்தவர்களுடைய சுயமரியாதையை நாம் மதிக்கவேண்டும். அதேபோன்று, அடுத்தவர்களுடைய உரிமைகளை நாம் மதிக்காமல் இல்லை. ஆனால், அதேநேரத்தில் இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

நாம் போராடி போராடி,
ஓர் அங்குலம் வெற்றி பெறுகிறோம்!
இங்கே சொன்னார்கள், இந்த நாட்டில் நாம் போராடி போராடி, ஓர் அங்குலம் வெற்றி பெறுகிறோம். ஆனால், ஒரேயடியாக சரிவு சரிவு என்று இழுத்துக்கொண்டு போகிறார்கள், நம் மக்கள். அதற்கு என்ன காரணம் என்று அருள்கூர்ந்து, நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் இந்த உரிமைகளில் பெற்ற வெற்றிகளில், ஒரு கணிசமான வெற்றி எதுவென்றால், காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்று போராடி, அதற்காக சிறைச்சாலைக்குச் சென்றவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறோம். அதற்காக எல்லாக் கட்சியினரும் தமிழ்நாட்டில் போராடியிருக்கிறார்கள். நாங்கள் மட்டும்தான் போராடினோம் என்று சொல்லமாட்டோம். தமிழ்நாட்டில் உள்ள அத்துணை கட்சிகளுக்கும் நாம் தலைவணங்கி நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

மாமேதை சமூகநீதிக்காவலர் வி.பி.சிங்!
அப்படிப்பட்ட நேரத்தில், காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்றை மற்றவர்கள் அமைத்துக் கொடுக்காத நேரத்தில், அதை அமைத்துக் கொடுத்த மாமேதை சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள். இன்றைக்கு நம்முடைய நன்றிக்குரியவர்.
‘‘நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும்” என்று சொன்னவர் அவர்.
அதன்படி, 205 டி.எம்.சி. நீர் இடைக்கால ஏற்பாடு. அது ஒரு இறுதி முடிவல்ல – அது ஒரு இண்ட்ரீம் ஆர்டர்.
ஒன்றிய ஆட்சியை குறுக்குவழியில் பிடித்துக் கொண்டிருக்கக்கூடியவர்கள்!
‘‘நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைத்தது மாதிரி” -ஒரு பழமொழி உண்டு. அதுபோன்று இப்பொழுது, இதற்குரிய அமைச்சர் தமிழ்நாட்டை வஞ்சிக்கவேண்டும் என்பதற்காக, எந்த அளவிற்கு மோசமாக நடந்துகொள்கிறார்! பா.ஜ.க.வினுடைய தலைவராக இருக்கக்கூடிய, இன்றைக்கு ஒன்றிய ஆட்சியை குறுக்குவழியில் பிடித்துக் கொண்டி ருக்கக்கூடிய, மைனாரிட்டி அரசினுடைய பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், அமைச்சரவையை அமைப்பதில் என்ன முறையைக் கையாண்டு இருக்கிறார்?
தோழர்கள் நன்றாக நினைவில் கொள்ளவேண்டும். நமக்கு மறதி இருக்கக் கூடாது. இதனுடைய பின்ன ணிதான் பட்ஜெட் போன்றவற்றிலும் எதிரொலிக்கிறது.

நதிகளை தேசிய மயமாக்கி இருந்தால்,
இந்தப் பிரச்சினை வராது!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. கருநாடகாவிற்கும் – மகராட்டிராவிற்கும் இடையே பிரச்சினைகள் இருக்கின்றன. நீர்ப் பங்கீடு வழக்குகள் பல மாநிலங்க ளுக்கு இடையே இருக்கின்றன. நதிகளை தேசிய மயமாக்கி இருந்தால், இந்தப் பிரச்சினை வராது என்பது வேறொரு தீர்வு.
ஆனால், அதை எல்லாவற்றையும்விட, அதில் என்ன நடந்தது? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
பிரச்சினைக்குரிய மாநிலத்தைச் சேர்ந்தவரை, இதுவரை அந்தத் துறையில், அந்தக் குழுவில் போட்டுள்ளார்களா?
கருநாடகத்தைச் சேர்ந்த, பி.ஜே.பி.யைச் சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை இணையமைச்சராகப் போடுகிறார் மோடி. இந்த ஓரவஞ்சணை திட்டமிட்டு செய்யப்பட்டது. இதுவரையில், எந்த மாநிலத்திலாவது இந்திய வரலாற்றில், நீர்ப் பங்கீடு வழக்குகளில், சம்பந்தப்பட்ட, பிரச்சினைக்குரிய மாநிலத்தைச் சேர்ந்த வரை, இதுவரை அந்தத் துறையில், அந்தக் குழுவில் போட்டுள்ளார்களா?
இதனை உடனடியாக காங்கிரஸ் கட்சி எதிர்த்தது; உடனடியாக எதிர்க்கட்சியினர், இந்தியா கூட்டணியினர் இதனைச் சுட்டிக்காட்டினார்கள். ஆனால், அதைப்பற்றி அவர்கள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
உடனடியாக அவர்கள் என்ன செய்திருக்கவேண்டும் – அந்த அமைச்சரின் துறையை மாற்றியிருக்கவேண்டும் அல்லவா! முதல் வஞ்சணை அதுதான்.

அவர்கள் திட்டமிட்டு இதனைச் செய்திருக்கிறார்கள்!
ஆகவேதான், அவர்கள் திட்டமிட்டு இதனைச் செய்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியும் இதுதான் பிரித்தாளக்கூடியது. கண்ஜாடை காட்டி, நீங்கள் இஷ்டம்போல் சர்வ ராஜ்ஜியம் நடத்துங்கள் என்று சொல்வதுபோன்று, இன்றைக்கு அவர்கள் ஜாடை காட்டியிருக்கிறார்கள்.
205 டி.எம்.சி. தண்ணீரை நாம் ஒரு இடைக்கால நிவாரணமாகப் பெற்று, இன்றைக்கு நாம் கேட்கிறோம் என்றால், அந்த அமைப்பு என்ன சொல்கிறது? கையைக் காட்டுகிறார்கள். இப்படிக் கையைக் காட்டினால், என்ன அர்த்தம்? நீங்கள் எல்லாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இதைப் பார்க்கும்பொழுது நமக்கே கொச்சையாக இருக்கிறது. வகுப்பறையில்தான் எழுந்து நின்று மாணவர்கள் இப்படி கையைக் காட்டுவது வழக்கம்.

ஒரு டி.எம்.சி. தண்ணீரைக்கூட தரமாட்டோம் என்கிறார்களே!
அந்த ஒரு டி.எம்.சி.யைத் தண்ணீர் தருவதற்கு, வாதங்களையெல்லாம் கேட்டு, பிறகு அதைக்கூட தரமாட்டோம் என்று சொல்கிறார்களே, அவர்களுக்கு மனிதநேயம் வேண்டாமா?
தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடு என்பது சாதாரண பழமொழியாகும்.
அப்படியென்றால், அதனுடைய அடிப்படை என்ன என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
இரண்டு நாடுகளுக்கிடையே நீர்ப் பிரச்சினை சுலபமாகத் தீர்க்கப்படுகிறது!
பங்களாதேசுக்கும் – இந்தியாவிற்கும் கங்கை நீர்ப் பிரச்சினை வருகிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடுவதற்காக சந்திக்கின்றார்கள். அரை மணிநேரம் பேசிவிட்டு, தேநீர் சாப்பிட்டுவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வரு கிறார்கள்.
இரண்டு நாடுகளுக்கிடையே இருக்கின்ற பிரச்சினை – அவ்வளவு சுமூகமாக நீர்ப் பங்கீடு நடைபெறுகின்றபொழுது, இரண்டு மாநிலத்திற்கு இடையே வரும்பொழுது, நாங்கள் உங்களோடு இருந்துதான் தீரவேண்டுமா? என்கிற கேள்வியை நீங்களே எழுப்புகிறீர்களா, இல்லையா?
இதுதான் எங்கள் கேள்வி.
ஆக, பிரிவினைவாதி என்கிற பூச்சாண்டி யையெல்லாம் இனிமேல் காட்ட முடியாது.
இந்தப் பிரிவினை என்ற வாதத்தைத் துவக்கி வைத்ததே மோடி.

இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் நிலை என்ன?
பிரிவினைவாதம் அல்லாமல், வேறு என்ன?
அவர் அவதாரமாயிற்றே –
அதை அவரே சொல்லியிருக்கிறாரே!
தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டில் 9 முறை பிரதமர் வந்ததாக இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள். தியானத்தை சேர்த்தா, சேர்க்காமலா என்று தெரியவில்லை. அதோடு சேர்த்தால், 10 முறை வந்திருக்கிறார். தசாவதாரம் – ஏனென்றால், அவர் அவதாரமாயிற்றே – அதை அவரே சொல்லியிருக்கிறாரே!
அப்பொழுது மோடி என்ன சொன்னார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
‘‘டமிள் மொழி ரொம்ப நல்ல மொழி” என்று சொல்லி, பாரதியார் கவிதை, திருக்குறள் என்று சொல்லி, ‘‘வரப்புயர, நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்” என்றெல்லாம் சொன்னாரா, இல்லையா?
எங்கள் வரப்பு என்னாவது?
இதுதான் நாம் கேள்வி கேட்கவேண்டிய கட்டம். இன்றைக்கு அந்த வரப்பு உயரவேண்டாமா? அதற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன? இதுதான் உங்களுடைய பங்களிப்பா? நாங்கள் கேட்கமாட்டோமா!

தமிழ்நாட்டில் 40-க்கு 40 வெற்றி பெற்றதுதான்
அவர்களுக்குக் குடையுது, குத்துது!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டில். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு – புதுவை உள்பட 40-க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றதுதான், அவர்களுக்குக் குடையுது, குத்துது.
பிரதமர் மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில்கூட, அவர்களுடைய கட்சி டெபாசிட் வாங்க முடியாத அளவிற்கு முடிவு வந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று சொன்னார். ஆப் கி பார், ஆப் கி பார் என்று சொன்னார். ‘‘பார், பார்” என்று மக்கள் பார்த்துவிட்டார்கள்.
அப்படி பார்த்துவிட்ட சூழ்நிலையில், இன்றைக்கு என்ன ஆகியிருக்கிறது, என்பதை நிலைத்துப் பாருங்கள்.
இன்றைய ஒன்றிய பா.ஜ.க. பட்ஜெட்டில், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை. இதை தமிழ்நாட்டில் உள்ள எல்லோரும் கண்டித்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வினரும் கண்டித்திருக்கிறார்கள். அதை நான் வரவேற்கிறேன். இந்த உணர்வை, கடைசிவரையில் இதில் நீங்கள் ஒற்றுமையாக இருந்து காட்டுங்கள்.

