-தந்தை பெரியார்
இந்திய நாட்டில் இது சமயம் தேச விடுதலையின் பேரால் ஒரு குழப்பம் ஏற்பட்டு, அதனால் எங்கு பார்த்தாலும் கலவரமும், அடிதடியும், சிறைவாசமும், உயிர்ச்சேதமும் நடந்து வருவதாக தெரிகின்றது.
பொது மக்களுக்குள்ளாகவும் பலருக்கு ஒருவித உணர்ச்சி தோன்றி இக்குழப்பத்தில் கலந்து கொள்ள வேண்டியது பெரிய தேசாபிமானம் என்றும், இதனால் தங்களுக்கு பிற்காலத்தில் ஏதோ ஒரு பெரிய லாபமும், கீர்த்தியும் எற்படும் என்றும் கருதப்பட்டு வருகின்றது.
இந்த நிலைக்கு பொதுவாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் சென்ற வருசம் செங்கல்பட்டு முதலாவது சுயமரியாதை மகாநாட்டில் சொன்னது போல், அதாவது “மக்கள் மத விசயத்தில் பெரிதும் மூடநம்பிக்கையில் ஆழ்த்தப்பட்டிப்பதால் அதுபோலவே அரசியலிலும் ஆராய்ச்சியில்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் கண் மூடித்தனமாய் நடந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்” என்று சொன்னதும் மற்றும் சமீபத்தில் சிறீமதி பெசண்டம்மையும் “இந்தியர்களுக்குள் இருந்து வரும் மூடநம்பிக்கையின் பலனே இக்குழப்பத்திற்கு காரணமாயிருக்கிறது” என்று சொன்னதும் மிகவும் பொருத்தமானதாகும்.
ஏனெனில், இந்தியர்களில் அதாவது இப்போதைய குழப்பத்தில் கலந்து கொண்டிருக்கும் மக்களிலும் இக்குழப்பத்தை ஆதரிக்கும் மக்களிலும் 1000க்கும் ஒன்று இரண்டு பேருக்காவது இப்போது நடைபெற்று வரும் குழப்பத்திற்கு ஆஸ்பதமான தேசியத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதற்காகவென்று செய்யப்படும் உப்புக் காய்ச்சுவதைப் பற்றியோ ஏதாவது தெரியுமா என்று கவனித்துப் பார்த்தால் அதாவது எப்படி பார்ப்பனர்கள் மோட்சம் என்றும், சொர்க்கம் என்றும், பாவ விமோசனமென்றும் சொல்லுவதை நம்பி அதற்காக அவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் கேட்டு கண்மூடித்தனமாய் நடப்பதும், கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களை செலவு செய்வதுமான காரியத்தில் மக்கள் நாசமடைவதும் சகஜமாயிருக்கிறதோ அதே போல் “தேசபக்தி”, “தேசிய விடுதலை” என்கின்ற பேரால் மக்கள் பாழாகின்றார்கள் என்பது தெரியவரும்.
அன்றியும், யாராவது இம்மூடக் காரியங்களை வெளியாக்கி தடுத்துச் சொன்னால் எப்படி மத விசயத்தில் கண்மூடித்தனமாய் நடப்பதை எடுத்துச் சொல்லகின்றவர்கள் நாஸ்திகர்களென்று குற்றம் சாற்றப்படுகிறார்களோ அதேபோல் தேசிய விசயத்தில் உள்ள மூடநம்பிக்கையை எடுத்துக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டப்படுகின்றார்கள்.
ஆகவே, இவற்றிற்கு முக்கியக் காரணம் மேல் சொல்லப்பட்டது போல் நமது மக்களின் மூடநம்பிக்கையும், குருட்டு பக்தியுமேயாகும்.
பார்ப்பனர்களுக்கு கொடுப்பதற்கும் மோட்சத்திற்கும் எப்படி சம்பந்தமிருக்கக் கூடும்? என்கின்ற விசயத்தை ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானானால் உப்புக் காய்ச்சுவதற்கும் தேச விடுதலைக்கும் எப்படி சம்பந்தமிருக்கக்கூடும் என்பதும் மோட்சம், சொர்க்கம் என்பது என்ன என்று அதன் புரட்டுகளை சற்று யோசித்து பார்ப்பார்களேயானால் அவருக்கு தேசியம், சுயராஜ்ஜியம் என்பதின் புரட்டுகள் என்ன என்பதும் சுலபத்தில் விளங்கிவிடும்.
– ‘குடிஅரசு’ – 4.5.1930 – துணைத் தலையங்கம், தொகுதி 10, பக்கம் 123.
தகவல்: க.பழநிசாமி