“விஸ்வகர்மா” என்ற பெயரில் குலக்கல்வித் திட்டமா?

Viduthalai
5 Min Read

அரசியல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 2023-2024 நிதியாண்டு முதல் 2027-2028 நிதியாண்டு வரை அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் புதிய திட்டமான “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு – சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதையும் வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளவில் மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5% சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு கருவிகளுக்கு ஊக்கத் தொகை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத் தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும்.

இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும்  பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின்கீழ் பின்வரும் பதினெட்டு பாரம்பரைத் தொழில்கள் முதலில் இடம் பெறும் 

(i)தச்சர் (சுதார்)

(ii)படகு தயாரிப்பாளர்

(iii) கவசம் தயாரிப்பவர்

(iv) கொல்லர் (லோஹர்)

(v)  சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்

(vi) பூட்டு தயாரிப்பவர்

(vii) பொற்கொல்லர் (சோனார்)

(viii) குயவர் (கும்ஹார்)

(ix)  சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்

(x) காலணி தைப்பவர் (சார்மர்) காலணி தொழிலாளி காலணிக் கைவினைஞர்

(xi) கொத்தனார் (ராஜமிஸ்திரி)

(xii)  கூடை /பாய் / துடைப்பம் தயாரிப்பவர்/ கயிறு நெசவாளர்

(xiii)பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்) 

(xiv) முடி திருத்தும் தொழிலாளர் (நயி)

(xv)  பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்)

(xvi) சலவைத் தொழிலாளி (டோபி) 

(xvii)  தையல்காரர் (டார்ஸி) மற்றும்

(xviii)  மீன்பிடி வலை தயாரிப்பவர்

இதைப் படிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். கூறும் ஹிந்து ராஜ்யம் என்பதன் அடிப்படை வருணாசிரம தர்மம். வருணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையிலானது. பரம்பரைப் பரம்பரையாக செய்து வரும் ஜாதித் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான். பாரம்பரியம், குரு – சிஷ்யபரம்பரைத் தொழில் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் கவனிக்கவும்.

பிஜேபியின் விஸ்வ கர்மா திட்டத்தின் மூலம் பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது. கருமாதி செய்யும் பார்ப்பனர்கள் ஏன் இந்தப் பட்டியலில் வரவில்லை? பாரம்பரிய தொழில்கள் பரம்பரைத் தொழில்கள் என்றால் இவற்றின் பொருள் என்ன?

1952இல் சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் தொழிற் கல்வி என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதன் தன்மையை உண்மையாக உணர்ந்து கொண்ட தந்தை பெரியார் தொழிற் கல்வியல்ல – குலக் கல்வி என்று முகத்திரையைக் கிழித்துக் காட்டினார்.

தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது; ஆச்சாரியார் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து  விட்டு ஓட்டம் பிடித்தார்.

பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் மீண்டும் அது நடக்கும்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்கக் கூடாது. குலத் தொழிலை அதாவது அப்பன் தொழிலை – பரம்பரைத் தொழிலை செய்ய வேண்டும் என்ற ஒன்றிய பிஜேபி ஹிந்துராஷ்டிர ஆட்சியின் வருணாசிரமக் கொள்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

விசுவகர்மா என்று பெயர் சூட்டப்பட்டு இருப்பதில்கூட ஹிந்துத்துவா – புராண மவுடிகம் உள்ளே புகுந்திருக்கிறது.

அபிதான சிந்தாமணி (பக்கம் 1732) என்ன கூறுகிறது?

விசுவகர்மா – 1. வாஸ்து என்னும் மநு விற்குஅங்கிரசியிடம் உதித்த குமாரன். இவன் குமாரன் சாக்ஷு சமநு.

2. பிரபாசனுக்கு யோக சித்தியிடம் உதித்த குமாரன். இவன் தேவதச்சன். சூரியன் ஒரு காலத்துத் தன் தேவி இவனிடம் இருப்பதறிந்து தேடிவர இவன் சூரியவொளியைச் சாணையிற் கடைந்து பரசு பாசம் அங்குச முதலியவைகளை விநாயக மூர்த்திக்கு நிருமித் துக் கொடுத்து அருள்பெற்றவன். இவன் கண்ணில் மாதவவூரன் பிறந்தனன். இவனுக்கு இரமையெனும் தேவியிடம் விருத்திராசுரன் பிறந்தான். இவன் ஒருநாள் காமனிடஞ் செல்லும் கிருதாசியென்னும் தேவதாசியைக் கண்டு மோகித்தழைக்க இவள் இன்றைக்கு மதனனிடஞ்சென்று மற்றொரு நாளில் உனதெண்ணத்தை நிறைவேற்றுகிறேனென்று சொல்லி மறுத்ததால்

விச்வகர்மன் கோபித்து ‘நீ பூமியில் சூத்திர யோனியில் பிறக்க’ என்று சபித்தனன். இச்சாபமேற்றவள் பிரயாக நகரத்தில் கோபகன் தேவியிடம் பிறந்து தபஸ்வியாய்ப் பின் விச்வகர்மன் வீர்யத்தால் ஒன்பது புத்திரர்களைப் பெற் றுப் பின்சுவர்க்க மடைந்தனள். இச்சாபமேற்ற கிருதாசியும் விச்வகர்மனைச் சூத்திரயோனியிற் பிறக்கச் சாபமிட்ட னள். இச்சாபத்தால் விச்வ கர்மன் பூமியில் ஒரு பிராமணன் தேவியிடம் பிறந்து சில்பியாய் அரசர்க்கு மாடமாளிகை நிருமித்து வந்தான். இவன் ஒரு நாள் கங்காதீரத்திற்குச் சென்று ஆண்டு தவத்தியாயிருந்த கிருதாசியைக் கூடிப் பன்னிரண்டு வருஷ மிருந்து அவளிடம், மாலைக்காரன், கருமான் கொல்லன், சங்கறுப்போன், குவிந்தன், குயவன், சூத்திரகாரன், தட்டான், சித்திரகாரன், முதலிய வர்களைப் பிறப்பித்தனன். (பிரம்மகைவர்த்தம்). பிரபாசனுக்கு யோகசித்தியிடம் உதித்த குமாரன். மயனுக்குப் பிதா. வாஸ்து என்னும் வசுவிற்கு அங்கிரசியிடம் உதித்தவன் என்பர். மாலி, மாலியவான், சுமாலி இவர்களுக்குத் திரிகூடா சலத்தைப் பட்டணமாக நிருமித்தளித்தவன். இந்திரன் ஏவலால் பாண்டவருக்கு இந்திரப்பிரத்தம் நிருமித்தவன். தேவர் முதலியவர்க்குச் சிவலிங்கம் நிருமித்தளித்தவன். ஸ்ரீகிருஷ்ணமூர்த்திக் குக் கால யவன சராசந்தயுத்த காலத்து மேற்குக் கடலிற் பட்டணம் நிருமித்துத் தந்தவன்.

இதுதான் அபிதான சிந்தாமணியின் விளக்கம். வருணாசிரமம், புராண ஆபாச மூடத்தனமும் பிரதமரின் திட்டத்தில் புதைந்து கிடக்கிறது – காரணம் – பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் என்றாலே பார்ப்பனீயத்தின் ஆபாச – அழுக்குக் குட்டைதானே!

விஸ்வகர்மா திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்ற ஜாதிகள் எல்லாம் கள்ளக் காதலில் பிறந்தவர்களாம்!

இந்த 2023லும் இந்தக் கேவலமா? ஆபாசமா? இழிவுபடுத்தும் இழி குணமா? சிந்திப்பீர்!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *