முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 22- ஒன்றிய நிதி நிலை அறிக்கை நாளை (23.7.2024) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டுமக்களின் எதிர்பார்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றுமென நம்புவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கையில்
* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி
* தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்
* பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு
* கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்
* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு
* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்
உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.