நமக்கு இருக்கும் அரசியலை, மற்ற நேரங்களில் பார்த்துக் கொள்ளலாம், தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
உரிமைகளுக்காக ஒன்றுபடுவோம், போராடுவோம் என்கிற உணர்வு வரவேண்டும்
உள்ளபடியே, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை நாம் நேசிக்கின்றோம் என்று சொன்னால், கட்சி இல்லை, ஜாதி இல்லை, மதம் இல்லை; தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக, நீர் உரிமைகளுக்காக, நிதி உரிமைகளுக்காக – எல்லா உரிமைகளுக்காகவும் ஒன்றுபடுவோம், போராடுவோம் என்கிற உணர்வு வரவேண்டும்.
இங்கே உரையாற்றிய தலைவர்கள் ஒவ்வொருவரும் சுருக்கமாக பேசினாலும், அழகாகப் பேசினார்கள். இடையில், ராசி வேறு உள்ளே புகுந்தது. அதற்கும் பட்டிமன்றம் போன்று எல்லோரும் பதில் சொன்னார்கள்.
அப்படி சொல்லும்பொழுது எனக்கு ஒரு நிகழ்வு நினைவிற்குவந்தது.
‘‘கலைஞர் மிகவும் கைராசி உள்ளவர்; அவர் தொடங்கியது எல்லாம் வெற்றி பெறும்!‘’
கலைஞர் அவர்களை அழைத்து, ஒரு மருத்துவ மனையைத் திறக்கச் சொன்னார்கள். அந்நிகழ்வில் ஒருவர் உரையாற்றும்பொழுது, ‘‘கலைஞர் மிகவும் கைராசி உள்ளவர்; அவர் தொடங்கியது எல்லாம் வெற்றி பெறும்” என்று அவர் நல்ல எண்ணத்தில், பிரியத்தினால் சொன்னார்.

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

கலைஞரின் நகைச்சுவை உணர்வு!
கலைஞர் அவர்கள் நகைச்சுவை உணர்வு உள்ளவர். அவர் உரையாற்றும்பொழுது, ‘‘அய்யா, என்னுடைய ராசியைப்பற்றி இங்கே சொன்னார்கள். வேறொரு இடத்தில் வியாபாரத்திற்காக ஒரு கடையைத் திறந்து வைக்கிறேன். அப்பொழுது, இவருக்கு நல்ல ராசி இருக்கிறது என்று சொன்னால், நல்லது. ஏனென்றால், வியாபாரம் நிறைய நடக்கவேண்டும். ஆனால், இங்கே நான் திறந்து வைப்பது மருத்துவமனை. நிறைய நோயாளிகள் வந்தால்தான் ராசி என்று அர்த்தம்? அப்படி நிறைய நோயாளிகள் வரவேண்டுமா?” என்று ஒரு கேள்வி கேட்டார். அதுதான் பகுத்தறிவு, அதுதான் ஈரோட்டுக் குருகுலத்தில் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்கள் படித்ததினுடைய விளைவு.
தயவு செய்து நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டியது என்னவென்றால், கருநாடக மாநிலத்தில் எல்லோரும், அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேருகின்றன. இங்கே, பி.ஜே.பி., அகில இந்திய கட்சிதான். காங்கிரஸ் அகில இந்திய கட்சி இல்லையா? அங்கே இருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் அதனை வலியுறுத்துகிறது.
இங்கே உடனே என்ன சொல்கிறார்கள், ‘‘ஸ்டாலின் இன்னும் ஏன் அமைதியாக இருக்கிறார்?” என்று.

நம்முடைய முதலமைச்சரின் அமைதியை
யாரும் கணிக்க முடியாது!
எங்களுடைய முதலமைச்சரின் அமைதிக்கு என்ன பொருள் தெரியுமா? எப்பொழுதுமே இந்த அமைதிதான், ஆழமான செயல் என்பதற்கு அர்த்தம்.
புயலுக்கு முன் இருக்கக்கூடிய அமைதி இருக்கிறதே, அந்த அமைதியை யாரும் கணிக்க முடியாது.
அதுபோன்று, அவர் படபடவென்ற பேசமாட்டார்; ஆனால், செயல் என்று வந்தால், இதுவரையில் அவர் எடுத்த செயலில் தோற்றதாக வரலாறு கிடையாது. சொன்னதை நிறைவேற்றி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கும் 40 என்றால், மக்கள் அவர் பின்னால் இருக்கிறார்கள். இந்த ஆத்திரம்தான் பி.ஜே.பி.,க்கு. 9 முறை தமிழ்நாட்டிற்குச் சென்றோம், 10 முறை தமிழ்நாட்டிற்குப் பிரச்சாரத்திற்காக சென்றோம் ஒன்றும் பயனில்லையே!

‘‘தமிழ்நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன்’’ என்று சொல்லும் பிரதமர் அதை பட்ஜெட்டில் காட்டி யிருக்கவேண்டாமா?
அடிப்படை அற்ற தன்மை – தமிழ்நாட்டுக்கு ஒன்றும் கொடுக்காது. ‘‘தமிழ்நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன்” என்று சொன்னார் பிரச்சாரத்தின்போது மோடி. அப்படியென்றால், அதை பட்ஜெட்டில் காட்டியிருக்கவேண்டாமா? தமிழ்நாடு ஒன்றும் யாசிக்கவில்லை.
ஆகவே, நீர்ப் பங்கீடாக இருந்தாலும், நிதிப் பங்கீடாக இருந்தாலும். எல்லாவற்றிற்கும் நீங்கள் எஜமானரா?
இந்திய யூனியன் பல மாநிலங்களை இணைத்த ஒரு கூட்டாட்சி என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டம்.
ஒன்றிய அரசு என்பது எஜமானன் அல்ல!
மாநிலங்கள் என்பது அடிமையல்ல!
நாங்கள் கூட்டாளிகள்.

தந்தை பெரியார்!
தந்தை பெரியார் சொல்லுவார், ‘‘முதலாளி – தொழிலாளி” என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது” என்று.
‘‘முதலாளி, தொழிலாளி என்பதெல்லாம் மாறி, கூட்டாளியாகவேண்டும்; பங்காளிகளாக ஆகவேண்டும் – அதில்தான் சமத்துவம் இருக்கிறது” என்று சொல்வார்.
அதுபோன்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவமே முழுக்க முழுக்க பல மாநிலங்களுடைய கூட்டாட்சி.
ஒன்றிய ஆட்சிக்குப் பணம் எங்கே இருந்து வருகிறது? அந்த மாநிலத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள்; இந்த மாநிலத்திற்கு அத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள். ஆனால், எங்களுடைய உரிமை என்னாவது?

மெட்ரோ ரயிலில் ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் பயணிக்கிறார்களா?
தமிழ்நாட்டிற்கு, மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை என்று இங்கே சொன்னார்கள். மெட்ரோ ரயிலில் ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் பயணிக்கிறார்களா? அல்லது இங்கே அமர்ந்திருக்கின்ற கூட்டணிக் கட்சிக்காரர்கள் மட்டும்தான் மெட்ரோ ரயிலில் போகிறார்களா? அதில் பி.ஜே.பி.,க்கார்களும் செல்கிறார்களே! எந்தக் கட்சியையும் சாராதவர்களும் செல்கிறார்களே!
இங்கே உரையாற்றிய நம்முடைய மாவட்டச் செயலாளர் பா.ஜ.க. பிரமுகர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்றால், எல்லோரும் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டவேண்டிய இடத்தில், அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எல்லோரும் பயணிப்பதற்காகத்தானே மெட்ரோ ரயில். அதற்காக ஒன்றிய அரசுக்கு நாம் வரி கட்டவில்லையா?

வரி கொடாமை இயக்கம்!
ஒரு காலத்தில் சொன்னார்கள், வெள்ளைக்காரர்கள் வரி போடும்பொழுது, ‘‘நாங்கள் வரி கொடாமை இயக்கம் நடத்துவோம்” என்ற போராட்டம் நடத்தினார்கள்.
அதையெல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும் என்று, எங்களுக்கு நினைவுப்படுத்துகிறீர்களா?
உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும்கூட, அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டும்!
‘‘பந்தியில், நமக்கு வேண்டியவர் பரிமாகிறவராக இருந்தால், எந்த இடத்தில் உட்கார்ந்தாலும், அதைப்பற்றி கவலையில்லை” என்பது கிராமத்துப் பழமொழி.
அதுபோன்று, உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும், அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லையே! அதை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக வைத்துக்கொண்டிருந்தால், நாம் எங்கே போய் கேட்பது?

