குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்று கூறி ஏழைகளிடமிருந்து அபகரித்தது : ரூ. 21,044 கோடி

Viduthalai
3 Min Read

2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இரண்டு முட்டுக்கொடுக்கும் கட்சிகளின் துணையோடு 3ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த மோடி. பழைய படியே அதே அமைச்சரவையை அமைத்துள்ளார்.
முக்கிய அமைச்சர்கள் அப்படியே அதே துறையில் உள்ளனர். இதில் முக்கியமானவர் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
குறிப்பிட்ட வகுப்பாருக்கு சொத்து சுகம் தேவையில்லை. அவர்கள் உடல் உழைப்பாளிகள். அவர்களது உடைமைகளைப் பிடுங்கிக்கொள்ளலாம் என்ற மனுநீதிக் கொள்கையை நிதி அமைச்சர் கடைப்பிடிக்கிறாரோ என்னவோ? நிதி அமைச்சர் தன்னுடைய நிதி நிலை அறிக்கையில் கணக்கு காட்டுவது அனைத்தும் சாமானியர்களின் பணம் என்பதை நாம் அறிவோமா?
ஏழைகளிடமிருந்து பிடுங்கி செல்வந்தர்களுக்கு கொடுக்கும் வித்தியாசமான ராபின் ஹுட் இந்திய நிதி அமைச்சர்.
21,044 கோடி குறைந்த பட்ச இருப்புத்தொகை வங்கியில் இல்லை என்ற பெயரில் ஏழைகளிடமிருந்து எடுத்த தொகை.
சமீபத்திய காலம் வரை முதியவயது பெண்களும் கிராமத்துப் பெண்களும் சுருக்குப்பை வைத்திருப்பார்கள். அதில் குறைந்த பட்சம் 100 ரூபாயும் சில்லரைகளுக்கும் இருக்கும். மிக மிக அவசியமான தேவைகளுக்கு மட்டுமே இவற்றை எடுப்பார்கள். இது போன்ற நடுத்தரவயது ஏழைகளுக்கு அந்த சில ரூபாய் நோட்டுக்களும் சில்லரைகளும் பெரும் தொகையாக தெரியும்.

அதில் சிறு ஓட்டை விழுந்து சில சில்லரைகள் காணாமல் போய்விட்டால் அவர்கள் அடையும் பதற்றமும் கவலையும் சொல்லி மாளாது அதற்கேற்ற தொகையை அவர்களுக்கு கொடுத்தாலும் அய்யோ அந்த பணமும் இருந்தால் என்றுதான் மீண்டும் கவலை கொள்வார்கள்.
அப்படியாகப்பட்ட பெண்களிடமிருந்து நிதி அமைச்சகம் கொள்ளையடித்துள்ளது என்றால் இது எவ்வளவு கொடுமையான ஒன்று.
குறைந்த பட்ச தொகையை ‘மினிமம் பேலஸ்’ பராமரிக்கவில்லை என்று கூறி பொதுத்துறை வங்கிகள் மற்றும் முக்கியமான தனியார் வங்கிகள் 21044 கோடி ரூபாயை பிடுங்கி உள்ளது.
குறைந்த பட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் போடலாம் என்ற விதி மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இரக்கமில்லாமல் ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் கைவைத்தார்கள்.
குறைந்த பட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கும் முறை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.

இப்படி பொதுத்துறை வங்கிகள் மற்றும் அய்ந்து பெரிய தனியார் வங்கிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பொதுமக்களிடம் 35,000 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளன.
அதாவது குறைந்த பட்ச இருப்பை பராமரிக்கவில்லை என்றும் ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்யததற்காகவும் இந்த 35,000 கோடி ரூபாய் கட்டணத்தை வசூலித்துள்ளன வங்கிகள். இந்த 35,000 கோடி ரூபாயும் முழுமையாக மக்களின் சேமிப்பு பணம் ஆகும்.
இது தொடர்பாக நிதி அமைச்சரகம் அளித்த பதிலில், 2018ஆம் ஆண்டு முதல் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் ரூ.21,044 கோடியும், இலவச நம்பர் சர்வீஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். கட்டணங்களாக ரூ.6253 கோடிக்கு மேலும், ஏடிஎம் பரிவர்த்தனைக்காக ரூ.8289 கோடிக்கு மேலும் வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச இருப்புத் தொகை என்பதை பல்வேறு வங்கிகள், பெருநகரங்களில் ரூ. 3,000 முதல் ரூ. 10,000 வரையிலும் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன. நகர்ப்புறங்களில் ரூ. 2,000-ரூ. 5,000 வரையிலும், கிராமப்புறங்களில் ரூ. 500 – வரையிலும் குறைந்த பட்ச மாதாந்திர இருப்பாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளன. அப்படி பராமரிக்காதவர்களுக்கு ரூ.400 முதல் ரூ.500 வரையிலான கட்டணங்கள் விதிக்கப்படலாம். சில தனியார் வங்கிகள் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்காத வங்கி கணக்கிற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.100-125 வரையிலான பணப் பரிவர்த்தனை கட்டணங்களையும் விதிக்கின்றன. இப்படி கட்டணங்கள் விதித்து தான் சுமார் 21044 கோடி ரூபாயை வசூலித்துள்ளன.
ஆக ஏழைகளிடமிருந்து மொத்தமாக கிட்டத்தட்ட ரூ. 35,000 கோடிகளை ஒன்றிய அரசு பிடுங்கி உள்ளது. அதாவது கடைசி மூச்சை விட்டுக்கொண்டு இருக்கும் நோயாளியின் உடலில் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதைப் போன்று ஏழை நடுத்தர மக்களின் உழைப்பை காரணமே இல்லாமல் சுரண்டி உள்ளது.
சரி இந்த 35,000 கோடி ரூபாய்களைக் கொண்டு யாரிடமிருந்து பிடுங்கினார்களோ அவர்களுக்கு ஏதாவது நலத்திட்டங்களை செய்தார்களா என்றால் அதுவும் இல்லை.

வங்கி பரிவர்த்தனையில் தொட்டதற்கு எல்லாம் பணம் பிடுங்குகிறார்கள்.
2015ஆம் ஆண்டு மோடியே ‘ஜன் தன்’ கணக்கு என்ற பெயரில் வலுக்காட்டயமாக அனைவருக்கு வங்கிக்கணக்கை கொடுத்து, 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பை அறிவித்து ஜன் தன் கணக்குகள் மூலம் பல்லாயிரம் கோடிகளை மாற்ற கருப்புப் பண முதலாளிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதன் பிறகு அந்தக்கணக்குகள் பல அப்படியே கைவிடப்பட்டன.
இந்த ஆட்சி அகற்றப்படாவிட்டால் வரும் காலங்களில் வங்கிக்குச் சென்றால் வங்கி வளாகத்தில் சுவாசித்ததற்காகவே ஒரு தொகை வசூலிக்கத் துவங்கி விடுவார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *