புதுடில்லி, ஜூலை 22 கடந்த மே 5 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ளன.இதையடுத்து தேர்வு மய்யங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதன்படி 19.7.2024 அன்று மய்யங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
குறிப்பிட்ட ஒரு தேர்வு மய்யத்தில் மட்டும்…
ராஜஸ்தானின் சிகர் நகரில் அமைக்கப்பட்ட தேர்வு மய்யங்களில் சுமார் 27,000 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதில் குறிப்பிட்ட ஒரு தேர்வு மய்யத்தில் மட்டும் 75 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். சிகர் நகர தேர்வு மய்யங்களில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
குஜராத்தின் ராஜ்கோட் நகர தேர்வு மய்யங்களில் நீட் தேர்வு எழுதியவர்களில் 22,701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 12 பேர் 700-க்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 259 பேர் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத், கேரளாவின் கோட்டயம் நகர தேர்வு மய்யங்கள், அரியானாவின் பஹதுர்கர் நகரின் ஹர்தயால் பப்ளிக் பள்ளி தேர்வு மய்யம் ஆகியவற்றின் முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளன என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.