சென்னை ஜூலை 21 நிகழ் கல்வியாண்டில் ரூ. 264.10 கோடியில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ராஜ கண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் 20.7.2024 அன்று தொடங்கி வைத்தனா்.
விழாவில் அமைச்சா் மா.சுப்பிர மணியன் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 லட்சத்து 47,676 மாணவா்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.
சைதாப்பேட்டை தொகுதியில் 2017 முதல் 7ஆண்டுகளில் ‘பசுமை சைதை’ திட்டத்தின் படி இதுவரை 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளியில் பிறந்தநாள் காணும் ஒவ்வொரு மாணவிகளும் பிறந்தநாளன்று மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
சைதாப்பேட்டையில் வாழைத் தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மிக விரைவில் திறக்கப்படவுள்ளன. காலம் காலமாக இருந்து வருகிற வாழைத்தோப்பு என்ற பகுதியின் பாரம்பரியப் பெயா் மாறாமல் இருப்பதற்கு அங்குள்ள திறந்தவெளி நிலத்தில் வாழை மரங்களை நட்டு அதில் கிடைக்கிற பலனை அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் நல சங்கத்துக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.
அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண் ணப்பன்: மாணவா்களுக்கு மிதி வண்டிகள் வழங்கும்போது சில குறைகள் இருப்பதாக சிலா் தெரிவிக்கின்றனா். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே மிதிவண்டிகளை கொள்முதல் செய்கிறோம். அந்த வகையில் அய்ந்து ஆண்டுகளுக்கு அந்த மிதிவண்டிகளை யாரும் குறை செல்லாத அளவுக்குதான் தரத்துடன் வாங்கப்படுகின்றன. இந்த ஆட்சியில் ஒடுக்கப்பட்டவா்கள், பிற்படுத்தப்பட்டோா் என அனைத்து மக்களும் வளா்ச்சி கண்டுள்ளனா் என்றாா் அவா்.
இதில் பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறு பான்மையினா் நலத்துறை முதன்மைச் செயலா் சா.விஜயராஜ்குமாா், ஆணையா் தி.ந.வெங்கடேஷ், சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே, பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 படிக்கும் 5.4 லட்சம் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்
Leave a Comment