*மின்சாரம்
‘‘நந்தி மலை விட்டு இறங்கி, அங்குள்ள முத்துக்கள், சந்தனம், அகில் ஆகியவற்றுடன் மணிகளை தாமரைக் குளங்களில் நிறைக்குமாறு ஓடி வருவது பாலாறு.
ஓங்கி உயர்ந்த செந்நெல்லின் அருகில் உயர்ந்த கழைக் கரும்புகள். அக்கரும்புகள் அருகே நெருங்கிய பாக்கு மரங்கள் அப்பாக்கு மரங்கள் அருகே நீண்ட நீண்ட குலைகளுடன் தென்னை மரங்கள் மற்றும் பலா மரங்கள், பாரிய வாழை மரங்கள், இனிய தீங்கனி மரங்கள் இத்தனையும் பொருந்தியது. நீண்ட வேலியுடைய சோலை’’ என்று பாலாற்றைப் பற்றி பழைய இலக்கியங்கள் வாய் மணக்கப்பாடுகின்றன. அன்றைய பாலாறு இன்றைக்கு பாழாறாகி விட்டது.
காவிரிக்கும் அந்த நிலை ஏற்பட்டு விடுமோ என்று நம் நாட்டு மக்களின் நெஞ்சக்குலைகள் எல்லாம் நடுங்குகின்றன.
உலகில் ஒரே நதி பல நாடுகளுக்குமிடையே ஓடி விளையாடுவதுண்டு. பல மாநிலங்களுக்கு இடையே ஒரே நதி புகுந்து புறப்படுவதுமுண்டு.
டன்யூப் நதி – அய்ரோப்பாவின் பல நாடுகளிலும் பாய்ந்தோடுகிறது. செயின்ட் லாரன்ஸ் நதி கனடாவில் பிறப்பெடுத்து அமெரிக்க அய்க்கிய நாட்டின் மண்ணில் எல்லாம் ஆராதிக்கிறது.
சூடானில் பிறந்த நைல்நதி எகிப்திடம் தஞ்சம் அடையவில்லையா?
ஏன் வெளி நாடுகளுக்கு ஓட வேண்டும்?
இந்தியத் துணைக் கண்டத்தையே எடுத்துக் கொள்ளலாமே!
இந்தியாவில் பயணத்தைத் தொடங்கிய சிந்துநதி வங்காள தேசத்தில் நுரை தள்ளி, மீண்டும் புகுந்த வீடான இந்தியாவிற்குள்ளேயே தவழ்ந்து கடலில் சங்கமம் ஆகவில்லையா?
அங்கெல்லாம் ஏற்படாத நதி நீர் சிக்கல் கருநாடகம் – தமிழ்நாடு – கேரளம் – தமிழ்நாடு என்ற மாநிலங்களில் மட்டும் ‘மல்யுத்தம்’ நடப்பது ஏன்? ஏன்?
இந்திய தேசியம் பேசுகிறவர்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!
மழை பெருக்கெடுத்து அணை உடையும் அபாயக் கட்டத்தில் மட்டும் தண்ணீரைத் திறந்துவிட தமிழ்நாடு என்ன வடிகால் பூமியா?
உரத்த குரலில் நியாயம் கேட்டால் ‘அய்யயோ பிரிவினைவாதிகள்‘‘ என்று பிலாக்கணம் பாடலாமா?
ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பிரச்சினைக்கே மாரடித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்த நிலையில் தான் முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவரின் நியாயமான வேண்டுகோளை ஏற்று – வாராது வந்த மாமணியாம் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் – மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றத்தை (21.6.1990) அமைத்துக் கொடுத்தது – தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் பாலை வார்த்தது!
நடுவர் மன்றத்தை அமைத்தால் என்ன? நாங்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டோம் என்ற மமதைக் குணம்தான் கருநாடகத்துக்கு – எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்.
மக்களிடத்திலே இத்தகைய ஓர் அரசியல் வெறியைக் கொம்பு தீட்டி வைத்துள்ளனர்.
1924ஆம் ஆண்டு மைசூர் அரசும், அன்றைய சென்னை இராசதானியும் செய்து கொண்ட ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது. 50 ஆண்டுகள் முடிந்ததால், அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதாகக் கதை விட்டார்கள்.
உண்மை என்ன தெரியுமா? உபரி நீரைப் பகிர்ந்து கொள்வது பற்றியதுதான் அந்த அய்ம்பதாண்டு ஒப்பந்தமே தவிர, காவிரி நீர்ப் பகிர்வு குறித்ததல்ல!
காவிரி நடுவர் மன்றம் சொன்னாலும் சரி – ஏன் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டாலும் சரி ‘உனக்கும் பெப்பே – உன் அப்பனுக்கும் பெப்பே!‘ என்று முட்டிக் காட்டுவதுதான் கருநாடகத்தின் கல்மலை போன்ற நிலைப்பாடு!
காவிரி நீர்ப் பாசன விவசாய நிலத்தின் அளவை 1,120,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்பதும் தீர்ப்பாயத்தின் உத்தரவு.
இது செல்லாது என்று கருநாடக மாநில அரசு ஓர் அவசர சட்டத்தையும் பிறப்பித்தது. உச்சநீதிமன்றம் இந்த அவசர சட்டத்தை ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர்கள் விரட்டப்பட்டனர் – ஏன் கொல்லவும்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
சட்டரீதியான – உலகியலை ஒட்டி, நடைமுறையில் உள்ள உரிமைக்காக தமிழ்நாடும், தமிழர்களும் இன்னும் என்னென்ன விலைகளைத் தான் கொடுக்க வேண்டுமோ என்று தெரியவில்லை.
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் காவிரி நீர் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள் ளது – போராட்டங்களையும், ஆர்ப் பாட்டங்களையும், பேரணிகளையும் தொடர்ப் பிரச்சாரப் பணிகளையும் அடைமழையெனப் பெய்து வந்திருக்கிறது.
இவற்றின் தொடர்ச்சியாகத்தான் வரும் 23.7.2024 செவ்வாய் மாலை தஞ்சாவூரில் அனைத்துக் கட்சிகளும் பங்கு ஏற்கும் காவிரி நீர் உரிமைக் கோரும் ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம் முன்னின்று நடத்த உள்ளது.
உண்மையைச் சொல்லப் போனால், இது தமிழ்நாட்டின் உரிமைப் போராட்டம் என்றுகூட சுருக்கிட முடியாது.
மனித உரிமைக்கான போாரட்டம், நாட்டின் சட்ட நிலையைச் சரியாமல் நிலை நிறுத்தும் போராட்டம்!
இன்றைய ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. யாருக்கோ வந்த பிரச்சினை என்று குரங்குப் பொம்மை மாதிரி கண்களை மூடிக் கொண்டும், காதுகளைப் பொத்திக் கொண்டும் கண்ணாம்பூச்சி விளையாட்டுக்காட்டுகிறது.
காங்கிரசுக்கும் – திமுகவுக்குமிடையிலான சண்டைதானே என்று ‘பலே, பலே!‘ என்று ஜோராகக் கை தட்டுகிறது.
இவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? உரிமைகளை மீட்டெடுக்க வேண்டாமா?
அணை உடைபட்டதுபோல் தஞ்சை மக்கள் கடலாகட்டும்! வானிடிந்து விழுந்ததுபோல நமது உரிமை முழக்கங்கள் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!! வாரீர்! வாரீர்!! ஒலிக்கட்டும்!! வாரீர்! வாரீர்!!