காவிரி நீர்ப் பிரச்சினைக்கு
ஒரு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்!
நாம், காவிரி தண்ணீர் வேண்டும் என்று போராட்டம் நடத்துவோம்; உடனே இடையில் கொஞ்சம் மழை வந்துவிடுகிறது. மழை வந்தவுடன், தண்ணீரைக் கொஞ்சம் திறந்துவிடுவார்கள். பிறகு அடுத்த வேலை வந்துவிடும்.
ஆகவே நண்பர்களே, நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது ஒரு தொடக்கம்தான்! இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.
சட்டப்படி நம்முடைய உரிமையைப் பெற்றிருக்கின்றோம். நம்முடைய முதல் கோரிக்கை, அந்த ஒன்றிய அமைச்சரை மாற்றவேண்டும். பிரச்சினைக்குரியவர் யாரோ, அந்தத் துறையை அவர்களிடமே கொடுத்திருப்பது தவறு. ஆகவே, அந்தத் துறையின் அமைச்சரை உடனே மாற்றவேண்டும்.
அடுத்தபடியாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவர்கள் நடைமுறைப்படுத்தவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அது எந்த அரசாக இருந்தாலும், அவர்களைப் பொறுப்பேற்கச் செய்யவேண்டும்.

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்!
உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டால் மட்டும்போதாது; அதனை நடைமுறைப்படுத்தினார்களா என்று பார்க்கவேண்டும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
மக்கள் மன்றம்தான் இறுதியானது!
சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எல்லா மன்றத்தையும்விட, மக்கள் மன்றம்தான் இறுதியானது. அந்த மக்கள் மன்றத்தினுடைய கோரிக்கை என்னவென்றால், தீர்ப்பு அளித்தால் மட்டும் போதாது; நியாயத்தை வழங்கினால் மட்டும் போதாது; அந்த நியாயம், எங்களுக்கு செயல்மூலம் கிடைக்கவேண்டும்.
எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் காவிரி நீர். அவர்களின் வயிற்றில் நீங்கள் அடிக்கக்கூடாது. அதற்கு வேண்டிய காரியங்களை நீங்கள் செய்தாகவேண்டும்.
அதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படை என்னவென்றால், ஒன்றிய பா.ஜ.க. மைனாரிட்டி அரசு, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.
காரணம் என்ன?
40 இடங்களும் எதிர்க்கட்சிகளுக்குப் போய்விட்டதே என்பதினால்தான்.
இன்றைக்கு நல்ல வாய்ப்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி அவர்கள் இருக்கிறார். அவரை சமாளிக்க முடியவில்லை, அவர்களால்.

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

சிரிப்பில் எத்தனையோ
வகை இருக்கிறது!
மோடி, எப்படி இருக்கிறார் பாருங்கள்? அவர் தனிப்பட்ட உருவம் எப்படி இருந்தால் என்ன? ஆனால், அவர் சிரித்தால் மிகவும் ஆபத்து. நம்முடைய கலைவாணர் அவர்கள், சிரிப்பில் எத்தனை வகை இருக்கிறது என்பதை ஒரு பாட்டில் பாடியிருப்பார்.
ஆணவச் சிரிப்பு எப்படிப்பட்டது?
அபாயச் சிரிப்பு எப்படிப்பட்டது? என்பதைப் பற்றியெல்லாம் அந்தப் பாட்டில் பாடியிருப்பார்.
அதுபோன்று, மோடி சிரிக்கிறாரா? அழுகிறாரா? என்பது நமக்கு முக்கியமல்ல; நம்முடைய உரிமைகள் நமக்கு மிகவும் முக்கியம்.
விவசாயிகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படு வதற்கு என்ன வழி என்பதைப் பார்க்கவேண்டும்!
அடுத்தபடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் போட்டார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
அதுமட்டும் போதாது; தீர்ப்புகள் நடைமுறைக்குப் பயன்பட்டு, நம்முடைய விவசாயிகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதற்கு என்ன வழி என்பதைப் பார்க்கவேண்டும்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *