வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு காட்டில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார் வேதப்பிரியா.
பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூலை 16 உலக பாம்புகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. பாம்புகளுடன் தொடர்புடைய ஒருவரைப் பற்றி இந்த நாளில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னையை சேர்ந்தவர் வேதப்பிரியா கணேசன். 24 வயது முதுகலை பட்டதாரி மாணவியான இவர், வனப் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடும் தனியார் தொண்டு நிறுவனத்தில் முதன்மை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.
வீடுகளில் நுழையும் பாம்புகளை மீட்டு அவற்றை காட்டில் கொண்டு சென்று விடும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். இதுவரை தனது குழுவுடன் சேர்ந்து 6000-க்கும் மேற்பட்ட பாம்புகளை இவர் மீட்பதற்கு உதவியதாகக் கூறுகிறார் இவர்.