கேள்வி 1: ஒரு புல்வாமாவிற்காக தொலைக் காட்சி முதல் திரைப்படம் வரை அழுது தொலைத்த மோடி, மூன்றாவது முறை ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 11 தாக்குதல்கள் – 15ந்திற்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளோம் – குறைந்த பட்சம் ஒரு டுவீட் கூட போடாதது ஏன்?
– கு.செங்குட்டுவன், நாமக்கல்
பதில் 1: உங்களுக்கு மறந்துவிட்டதா? நினைவில்லையா? அப்போது பொதுத் தேர்தலை (2ஆவது தடவையாக 2019இல்) எதிர் கொள்ள வேண்டிய நிலையில், இது தேர்தல் வெற்றிக்கான ஆயுதமாகி, களம் காண முயன்றார் பிரதமர் மோடி. இப்போதுதான் தேர்தல் முடிந்துவிட்டதே.
இடைத் தேர்தல்கள்தான் 13 இடங்களில் 7 மாநிலங்களில் நடந்து முடிந்துவிட்டதே!
அப்புறமும் இவை போன்றவை தேவைப் படாது அல்லவா?
– – – – –
கேள்வி 2: யு.பி.எஸ்.சி. தேர்வில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து அய்.ஏ.எஸ். ஆனவர்கள் பட்டியல் நீளுகிறதே. போலிச் சான்றிதழ் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கா அய்.ஏ.எஸ். தேர்வு நடத்துபவர்கள் இருக்கிறார்கள்?
– ம.சந்திரசேகர், திருத்தணி
பதில் 2: ‘நீட்’ தேர்வில் ஊழலோ ஊழல். உலகம் சிரிக்கிறது! இந்த லட்சணத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வில் கூட இப்படி ஒரு நிலையா? மகாமகா வெட்கக் கேடு!
‘தகுதி, திறமை’ பேசும் கிளிப்பிள்ளைகள் ஆட்சிகளின் யோக்கியதை இதுதான்! ஊழல் வெளிச்சம் கண் கூசுகிறது!
– – – – –
கேள்வி 3: சாமியார் தொடர்ந்து முதலமைச் சராக இருப்பாரா? இருக்க மாட்டாரா?
– தே.வீராசாமி, மதுரை
பதில் 3: எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தயவு – அநேகமாக மாற்றம் வரக்கூடும்!
“ஆண்டது போதும், மக்கள் மாண்டது போதும், அடைந்த துயரங்கள் போதும்” என்று மக்கள் கோரும் நிலை வரு முன்னரே அவர் விலகுவது நல்லது!
– – – – –
கேள்வி 4: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க ஒரு முக்கிய கட்சியே களத்தில் இறங்கி உள்ளதை – அக்கட்சிப் பிரமுகர்களின் சமீபத்திய தொடர் கைதுகள் கூறுகிறதே?
– மா.இந்திரஜித், திருநெல்வேலி
பதில் 4: ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் (திராவிட ஆட்சி – ஸ்டாலின் ஆட்சி) மறைவதில்லை’ என்று உலகுக்கே தெரியும்; 40க்கு 40 வெற்றியையும் + விக்கிரவாண்டி வெற்றியையும் செரிமானம் செய்ய முடியாது எதிரிகளால்!
– – – – –
கேள்வி 5: வடமாநிலங்களில் அடிக்கடி இரயில் விபத்து (இப்போது கூட – 18.7.2024 அன்று உ.பி.யின் ‘கோண்டா’வில்). மோடி ஆட்சியில் எவ்வித எச்சரிக்கையும் இல்லை – எவ்வித விளக்கமும் இல்லை. என்னதான் நடக்கிறது இரயில்வே துறையில்?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 5: இந்த லட்சணத்தில், லாபத்தைப் பெருக்கிய வரலாறு படைத்த இரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் அவர்கள் இருந்தபோது அவரை கேலி பேசியவர்கள் தான் இவர்கள்?
இப்போது இரயில்களுக்கு சுதந்திரம் போலும். மேலும் தண்டவாளத்திலிருந்து இறங்கும் சுதந்திரம் பெருகியவண்ணம் உள்ளது. இப்படி பெருகிவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். வேதனை! வேதனை!!
– – – – –
கேள்வி 6: ஒரு பக்கம் காலை உணவுத் திட்டம் புதிய கல்விக் கொள்கையின்படி என்று கூறும் தாமரைக் கட்சிப் பிரமுகர்கள் மறுபுறம் இது தமிழ்நாடு அரசின் நிதிச் சுமையை அதிகரிக்கிறது. அதற்காகத்தான் மின் கட்டணம் உள்ளிட்டவை உயர்வு என்று சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புகிறார்களே?
– வா.விசுவநாதன், வேளச்சேரி
பதில் 6: எதையும் தாங்கும் இதயம் படைத்த ஆட்சி இது! “முகிலைக் கிழித்த முழு மதியாய்” வெளிவரும் என்பது உறுதி!
– – – – –
கேள்வி 7: 2017ஆம் ஆண்டு மோடி பட்டதாரிகளை பக்கோடா விற்கச் சொன்னார். இன்று மத்தியப் பிரதேச மாநில தொழில் முதலீட்டு நிர்வாகக் குழு உறுப்பினரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான ஒருவர் பட்டதாரிகள் மிதிவண்டிக்குப் பஞ்சர் ஒட்டினால் கூட அதிக வருவாய் வரும் என்று கூறியுள்ளாரே?
– கோ.முல்லைவேந்தன், தருமபுரி
பதில் 7: ‘டபுள் எஞ்சின் ஆட்சிகளின் பஞ்சரை’ இதன் மூலம் புரிந்துகொள்ளலாமே!
– – – – –
கேள்வி 8: ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தாததால் கல்வி தொடர்பான நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தராமல் நிறுத்தி உள்ளதே?
– தே.காளிமுத்து, திண்டிவனம்
பதில் 8: தவறு, கல்விக்கான நிதி ஒன்றும் நிபந்தனைக்குட்பட்ட நிதி அல்லவே! – ‘Not a Conditional Grant’ – மக்கள் போராட்டம் வெடிக்கும் ஆபத்தைத் திட்டமிட்டே உருவாக்குகிறார்கள்.
– – – – –
கேள்வி 9: பிறந்தால் செத்துத்தானே ஆகவேண்டும் என்று ‘ஹத்ராஸ்’ படுகொலைகளுக்குக் காரணமான சாமியார் பாபா கூறியுள்ளாரே? இன்று வரை அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை?
– வே.தருமபுத்திரன், மதுராந்தகம்
பதில் 9: நடவடிக்கை எடுத்திருந்தால் அதை அவர் உணர்ந்திருப்பார். ‘ஊசி மிளகாய்’ (19.7.2024) கட்டுரையைப் படியுங்கள்.
– – – – –
கேள்வி 10: முதல் முதலாக என்.அய்.டி.யில் படிக்கச் செல்லும் பழங்குடியின மாணவிகள் எவ்வித தடைகளுமின்றி கல்வி கற்று முடிக்கும் வரை தமிழ்நாடு அரசு ‘மானிட்டரிங்’ செய்ய வேண்டும் என்று பழங்குடி அமைப்பு கூறியுள்ளதே? அப்படி அவர்களுக்கு அச்சுறுத்தல் தரும் சக்திகள் இன்றுமா தமிழ்நாட்டில் உள்ளன?
– பொ.இளங்கோ, வியாசர்பாடி
பதில் 10: அதுதான் வெளிப்படை; “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?”