முதலில் இதற்கொரு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!
தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
தஞ்சை, ஜூலை 24 ‘‘மற்ற மற்ற பிரச்சினைகளை விட இந்த நேரத்தில் காவிரி நீர் உரிமைப் பிரச்சினை என்பது – இதயத் துடிப்பிற்கு ஆபத்துப் போன்ற பிரச்சினை! தொடர்ந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து காவிரி நீர் உயிர் பிரச்சினைக்காக ஒன்றிணைவோம் – போராடுவோம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தஞ்சையில் செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர்
நேற்று (23.7.2024) மாலை தஞ்சாவூர் பானகல் கட்டடம் (ஜூபிடர் திரையரங்கம்) அருகே காவிரி நீர் உரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில், அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று நடத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், வஞ்சிக்கப்படுகின்ற தமிழ்நாடாக, இன்றைய ஒன்றிய பா.ஜக. மோடி அரசினால், தேசிய ஜனநாயக முன்னணி அரசினால் ஆக்கப்படுகிறது என்பது வெளிப்படையான ஒன்றாகும். டெல்டா பகுதிக்கு காவிரி நீர் உரிமை வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கின்ற நேரத்தில், இன்று (23.7.2024) ஒன்றிய பா.ஜ.க. அரசினால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் (வரவு – செலவு) திட்டத்தில்கூட தமிழ்நாடு என்ற பெயரோ அல்லது தமிழ்நாட்டு மக்களுடைய உரிமைகள் குறித்தோ அல்லது வெள்ள நிவாரண நிதியைப்பற்றிய அறிவிப்போ எதுவும் இல்லை.
மாறாக, வெள்ள நிவாரண நிதி 11 ஆயிரம் கோடி ரூபாய் என்று ஒதுக்கப்பட்டு இருப்பதும்கூட, சில குறிப்பிட்ட வட மாநிலங்களுக்குத்தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டின் வெள்ளப் பாதிப்புக்கே இதுவரை ஒரு பைசா நிதி கொடுக்காத ஒன்றிய பி.ஜே.பி. அரசு!
தமிழ்நாட்டில் புயல், வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் சார்பில், ஒருமுறை அல்ல, இரண்டு முறை வந்தார்கள். ஒன்றிய அரசின் வெள்ள நிவாரணக் குழுவும் வந்து பார்த்துவிட்டு, பரிந்துரைத்தது. ஒன்றிய அமைச்சர் வந்தார். இதே ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் தூத்துக்குடி போன்ற பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றார்.
ஆனால் கிடைத்தது என்ன? பூஜ்ஜியம் தவிர, வேறொன்று மில்லை என்று சொன்னால், தமிழர்களைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
தமிழ்நாட்டிலிருந்து ஒன்றிய அரசுக்கு வரிப் பணம் கிடைக்கவில்லையா?
ஆகவே, இதையெல்லாம் பார்க்கும்பொழுது நிச்சயமாக நீர் உரிமையாக இருந்தாலும், நிதிப் பங்கீடு உரிமையாக இருந்தாலும், உரிமைகள் சலுகைகள் அல்ல, பிச்சையல்ல – நம்முடைய உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில், ஒரு நிரந்தரத் தீர்வை உருவாக்கவேண்டும் என்பதை நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் முடிவுகளுக்கேற்ப, தமிழ்நாட்டில் ஒரு பெரிய அளவிற்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி – அது போராட்டக் களமாக இருந்தாலும் அல்லது செயல்திட்டமாக இருந்தாலும், அதை உருவாக்கவேண்டும் என்று அன்போடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அதேபோன்று, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கட்சி வேறுபாடில்லாமல், இந்தப் பிரச்சினையில், தமிழ் நாட்டினுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் வலியுறுத்துகிறேன்.
அதற்கான போராட்டத்தினை, அதற்கான தேவைகளை நம்மீது திணித்திருக்கிறார்கள். பிரிவினைவாதம் என்று இதுவரையில் மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.
இந்தியா கூட்டணியைக் கண்டு மிரளும்
ஒன்றிய பி.ஜே.பி. அரசு!
இந்தியா கூட்டணியைக் கண்டு, இந்தக் கூட்டணி இன்னும் ஒன்றாக இருக்கிறதே என்று அதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள். தமிழ்நாடு அதில் முன்னணியில் இருக்கிறதே என்பதைக் கண்டு அச்சப்பட்டு, அவர்கள் முழுக்க முழுக்க இப்படி வஞ்சனைமூலமாக பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, வஞ்சிக்கப்படுகின்ற தமிழ்நாட்டிற்கு வாழ்வளிக்க, நம்முடைய உரிமைப் போர் முழக்கம் வரவேண்டிய நேரத்தில், தாராளமாக வரும்.
எந்த வடிவில் முடிவு செய்வோம் என்பதை நிச்சய மாக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து முடிவெடுப்போம்.
தமிழ்நாடு முழுக்க அந்த இயக்கம் விரைவில் தொடங்கப்படவேண்டும்; தொடங்கும்!‘‘
மின் கட்டண உயர்வும் – இன்றைய அவசர அவசிய இதயத் துடிப்புப் பிரச்சினையும்!
செய்தியாளர்: தி.மு.க. அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: ‘‘இவையெல்லாம் சின்னச் சின்ன பிரச்சினை.
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற இந்தக் கால கட்டத்தில், இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளைப்பற்றி பேசி திசை திருப்பவேண்டாம். அதற்காகப் போராட்டங்களை யாரும் நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால், இன்றைக்கு நாம் எதற்காகப் போராடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பெரிய கேடு எது என்பதுதான் மிகவும் முக்கியம்.
உயிருக்கான ஆபத்து இருக்கும்பொழுது, முதலில் உயிர் காப்பாற்றப்படவேண்டும். பிறகு, தலைவலியை சரி செய்வதா? கால் வலியை சரி செய்வதா? என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
முதலில் இதயம் சரியாக இருக் கிறதா? என்று பார்க்கவேண்டும்.’’
அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு வேண்டுகோள்!
‘‘ஆகவே, இப்பொழுது இதய துடிப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த இதயத் துடிப்புப் பிரச்சினையை ஒத்திப் போடுவது நல்லதல்ல; உடனடியாக அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
எனவே, உங்கள்மூலமாக எல்லா கட்சிகளுக்கும் நாங்கள் வைக்கின்ற வேண்டுகோள் அரசியலுக்கு அப்பாற்பட்டு. ஓர் வேண்டுகோள் – வஞ்சிக்கப்படுகின்ற தமிழ்நாட்டின் உரிமைகள் காப்பாற்றப்படவேண்டும்.
இன்றைக்கு இந்தக் கட்சி ஆளலாம்; நாளைக்கு இன்னொரு கட்சி ஆளலாம்.
ஆனால், உரிமை என்பது நிரந்தர மானது; உரிமை என்பது உறவைத் தாண்டியது.’’
நாம் உடனடியாக செய்யவேண்டியது என்ன?
ஆகவேதான், அதற்கு முன்னணி யாக வேண்டியது செய்யவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. எனவே, அதுதான் இப்பொழுது, இந்தத் தருணத்திலிருந்து நாம் உடனடியாகச் செய்யவேண்டியதாகும்.
நீர்ப் பங்கீடு, நிதிப் பங்கீடு எல் லாமே அதில் அடங்கும்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.